Friday, August 3, 2007

‘சஜி’யுட மரணம்…

சஜி டேனியல் என் நீண்டநாள் நண்பன். மனைவி, ஒரு பெண் குழந்தை (வயது8), மற்றும் புன்னகையோடும் வாழ்ந்து கொண்டிருந்தவன். இனிமையானவன்.உருப்படியான நகைச்சுவைகளை உதிர்ப்பவன். நேர்த்தியாக உடை உடுப்பான். அவன் மகளோடு விளையாடுவதை பார்த்தால் இரண்டு குழந்தைகள் விளையாடுவது போல் இருக்கும். இவன் வெளியே கிளம்பினால் அந்தக் குழந்தை வீட்டை ரணகளமாக்கிவிடுவாள். முதலில் நாங்கள் வெளியே சென்று சற்றுத்தொலைவில் காத்திருக்க வேண்டும். இவன் பின்பக்கமாக சென்று வெளியேறி, எங்களோடு சேர்ந்து கொள்வான். மோட்டார் சைக்கிளில் நெடும்பயணத்தை மிகவும் விரும்புபவன். ஒரு முறை...அப்போது அவனுக்கு திருமணமாகவில்லை.. தெருமுனையில் உடன் பேசிக்கொண்டிருந்த நண்பர்களை உசுப்பேத்தி அப்படியே, போட்டிருந்த ஒரே உடையோடு மோட்டார் சைக்கிளில் மூணாறு வரை அழைத்துச் சென்றுவந்தவன். உணவு விடுதி,bar எங்கு சென்றாலும் முதலில் அவன் செய்யும் காரியம்..சப்ளை செய்பவரின் பெயரை கேட்டுத் தெரிந்துகொள்வது. அடுத்தமுறை அழைக்கும்போது அவர்களை பெயர் சொல்லியே அழைப்பான். அவனுக்கு தெரிந்தவர்கள் சென்னையின் எந்த மூலையிலும் இருப்பார்கள். தியேட்டர், ஷாப்பிங் மால் எங்கு சென்றாலும், அந்த கூட்டத்திலும் இரண்டு பேர் இவனை கண்டுபிடித்து பேசத் துவங்கிவிடுவார்கள். நாங்கள் எரிச்சலோடு காத்திருப்போம். சில சமயங்களில் ஜீன்ஸ் அணிந்த பெண்களோடு பேசிக்கொண்டிருப்பான். அப்போது நாங்கள் மகிழ்ச்சியோடு காத்திருப்போம். அவனோடு பேசும் நபர்கள் எந்தச் சமூக,பொருளாதார பின்ணனியிலும் இருப்பார்கள். ஒரு முறை நுங்கம்பாக்கம் சுடுகாட்டில் பிணம் எரிக்கும் அந்த இளைஞன் இவனைப் பார்த்து "என்னா மச்சி இங்க..?" என்று கேட்டதை பார்த்திருக்கிறேன். ஆங்கில திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பான். அவனுக்கு மிகவும் பிடித்த John Denver-ன் பாடல்களை இனிமையாக பாடுவான் அந்த இனிமையானவன்.

மஸ்கட்டில் சிலவருடங்கள் இருந்தபோது திடீரென அவன் உடல்நிலை மோசமாகி,வீல் சேரில் சென்னை கொண்டுவரப்பட்டான்.Food poison-என்று மஸ்கட்டில் சொல்லியிருக்கிறார்கள். சென்னை கொண்டுவரப்பட்ட சிலமணி நேரங்களிலேயே அது சிறுநீரக கோளாறு என்றும்,இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்துவிட்டதாகவும் உடனடியாக dialysis ஆரம்பித்தாக வேண்டும் எனக் கூறிவிட்டார்கள்..மனைவியின் முகம் இருளடைந்தது.

அதன்பின் சுமார் ஒரு வருடகாலம் dialysis -ல் ஓடியது. ஏகப்பட்ட டெஸ்ட், மருந்துகள் என உடலே போர்க்களமாகியது. அதன் பிறகு பலவித போராட்டங்களுக்கு பின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு,கொஞ்சம் அதிக நாட்கள் மருத்துவமனையில் இருந்துவிட்டு வீடு திரும்பினான். மாடியில் தனி அறை கொடுக்கப்பட்டு,எந்த infection-னும் ஆகிவிடாதபடி பார்த்துக் கொள்ளப்பட்டது. அவனை பார்ப்பதை நாங்களே தடை செய்து கொண்டோம். போனிலும், SMS மூலமாகவும்தான் தொடர்பு.அவனும் DVD, nternet மற்றும் சில உடற்பயிற்சிகளோடு மெல்ல தேறி வந்தான். முழுக்க தேறியவுடன் Goa செல்லலாம் என கூறினான். நிச்சயமாக என்றோம். அப்போது அவன் சொன்னான் 'மோட்டார் சைக்கிளில்..' என்று.

இருந்தும் இரண்டு மாதங்களுக்கு முன் diarrhea மற்றும் pneumonia தாக்கி அவதி பட்டான். கொஞ்ச நாளில் மறுபடியும் மருத்துமனையில் சேர்க்கப்பட்டு உடலில் பல்வேறு குழாய்கள் சொருகப்பட்டு,கை கால், தொடை என ஊசிகளால் குத்தப்பட்டு, வீரியமிக்க மருந்துகள் உடலை ஆக்கிரமிக்க, ventilator பொறுத்தப்பட்டு… உடல் எடை 30kg ஆகி, மறுபடியும் dialysis ஆரம்பிக்கப்பட்டபோது அவன் மெல்லிய குரலில் சொன்னது…..

“Beena…leave me in peace..”

போய் சேர்ந்துவிட்டான்!

சஜியின் உடல் ஹாலில் வைக்கப்பட்டிருக்கிறது.போர்டிக்கோவில் எண்ணற்ற செருப்பு ஜோடிகள் கால்களுக்காக காத்திருக்கின்றன. சாலையிலும் ஏகப்பட்ட பேர் நின்று கொண்டிருக்கிறார்கள்.புதிது புதிதாக மக்கள் மலர் வளையங்களோடும், மாலைகளோடும் உள்ளே சென்று திரும்புகிறார்கள். syrian orthodox சர்ச்சை சேர்ந்த அந்த இளம் பாதிரியார் சஜியின் உடலுக்கு பிரார்த்தனை செய்கிறார். பிரார்த்தனை மலையாளத்தில் இருந்தாலும் நன்றாக புரிகிறது.

“சஜியின் இந்த மரணம் ஒரு முடிவல்ல.. இவர் பூமிக்கு வந்த பணி முடித்து அவர் சொர்கத்துக்கு,ஆண்டவனிடத்தில் போகிறார்…எனவே இதை ஒரு துக்கமாக நினைக்காமல் அவரை சந்தோசமாக வழி அனுப்புவோம்..அதற்கான சந்தோசமான கீதங்களை இப்போது பாடுவோம்..”

சர்ச்சில் இருந்து வந்த ஒரு பெண்கள் கூட்டம் இப்போது பாடத்தொடங்குகிறது.

சஜியின் நண்பர்கள் சாலை முழுவதும் வியாபித்துள்ளார்கள். அவ்வப்போது தெருமுனையில் இருக்கும் டீ கடைக்கு சென்று டீ அருந்தி புகைத்துவிட்டும் வருகிறார்கள்.எல்லோர் முகத்திலும் ஒரு சோகம் தெரிகிறது. ஜோக்குகளை உதிர்த்துவிட்டு செயற்கையாக சிரிக்கிறார்கள்.

மதியம் 3மணி வரை கார்கள்,பைக்குகள், மலர்வலையங்கள்... அதன் பின் கீழ்பாக்கம் கல்லறை.

கல்லறை தோட்டம் சமீபத்திய மழையால் குளிர்ச்சியாகவும், பசுமையாகவும் இருந்தது.ஆனால் அந்த இரண்டுமே அங்கு நடைபெறும் சோக விசயங்களுக்கு நடுவே பொருத்தமில்லாமல் இருந்தது.இப்போது முன்னை விட கூட்டம் அதிகம். உறவுகள், நண்பர்கள் என மீண்டும் ஜபங்கள்,பிரார்த்தனைகள். எல்லா முகங்களிலும் சோகம்.கதறும் தாய், கல்லாய் உரைந்து போன மனைவியின் முகம்…உணர்ச்சியில்லாமல் இருந்த தந்தையின் முகம். உணர்வுகளுக்கு மத்தியிலும் ஓடி ஓடி வேலைகள் பார்க்கும் சகோதரர்கள்.

கயிறு கட்டி உடல் இருந்த பெட்டியை குழிக்குள் இறக்கிவிட்டார்கள். சாம்பிராணி தூக்கு போன்ற ஒன்றை அங்கும் இங்கும் ஆட்டியவுடன் குழியில் மண்ணைப் போட்டு மூடினார்கள்.

இப்போது கூட்டம் மெல்லக் கலைகிறது. சிலர் சொல்லிக்கொண்டும்,சிலர் சொல்லிக்கொள்ளாமலும் கிளம்புகிறார்கள்.சஜியின் தந்தை அமைதியாக எல்லோரிடமும் கைகுலுக்கிறார். நாங்கள் நண்பர்கள் அனைவரும் சஜியின் மனைவி பீனாவிடம் சென்று அவளை சமாதான படுத்துவதுமாதிரி பேசினோம்.ஒரு கணவன் இறந்தபிறகு மனைவிக்கு எவ்வளவு கடமைகள் உள்ளன என்பதை பற்றியெல்லாம் நண்பர்கள் எடுத்துரைத்தார்கள்.அதற்கு கண்ணீரோடு அவள் கூறியது…

“ He was never a husband to me…he was the best friend I ever had in my life!”

நான் அவளை தவிர்த்துவிட்டு,அவள் மகளை தேடினேன்.

சற்றுத் தொலைவில் அவள் வயதையொத்த குழந்தைகளோடு….

“inky pinky ponky..”

நான் வெளியே நடந்தேன்.

லேசாக மழை தூறத் தொடங்கியது.

4 comments:

ச.மனோகர் said...

டெல்பின் மேடம்....இதில் கூட பெண்களுக்குத்தான் மிகவும் துன்பங்கள்.

Senthil Alagu Perumal said...

மிகவும் வருந்தக் கூடிய விஷயம்.. எனது நண்பன் பிரிந்த தருணத்தை நினைவு படுத்தியது உங்கள் பதிவு. பிறப்பும் இறப்பும் நம் வாழ்வில் நிகழும் அன்றாட நிகழ்வு. பிறப்பை ஏற்று மகிழும் நம்மால் ஏன் இறப்பை ஏற்க முடியவில்லை??

ச.மனோகர் said...

'பிறப்பை ஏற்று மகிழும் நம்மால் ஏன் இறப்பை ஏற்க முடியவில்லை??'

செந்தில்...உண்மைதான். மனித மனம் அந்தளவுக்கு பக்குவப்படவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

மு த் து க் கி ரு ஷ் ண ன் said...

அந்த பெண்ணின் மனதை போன்றவர்கள்,தக்காலத்தில் நிலவுகிறார்களா?
கேள்விதான் கேட்க தோன்றுகிறது...