Tuesday, September 11, 2007

எதிர்காலத்தில் சென்னை-படங்கள்

இந்தப் படங்கள் junk mail-ல் எனக்கு வந்தன. பார்ப்பதற்கு என்னவோ நன்றாகவே இருக்கின்றன..இந்த அழகியப் படங்களுக்கு அடியில் எத்தனை ஊழல் பெருச்சாளிகள் ஒளிந்திருக்கின்றனவோ!












Wednesday, September 5, 2007

கவிஞர் சினேகனுடன் ஒரு திடீர் சந்திப்பு.



என் நண்பர்கள் சிலர் கவிஞர் சினேகனை ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்கப் போனபோது நானும் உடன் செல்ல வேண்டிவந்தது.

தோழா தோழா , அவரவர் வாழ்க்கையில் (படம்:பாண்டவர் பூமி), ஆடாத ஆட்டமெல்லாம் (படம் : மௌனம் பேசியதே) பருத்திவீரன், ராம் போன்ற படங்களில் கருத்தாழமிக்க பாடல்களையும்,…கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஒடிப்போலாமா? போன்ற உலகப் புகழ் பெற்ற பாடல்களையும் எழுதியவர். மிகவும் இளஞராக இருந்தார். கிடைத்த சந்தர்ப்பத்தில் நானும் சில விளக்கங்களைக் கேட்டேன். அவர் கருத்துக்களுடன் முழுக்க முழுக்க ஒத்து போகிறோமோ இல்லையோ அவர் சிரித்த முகத்துடன்,மிக நம்பிக்கையுடன் பதிலளித்த விதத்தைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

“அதென்ன ‘டைனமிக் திருமணம்’? எதற்கு அந்த ‘கட்டிப்புடி’ திருமண வாழ்த்து கலாட்டக்கள்..என்ன சொல்ல வருகிறீர்கள்?”

“இந்த ‘கட்டிப்புடி’ விசயம் மட்டுமே எல்லோருக்கும் தெரிவது மிகவும் வருத்தத்துக்குரிய விசயம்..இது சில ஊடகங்கள் செய்த வேலை. இதை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் முதலில் எங்கள் அமைப்பின் நோக்கத்தினை புரிந்து கொள்ள வேண்டும். Dynamic Self Awakening என்ற இந்த அமைப்பு (http://www.dynamicdsa.com)15 ஆண்டுகளுக்கு மேலாக செயல் பட்டு வருகிறது.மலேசியாவில் ஆரம்பிக்கப்பட்டு, இப்போது சென்னையிலும், தமிழகத்தின் பல ஊர்களிலும் கிளை பரப்பி செயல் பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம் மனிதர்களை, தங்களை பற்றி தாங்களே அறிந்து கொள்ளச் செய்வது, அதன் மூலம் மன வலிமை கூடி மொத்த சமூகத்திற்கும் பயனுள்ளதாக மாற்றுவது,மூட பழக்க வழக்கங்களை ஒழித்து மனித சமூகத்தை நாகரீக அமைப்பாக மாற்றுவது.

“இதற்கு எந்த வகையில் நீங்கள் உங்கள் உறுப்பினர்களை தயார் படுத்துகிறீர்கள்?”

“இதற்கென்று பயிற்சி வகுப்புகள் நடத்தப் படுகின்றன. இந்த பயிற்சி ஐந்து நிலைகளுக்கு நடத்தப்படுகின்றன. முதல் நிலை பயிற்சி வகுப்பு மூன்று தினங்கள் எனத் தொடங்கி ஐந்து நிலைகள் வரை இந்த வகுப்புகள் போகின்றன. மூன்று தின முதல் நிலை வகுப்புக்கு ரூபாய் 2000/= வசூலிக்கப் படுகிறது.இதில் உணவு, தங்குமிடம் போன்றவற்றிக்கு ஆகும் செலவும் சேர்ந்து அடங்கும்.பயிற்சி திருப்தி அளிக்காவிட்டால் முழுப் பணமும் திருப்பித்தரப்படும். இது லாப நோக்கத்திற்காக நடத்தப்படும் பயிற்சி வகுப்புகள் அல்ல.உண்மையில் சொல்ல வேண்டுமானால் இதில் ஆர்வமாக இருப்பவர்கள் கணிசமான அளவில் தங்கள் சொந்தப் பணத்தை செலவு செய்து இந்த வகுப்புகளை நடத்தி வருகிறார்கள்.

“சரி.. பயிற்சி பற்றி சொல்லுங்கள்..”

“இது முழுக்க முழுக்க ஒருவர் தன்னைப் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ளும் விதமாக பயிற்சிகள் இருக்கும்.அதன் மூலம் தங்களுடைய மனபலம்,செய்யும் தொழிலின் நேர்த்தி, சமூக உறவு குறித்த பார்வைகள் போன்றவற்றில் மிகப் பெரிய மாறுதல்களை நிச்சயம் உணர்வீர்கள்.இது உறுதி.இந்த பயிற்சிகள் எந்த ஒரு மத,இன,நாடு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு நடத்தப்படவில்லை. இது மனிதம் சார்ந்தது.இது ஒரு மாதிரியான self- awakening training .எவரையும் கட்டாயப்படுத்தி இதில் சேர்க்க மாட்டோம். விருப்பமுள்ளவர்களை இணைத்து இப்பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது. இந்த பயிற்சிகளின் அனுபவத்தை வார்த்தையால் கூறமுடியாது.ஒரு முறை இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்தால்தான் அதை உணரமுடியும்.

“அதெல்லாம் சரி..இதில் எங்கே வந்தது ‘டைனமிக் மேரேஜ்’..?”

“இந்த பயிற்சிகளில் சமூகத்தை நாம் எப்படிப் பார்க்க வேண்டும்,அதை எந்த வகையில் மாற்ற வேண்டும் எனவும் சொல்லித்தரப்படுகிறது. இந்த அமைப்பினரின் இல்லத் திருமணங்கள் முழுக்க, தந்தை பெரியாரின் சுயமரியாதை திருமண முறைப்படி நடத்தப்படுகின்றன. வேத மந்திரங்கள் கிடையாது,வரதட்சணை கிடையாது. இது போன்ற பல சீர்திருத்தங்கள் இதில் அடங்கும். அதில் ஒரு அங்கமாகத்தான் வாழ்த்துக்களை ஒருவரை ஒருவர் தழுவி பரிமாறிக் கொள்கிறார்கள்.இது தான் இப்போது சர்ச்சைக்குரிய விசயமாகி இருக்கிறது.

“இந்த தழுவுதல் ஒரு சமூக ஒழுக்கப் பிழையை நோக்கி எடுத்துச் சென்று விடாதா?..”

“இல்லை..அப்படி ஆகாது. தழுவுதல் என்பது ஒரு உயிரினச் செயல்.மனிதனும் ஒரு உயிரினமே. தழுவுதலின் போது மனிதர்களிடையே அன்பும்,பாதுகாப்பு உணர்வும் அதிகரிப்பதாக மனவியல் நிபுணர்கள் சொல்லியிருக்கிறார்கள். மனிதர்களிடையே இயல்பாக நடைபெற வேண்டிய இந்த தழுவல்கள் ஒரு பாலின உணர்ச்சியாகவும், ஆபாச நடவடிக்கையாகவும் நம் சமூகத்தில் பார்க்கப் படுகிறது. இதை மறுபடியும் இயல்பான ஒரு செயலாக மாற்றவே இந்த முயற்சி. இதை சரியான முறையில் பார்ப்பதற்கும்,செயல் படுத்துவதற்கும் இந்த பயிற்சி வகுப்புகளில்
சொல்லித்தரப்படுகிறது. எங்கள் அமைப்பினர் இதில் தெளிவாகவே உள்ளார்கள். இதை ஒரு செக்ஸ் நடவடிக்கையாக பார்ப்பது அவரவர் மனோபாவத்தை பொறுத்தது”

“இந்த பிரச்சனையின் போது வந்த எதிர்ப்பை எப்படி சமாளித்தீர்கள்?”

“அவை ஒரு மோசமானத் தருணங்கள்…எல்லாத் திசைகளிலிருந்தும் எதிர்ப்பு வந்தது. ஏன் நான் இருக்கும் சினிமாத் துறையிலிருந்தும் கண்டனங்கள் வந்தன. நான் வசிக்கும் தெரு முழுக்க என்னைக் கண்டித்து சுவரொட்டிகள். என் வீட்டிற்கே கூட்டமாக வந்து போராடப்
போவதாக ஒருவர் அறிவித்திருந்தார். எல்லாவற்றையும் சமாளித்தேன். அதற்கான மனவலிமையை நான் சார்ந்திருக்கும் இந்த அமைப்பின் பயிற்சிகள் எனக்கு அளித்தன.”


“தங்களின் சில பாடல்களுக்கு எதிர்ப்பு வந்ததே…குறிப்பாக..’கல்யாணந்தான் கட்டிகிட்டு’…இந்த மாதிரி பாடல்களை எந்த நிர்பந்த்தில் எழுதுகிறீர்கள்?”

“திரைப்பட பாடல்கள் என்பது இயக்குனரின் கதைக்கும்,கற்பனைக்கும் ஏற்றவாறு எழுதப்படுவது. வியாபார ரீதியில் எழுதப் படுவது. .இதே சினிமாவில் தான்`அவரவர் வாழ்க்கையில்’ போன்ற பாடல்களையும் எழுதியிருக்கிறேன்.என் தீவிர எழுத்துக்களை என்னுடைய கவிதை நூல்களில் தேடுங்கள்.”

இதற்கு பின்னால் எங்கள் பேச்சு பல திசைகளிலும் போனது. அதில் அவர் அ.தி.மு.க வில் சேர்ந்தது பற்றியும், அவர் சந்தித்த எதிர்ப்புகள் எப்படி ஒரு சாதீய பிரச்சனையாக பரிணாம வளர்ச்சி அடையப் பார்த்தது குறித்தும் பேசினோம். அதற்கு கவிஞர் சினேகன் அளித்த பதில்கள் அவ்வளவாக திருப்தி அளிக்கவில்லை. கவிஞர் சினேகனின் சில திரைப்பட பாடல்கள் சர்ச்சைக்குரியதாக இருப்பது போலவே அவருடைய கருத்துகள் சிலவும் சர்ச்சைக்குரியதாக இருக்கிறது.ஒரு முறை ஆபாசமாக எழுதும் பெண் கவிஞர்களை சென்னை அண்ணா சாலையில் வைத்து கொளுத்த வேண்டும் என்று கூறியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ச.மனோகர்.

sa.manoharan@gmail.com



இது சம்பந்தமான சுட்டிகள்:

http://www.dynamicdsa.com/home.htm

http://bsubra.wordpress.com/2007/03/19/lyricist-snehan-is-raping-tamil-culture-by-innovative-marriage-ceremonies/

http://www.aaraamthinai.com/cinema/cini-katturai/june30katturai.asp

Saturday, September 1, 2007

Chak De! India..திரைப்பார்வை




இந்தியா-பாக்கிஸ்தான் இடையே ஹாக்கி உலகக்கோப்பை இறுதி ஆட்டம்-ஷாரூக் பெனால்ட்டி ஷாட்டை தவறவிடுகிறார்-இந்தியா தோல்வி-ஷாரூக் துரோகி என குற்றச்சாட்டு-ஷாரூக் ஏழு வருடம் எங்கும் தென்படவில்லை-பெண்கள் ஹாக்கி அணிக்கு பயிற்சியாளர் வேலைக்கு யாருமே தயாரில்லாத சூழ்நிலையில் ஷாரூக் ஏற்றுக்கொள்கிறார்-பயிற்சி கொடுத்து பெண்கள் ஹாக்கி உலகக்கோப்பையை வென்று வருகிறார்.

இது Chak De! India ! திரைப்படத்தின் கதை.

இப்படத்தின் கதை பெரிதாக கவரவில்லை. ஆனால் இப்படத்திற்கான shooting script-ஐ எப்படி தயார் செய்திருப்பார்கள் என்ற பிரமிப்பு நம்மை வியப்படையச் செய்கிறது. ஒரு விறுவிறுப்பான கிரிக்கெட் ஆட்டத்தையோ அல்லது ஹாக்கி ஆட்டத்தையோ முழு விறுவிறுப்புடன் நேரில் கண்டுகளிக்க முடியும். ஆனால் அதே விறுவிறுப்புடன் ஒரு ஆட்டத்தை செயற்கையாக பிலிமில் கொண்டுவருவது மிகக் கடினம். அதற்கு script எழுதுவது என்பது கடினத்திலும் கடினம்.


ஹாக்கி பயிற்சிக்கு இந்தியாவின் பல பகுதியிலிருந்தும் பெண்கள் வருகிறார்கள். பல மொழி பேசிக்கொண்டு,பல சமுக,பொருளாதார பின்னணியிலிருந்து இவர்கள் வருகிறார்கள். எல்லோருமே அவரவர் மாநிலத்தில் சிறப்பான ஆட்டக்காரர்கள். இவர்களிடையே ஆரம்பத்தில் ஒற்றுமை,புரிந்துணர்வு இல்லாமலிருக்கிறது. ஹாக்கி விளையாட்டு,பயிற்சியாளர்,விளையாடும் பெண்கள்,அவர்களின் உணர்வுகள் இவற்றை களனாக வைத்து திரைக்தையை அமைத்திருக்கிறார் திரைக்கதை எழுதிய ஜெய்தீப் சாஹ்னி. அதை மிகவும் நேர்த்தியாக திரையில் கொண்டுவந்திருக்கிறார் இயக்குனர் ஷிமிட் அமின். ஹாலிவுட் படங்களின் ஒளிப்பதிவை இப்படத்தில் பார்க்கலாம்.

விளையாட்டு வீராங்கனைகளாக நடித்த பெண்கள் தங்கள் பாத்திரங்களை உள்வாங்கி நடிதிருக்கிறார்கள்.இதில் நடித்த பல பெண்களுக்கு காமிரா அனுபமே கிடையாது.சில பெண்கள் உண்மையான ஹாக்கி வீராங்கனைகள்.ஷாருக்கானின் நடிப்பு,வசன உச்சரிப்பு மற்றும் உடல் மொழி மிகவும் அருமை.

நான் ரசித்த சில காட்சிகள்:

1)பயிற்சிமுகாம்.பதிவாளர் கேட்கிறார்.
“எங்கிருந்து வருகிறாய்?”
“ஆந்திர பிரதேஷ்”
“ஓ..மதராஸி…தமிழ்?”
“இல்லை..ஆந்திரா..தெலுகு”
“தெலுகுக்கும் தமிழுக்கும் அப்படி என்னமா வித்தியாசம்?”
“பஞ்சாபிக்கும் பீகாரிக்கும் என்ன வித்தியாசமோ அவ்வளவு வித்தியாசம்”

இந்த காட்சியில் வட இந்தியர்களின் தென்னிந்திய புரிதல்களை இயக்குனர் காட்டியிருப்பது வித்தியாசமாக இருந்தது.

2) பயிற்சியின் போது எதிர்த்து பேசும்,சண்டை போடும் பெண்களை ஷாரூக்
மைதானத்தை விட்டு வெளியேற்றிவிடுகிறார். அவர்களை கண்டுகொள்ளாமல்
மற்றவர்களை ஆட வைக்கிறார். வெளியேறிய பெண்கள் அமைதியாக
விளையாட்டை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். நேரம் ஆகஆக
அவர்களால் இருப்பு கொள்ளவில்லை.விளையாடிய கால்கள் அல்லவா..
ஒவ்வொருராக ஷாரூக்கிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு பயிற்சியை
தொடருகிறார்கள். இந்த இடத்தில் ஷாரூக் ஒரு நீண்ட அறிவுரையெல்லாம்
கொடுக்காமல் ஒரு சைகை மூலம் அவர்களை விளையாட அனுமதிப்பது
ரசிக்கக்கூடியது.

3) இந்திய பெண்கள் அணி ஆஸ்திரேலியா போய் இறங்குகிறது. அங்கு
ஆஸ்திரேலிய அணியினரும் மற்றவர்களும் பயிற்சி பெறுவதை ஏக்கத்துடன்
இந்திய அணி பார்ப்பதை எடுத்த விதம்.


இந்த படம் சில உறுத்தல்களையும் ஏற்படுத்தியது.

இந்த படம் அமீர்கான் நடித்த ‘லகானை’ நினையூட்டியதை தவிர்க்கமுடியவில்லை. கிரிகெட்டுக்கு பதில் ஹாக்கி ..வித்தியாசம் காட்டுவதற்கு பெண்கள் அணி.. அதிலிருக்கும் அதே தேசபக்தி கலந்த விளையாட்டு. தேசபக்தி ஒரு proved subject என்பதை மறுபடியும் இந்தப் படம் நிரூபித்துள்ளது.

பெண்கள் ஹாக்கி அணி உலகக் கோப்பை போட்டிக்குச் செல்வதை.. எப்படியும்
தோற்கப் போகிறார்கள்…செலவு எனக்கூறி நிறுத்திவிடுகிறார்கள். ஷாரூக் அவர்களிடம் வாதாடி, வேண்டுமானால் ஆண்கள் அணி பெண்கள் அணியோடு மோதி பார்க்கட்டும் என போட்டிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. பெண்கள் அணி தோற்பதாக இக்காட்சி முடிகிறது. இந்த ஆண்கள்-பெண்கள் ஆட்டம் சாத்தியம்தானா? சற்று அதீத கற்பனை போல் தெரிந்தது.


பின்னணி இசை உணர்ச்சிகளை தூண்டினாலும்,சில இடங்களில் திடீரென விழித்துக் கொண்டு வாசித்தது போல் இருந்தது.

சில குறைகள் இருந்தாலும்…குத்து பாட்டுக்களை பார்த்துப்பார்த்து சேர்த்துக் கொண்ட பாவங்களை,இந்த மாதிரி படங்களைப் பார்த்துப் போக்கிக் கொள்ளலாம்.

குறிப்பு: இப்படத்தின் திரைக்கதையை, சினிமா தயாரிப்பாளர்கள்,மாணவர்கள்
மற்றும் சினிமா பற்றிய ஆராய்ச்சியாளர்கள் பார்வையிடுவதற்காக
Beverly Hills- ல் இருக்கும் Oscar Library கேட்டிருக்கிறது.