Tuesday, August 28, 2007

காட்டுமிராண்டித்தனம்..



பீகார் மாநிலத்தின் பகல்பூர் மாவட்டத்தில் ஒரு பெண்ணின் தங்கச் சங்கிலியை திருடி மாட்டிக் கொண்ட ஒருவனை பொதுமக்கள் திரண்டு அடித்து உதைத்தார்கள்.பொது மக்களோடு சேர்ந்து, சட்டப்படி நடக்கவேண்டிய போலீஸும் சேர்ந்து திருடியவனை அடித்து நொறுக்கினார்கள். இதன் உச்சக் கட்டமாக திருடனை போலீசாரே ஒரு மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்து போனார்கள். இது அந்த ஊர் பொதுமக்களின் முன்னிலையிலேயே நடந்திருக்கிறது.திருடனை மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச் சென்றது ஒரு சப்-இன்ஸ்பெக்டர் என்று தெரிகிறது.

இது சம்பந்தமாக லல்லு பிரசாத் யாதவ் கூறியது:

“பீகாரில் காட்டு தர்பார் நடப்பதற்கு இதுவே சாட்சி.. பீகாரின் சட்டம் ஒழுங்கு நிலமை முதல்வர் நித்திஷ் குமார் கையை விட்டு போய்விட்டது”

பீகார் முதல்வர் நித்திஷ் குமார் கூறியது:

“இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்யப்படும்…சம்பந்தபட்ட போலிசார் மீது
நடவடிக்கை எடுக்கப்படும்”

இந்த காட்சிகளை NDTV தொலைக்காட்சி,அதிர்ச்சி தரும் காட்சிகள் குழந்தைகள் பார்க்க வேண்டாம் என்ற அறிவிப்போடு ஒளிபரப்பியது. என்னதான் அறிவிப்பு செய்தாலும் அந்த கொடுரமான, காட்டுமிராண்டித்தனமான அந்த காட்சிகள் மனதை மிகவும் பாதித்தது. எனவே இந்த மாதிரி காட்சிகளை தவிர்க்க வேண்டும்.தவிர்க்க முடியாத நேரங்களில் இந்த மாதிரி காட்சிகளை ஒரு சில stills ஆக காட்டினால் போதும். தொலைக்காட்சி நிறுவனங்கள் யோசிக்குமா?

Tuesday, August 21, 2007

கலைஞர் அரசும் ஹெல்மெட் தலைகளும்...



ஜுன்/01/2007

கட்டாயமாக ஹெல்மெட் அணியவேண்டும்.

ஜுன்/03/2007

ஹெல்மெட் விசயத்தில் பொதுமக்களை இடையூறு செய்ய வேண்டாம் என போலீசாருக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

ஆகஸ்ட்/17/2007

ஹெல்மெட் அணியாத 8 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு-
போலீசார் அதிரடி நடவடிக்கை (தினத்தந்தி)

ஆகஸ்ட்/21/2007

இதிலே முடிவெடுப்பது இப்போது அரசின் கையிலே
இல்லை.நீதிமன்ற தீர்ப்பினையும் அரசாங்கம் மதிக்க வேண்டியுள்ளது.
-முதல்வர் கருணாநிதி(தினத்தந்தி)

ஏன் இன்னும் ஹெல்மெட் குழப்பம் தீரவில்லை?? அரசாங்கம் இந்த பிரச்சனையில் என்னதான் சொல்லவருகிறது?

அப்படியே சற்று இதையும் பார்த்துக்கொள்ளுங்கள்:

அரசு ஆணை எண்:1213-லிருந்து சில பகுதிகள்:

G.O.Ms.No.1213
Dated: 13.8.2007

AMENDMENT

In the said rules , after rule 417, the following rule shall be inserted namely:-

“417 – A . Exceptions in wearing Protective headgear (Helmet):-

The provisions of section 129 of the Act providing for compulsory wearing of Protective headgear (helmet) shall not apply to the following categories, namely:-

(i) Persons who belong to “ Meivazhi Sabha “ or “Meivazhi Salai” who wear turban while riding on a motor cycle: and

(ii) “Woman” or “Child” riding in motor cycle as pillion rider.

Explanation:

For the purpose of this rule, “Woman” means a female human being of any age and “Child” means a male human being under twelve years of age.

By Order of the Governor

(S. Malathi)
Secretary to Government

Saturday, August 18, 2007

சென்னை ட்ராபிக்-விழி பிதுங்குகிறது...













நேற்று மைலாப்பூரில் இருந்து என் இரு சக்கர வாகனத்தில் அண்ணா நகர் வருவதற்கு ஒரு மணி நேரம் ஆனது. இத்தனைக்கும் நேற்று வார விடுமுறை தினம்..அதுவும் நான் பயணித்த நேரம் பிற்பகல் இரண்டு மணி. எங்கு பார்த்தாலும் வாகனங்கள்..வாகன நெரிசல்கள்.. ஒரு சந்து பொந்து விடாமல். சின்ன சந்துகளிலும் சென்னை நகர போக்கு வரத்து காவற்துரையினரின் தடுப்பு ஏற்பாடுகள். தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு சாலையில் இறக்கி விடப்படுவதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் அதற்கேற்றவாறு சாலை உள் கட்டமைப்பு ஏற்ப்படுத்துவதே இல்லை.அரசு தினந்தோறும் போக்குவரத்து சம்பந்தமாக பல அறிவிப்புகளை,திட்டங்களை கூறி வருகிறது. சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இன்னும் சில வருடங்களில் சென்னை நகரம் கடும் போக்குவரத்து சிக்கலில் மாட்டுவது உறுதி. உங்கள் வாகனத்தை உங்கள் வீட்டிலிருந்து வெளியே எடுப்பது கூட பிச்சனையாகிவிடும்.

அரசாங்கமும்,நாமும் என்னதான் செய்யப் போகிறோம்?



(படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை)

Monday, August 13, 2007

தஸ்லிமா தாக்குதல்-கருத்துரிமைக்கு எதிரான சவால்




தஸ்லிமா நஷ்ரீன் ஐதரபாத் நகரில் தாக்கபட்ட சம்பவம் கருத்துரிமைக்கு எதிரான ஒரு மோசமான அராஜகம்.தாக்குதல் பற்றி MIM தலைவர் அக்பரூதின் ஓவைஸி சொன்னது....

"MLA அந்தஸ்து பற்றி நாங்கள் கவலை படவில்லை.முதலில் நாங்கள் முஸ்லிம்கள்.இஸ்லாத்திற்கு எதிராக பேசுபவர்களை எந்த முறை சாத்தியப்படுகிறதோ அந்த முறையில் எதிர்ப்போம்.அது எங்களின் கடமையும்கூட.."

"மேற்கு வங்கத்தில் வேண்டுமானால் அந்தம்மாவை அனுமதித்திருக்கலாம்...இது ஐதராபாத்..இங்கு இந்த பெண்ணை அனுமதிக்க முடியாது. இந்த தாக்குதல் அந்த பெண்மணிக்கு தேவையான ஒன்றுதான்.."

என்னயா இது? ஐதராபாத் இன்னும் இந்தியாவில் இணக்கப்படவில்லையா? இந்திய அரசியல் சாசனம் அங்கு அமுலுக்கு வரவில்லையா? MLA அந்தஸ்து பற்றி கவலை படவில்லையென்றால் இந்திய அரசியல் சாசனம் பற்றியும் கவலை படவில்லை என்றுதானே அர்த்தம்.பதவி ஏற்பு அன்று செய்த உறுதி மொழிகளை காற்றில் பறக்கவிட்டு விட்டாரா இந்த ஆள்? அடிப்பதற்கு அவருக்கு உரிமை இருக்கிறதா என்பதை அரசு விளக்கியாக வேண்டும்.அவருக்கு எது முக்கியம் என அவர் முடிவு செய்யட்டும்.சட்டம் தன் முடிவை எடுக்க வேண்டும்

கருத்து சொன்னதற்காக தாக்கப்படுவதை நியாயப்படுத்தும் இந்த மத அடிப்படை வாதத்தை இரும்புக் கரம் கொண்டு அடித்து நொறுக்க வேண்டும்.இல்லாவிட்டால் ஜனநாயகம்,மக்களாட்சி என்று நாம் பீற்றிக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

Monday, August 6, 2007

பதிவர் பட்டறை- ஒரு வருத்தம்

ஒன்றும் இல்லை...கலந்து கொள்ளமுடியாமல் போய் விட்டதே என்றுதான்.

அப்பாடா! நாமும் பட்டறை குறித்த ஒரு பதிவை போட்டு விட்டோம்!

நடத்திக் காட்டிய அனைவருக்கும் பாராட்டுக்கள்.

Friday, August 3, 2007

‘சஜி’யுட மரணம்…

சஜி டேனியல் என் நீண்டநாள் நண்பன். மனைவி, ஒரு பெண் குழந்தை (வயது8), மற்றும் புன்னகையோடும் வாழ்ந்து கொண்டிருந்தவன். இனிமையானவன்.உருப்படியான நகைச்சுவைகளை உதிர்ப்பவன். நேர்த்தியாக உடை உடுப்பான். அவன் மகளோடு விளையாடுவதை பார்த்தால் இரண்டு குழந்தைகள் விளையாடுவது போல் இருக்கும். இவன் வெளியே கிளம்பினால் அந்தக் குழந்தை வீட்டை ரணகளமாக்கிவிடுவாள். முதலில் நாங்கள் வெளியே சென்று சற்றுத்தொலைவில் காத்திருக்க வேண்டும். இவன் பின்பக்கமாக சென்று வெளியேறி, எங்களோடு சேர்ந்து கொள்வான். மோட்டார் சைக்கிளில் நெடும்பயணத்தை மிகவும் விரும்புபவன். ஒரு முறை...அப்போது அவனுக்கு திருமணமாகவில்லை.. தெருமுனையில் உடன் பேசிக்கொண்டிருந்த நண்பர்களை உசுப்பேத்தி அப்படியே, போட்டிருந்த ஒரே உடையோடு மோட்டார் சைக்கிளில் மூணாறு வரை அழைத்துச் சென்றுவந்தவன். உணவு விடுதி,bar எங்கு சென்றாலும் முதலில் அவன் செய்யும் காரியம்..சப்ளை செய்பவரின் பெயரை கேட்டுத் தெரிந்துகொள்வது. அடுத்தமுறை அழைக்கும்போது அவர்களை பெயர் சொல்லியே அழைப்பான். அவனுக்கு தெரிந்தவர்கள் சென்னையின் எந்த மூலையிலும் இருப்பார்கள். தியேட்டர், ஷாப்பிங் மால் எங்கு சென்றாலும், அந்த கூட்டத்திலும் இரண்டு பேர் இவனை கண்டுபிடித்து பேசத் துவங்கிவிடுவார்கள். நாங்கள் எரிச்சலோடு காத்திருப்போம். சில சமயங்களில் ஜீன்ஸ் அணிந்த பெண்களோடு பேசிக்கொண்டிருப்பான். அப்போது நாங்கள் மகிழ்ச்சியோடு காத்திருப்போம். அவனோடு பேசும் நபர்கள் எந்தச் சமூக,பொருளாதார பின்ணனியிலும் இருப்பார்கள். ஒரு முறை நுங்கம்பாக்கம் சுடுகாட்டில் பிணம் எரிக்கும் அந்த இளைஞன் இவனைப் பார்த்து "என்னா மச்சி இங்க..?" என்று கேட்டதை பார்த்திருக்கிறேன். ஆங்கில திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பான். அவனுக்கு மிகவும் பிடித்த John Denver-ன் பாடல்களை இனிமையாக பாடுவான் அந்த இனிமையானவன்.

மஸ்கட்டில் சிலவருடங்கள் இருந்தபோது திடீரென அவன் உடல்நிலை மோசமாகி,வீல் சேரில் சென்னை கொண்டுவரப்பட்டான்.Food poison-என்று மஸ்கட்டில் சொல்லியிருக்கிறார்கள். சென்னை கொண்டுவரப்பட்ட சிலமணி நேரங்களிலேயே அது சிறுநீரக கோளாறு என்றும்,இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்துவிட்டதாகவும் உடனடியாக dialysis ஆரம்பித்தாக வேண்டும் எனக் கூறிவிட்டார்கள்..மனைவியின் முகம் இருளடைந்தது.

அதன்பின் சுமார் ஒரு வருடகாலம் dialysis -ல் ஓடியது. ஏகப்பட்ட டெஸ்ட், மருந்துகள் என உடலே போர்க்களமாகியது. அதன் பிறகு பலவித போராட்டங்களுக்கு பின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு,கொஞ்சம் அதிக நாட்கள் மருத்துவமனையில் இருந்துவிட்டு வீடு திரும்பினான். மாடியில் தனி அறை கொடுக்கப்பட்டு,எந்த infection-னும் ஆகிவிடாதபடி பார்த்துக் கொள்ளப்பட்டது. அவனை பார்ப்பதை நாங்களே தடை செய்து கொண்டோம். போனிலும், SMS மூலமாகவும்தான் தொடர்பு.அவனும் DVD, nternet மற்றும் சில உடற்பயிற்சிகளோடு மெல்ல தேறி வந்தான். முழுக்க தேறியவுடன் Goa செல்லலாம் என கூறினான். நிச்சயமாக என்றோம். அப்போது அவன் சொன்னான் 'மோட்டார் சைக்கிளில்..' என்று.

இருந்தும் இரண்டு மாதங்களுக்கு முன் diarrhea மற்றும் pneumonia தாக்கி அவதி பட்டான். கொஞ்ச நாளில் மறுபடியும் மருத்துமனையில் சேர்க்கப்பட்டு உடலில் பல்வேறு குழாய்கள் சொருகப்பட்டு,கை கால், தொடை என ஊசிகளால் குத்தப்பட்டு, வீரியமிக்க மருந்துகள் உடலை ஆக்கிரமிக்க, ventilator பொறுத்தப்பட்டு… உடல் எடை 30kg ஆகி, மறுபடியும் dialysis ஆரம்பிக்கப்பட்டபோது அவன் மெல்லிய குரலில் சொன்னது…..

“Beena…leave me in peace..”

போய் சேர்ந்துவிட்டான்!

சஜியின் உடல் ஹாலில் வைக்கப்பட்டிருக்கிறது.போர்டிக்கோவில் எண்ணற்ற செருப்பு ஜோடிகள் கால்களுக்காக காத்திருக்கின்றன. சாலையிலும் ஏகப்பட்ட பேர் நின்று கொண்டிருக்கிறார்கள்.புதிது புதிதாக மக்கள் மலர் வளையங்களோடும், மாலைகளோடும் உள்ளே சென்று திரும்புகிறார்கள். syrian orthodox சர்ச்சை சேர்ந்த அந்த இளம் பாதிரியார் சஜியின் உடலுக்கு பிரார்த்தனை செய்கிறார். பிரார்த்தனை மலையாளத்தில் இருந்தாலும் நன்றாக புரிகிறது.

“சஜியின் இந்த மரணம் ஒரு முடிவல்ல.. இவர் பூமிக்கு வந்த பணி முடித்து அவர் சொர்கத்துக்கு,ஆண்டவனிடத்தில் போகிறார்…எனவே இதை ஒரு துக்கமாக நினைக்காமல் அவரை சந்தோசமாக வழி அனுப்புவோம்..அதற்கான சந்தோசமான கீதங்களை இப்போது பாடுவோம்..”

சர்ச்சில் இருந்து வந்த ஒரு பெண்கள் கூட்டம் இப்போது பாடத்தொடங்குகிறது.

சஜியின் நண்பர்கள் சாலை முழுவதும் வியாபித்துள்ளார்கள். அவ்வப்போது தெருமுனையில் இருக்கும் டீ கடைக்கு சென்று டீ அருந்தி புகைத்துவிட்டும் வருகிறார்கள்.எல்லோர் முகத்திலும் ஒரு சோகம் தெரிகிறது. ஜோக்குகளை உதிர்த்துவிட்டு செயற்கையாக சிரிக்கிறார்கள்.

மதியம் 3மணி வரை கார்கள்,பைக்குகள், மலர்வலையங்கள்... அதன் பின் கீழ்பாக்கம் கல்லறை.

கல்லறை தோட்டம் சமீபத்திய மழையால் குளிர்ச்சியாகவும், பசுமையாகவும் இருந்தது.ஆனால் அந்த இரண்டுமே அங்கு நடைபெறும் சோக விசயங்களுக்கு நடுவே பொருத்தமில்லாமல் இருந்தது.இப்போது முன்னை விட கூட்டம் அதிகம். உறவுகள், நண்பர்கள் என மீண்டும் ஜபங்கள்,பிரார்த்தனைகள். எல்லா முகங்களிலும் சோகம்.கதறும் தாய், கல்லாய் உரைந்து போன மனைவியின் முகம்…உணர்ச்சியில்லாமல் இருந்த தந்தையின் முகம். உணர்வுகளுக்கு மத்தியிலும் ஓடி ஓடி வேலைகள் பார்க்கும் சகோதரர்கள்.

கயிறு கட்டி உடல் இருந்த பெட்டியை குழிக்குள் இறக்கிவிட்டார்கள். சாம்பிராணி தூக்கு போன்ற ஒன்றை அங்கும் இங்கும் ஆட்டியவுடன் குழியில் மண்ணைப் போட்டு மூடினார்கள்.

இப்போது கூட்டம் மெல்லக் கலைகிறது. சிலர் சொல்லிக்கொண்டும்,சிலர் சொல்லிக்கொள்ளாமலும் கிளம்புகிறார்கள்.சஜியின் தந்தை அமைதியாக எல்லோரிடமும் கைகுலுக்கிறார். நாங்கள் நண்பர்கள் அனைவரும் சஜியின் மனைவி பீனாவிடம் சென்று அவளை சமாதான படுத்துவதுமாதிரி பேசினோம்.ஒரு கணவன் இறந்தபிறகு மனைவிக்கு எவ்வளவு கடமைகள் உள்ளன என்பதை பற்றியெல்லாம் நண்பர்கள் எடுத்துரைத்தார்கள்.அதற்கு கண்ணீரோடு அவள் கூறியது…

“ He was never a husband to me…he was the best friend I ever had in my life!”

நான் அவளை தவிர்த்துவிட்டு,அவள் மகளை தேடினேன்.

சற்றுத் தொலைவில் அவள் வயதையொத்த குழந்தைகளோடு….

“inky pinky ponky..”

நான் வெளியே நடந்தேன்.

லேசாக மழை தூறத் தொடங்கியது.

Thursday, August 2, 2007

ரயில் மறியல் செய்தால் கடும் நடவடிக்கை - வேலு எச்சரிக்கை.

ரயில் மறியல் செய்வது, தண்டவாளத்தில் அமருவது என பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டால் அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம், கடும் நடவடிக்கை எடுப்போம் என மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் கடந்த சில வாரங்களாக ரயில் பயணிகள் சொல்லொணா துயரத்தை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக சென்னை சென்டிரல், அரக்கோணம் மார்க்கத்தில் மின்சார ரயிலில் பயணம் செய்வோர் பெரும் அவஸ்தையை சந்தித்து வருகிறார்கள்.குறிப்பிட்ட நேரத்திற்கு ரயில்கள் வருவதில்லை. ரயில்களின் நேரத்தை, அதிகாரிகள் திடீர் திடீரென மாற்றியமைத்து வருகின்றனர்.

இதனால் ஆவடி, திருவள்ளூர், பட்டாபிராம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் இதுவரை நான்கு முறை போராட்டத்தில் ஈடுபட்டுவிட்டனர்.



"பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பல வழிகள் உள்ளன. யாருக்கும் ரயிலை நிறுத்த உரிமை இல்லை. இனிமேல் இதுபோன்ற போராட்டங்களை அனுமதிக்க முடியாது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் வேலு.


எல்லாம் சரி…ஆனால் மக்களுக்கு ஒரு சட்டம், அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டமா?

எத்தனை முறை அரசியல் கட்சிகள் ரயில் மறியல்,சாலை மறியல் போராட்டங்கள் செய்திருக்கின்றன?

அதுவும் மரத்தை வெட்டி சாலைமறியல் செய்யப்பட்ட விசயம் அமைச்சர் வேலுவுக்கே நன்றாக தெரியும்.

ஏன் அப்போது அதை அவர் கண்டிக்கவில்லை? இப்போது ஏன் இவ்வளவு கண்டிப்பான அறிவிப்பு?

அரசியல்வாதிகளின் போராட்டம் கட்டுப்படுத்தப்பட்டவை… நேரடியான மக்கள் போராட்டம் கட்டுப்படுத்தமுடியாதவை என்பதை அரசியல்வாதிகளும்,அரசியல் கட்சிகளும் நன்றாகவே அறியப்பட்டிருப்பதைதான் இது காட்டுகிறது.