கீதாவிடமிருந்து ஃபோன். கீதா என் நண்பன் கல்யாணசுந்தரத்தின் மனைவி. என்னவாக இருக்கும் என்ற யோசனையுடன் ஃபோனை எடுத்தேன். எடுத்தவுடனேயே எரிச்சலாக பேசினாள்.
“அண்ணா..பேசாமா நீங்க நாளைக்கு வாக்கிங் போகும்போது இவரையும் கூட்டிட்டு போங்க..வாய கட்ட மாட்டேங்கிறார்.. ஒரு மாசத்திலே அஞ்சு கிலோ ஏறியிருக்கு.. துண்டு கீழ விழுந்தாகூட நானோ இல்ல அபியோதான் எடுத்து தரணும்..இல்லேன்னா புட்பால் மாதிரி கட்டிலுக்கு உதைத்து அப்புறமா எடுக்குறார்..இதுல சீட்டிவேற.. கருமம்..ராமநாதன் டாக்டர் என்னை கண்டபடி திட்றார்..கொலஸ்ட்ரால் ஏறியிருக்காம்..இந்த தடவ இவர விடுதறா இல்ல..பிளீஸ்னா..” என்றாள்.
எனக்கு திக்கென்றது.ஏனென்றால் ஒரு வருடத்திற்கு முன்னால் இவனோடு வாக்கிங் போய், அது எப்படி முடிந்தது என நினைவுக்கு வந்தது.இப்போது மறுபடியுமா?
“சரி..அவன்கிட்ட கொடு..”
“ஹலோ..”
“என்னடா இது..”
“இல்ல மாமா..இந்த தடவ சீரியஸ்..போயிர வேண்டியதுதான்…ட்ராக் சூட்..ஷு.. எல்லாம் வாங்கிட்டேன்..இனிமே நான் ஹெல்த் ஃபிரீக்தான்..காலைலெ ஒரு அஞ்சு மணிக்கு ஒரு மிஸ்டு கால் கொடு..நான் ரெடியா வெளியே வந்து நிக்கிறேன்..”
உண்மையில் வாக்கிங் போகும் பழக்கமெல்லாம் எனக்கு இல்லை. தூக்கம் கலைந்த அதிகாலை பொழுதுகளில் டீ கடைகளிலும்,செய்தித்தாள் விற்கும் கடைகளிலும் சற்று பொழுதை ஓட்டுவதுண்டு. இது ஒரு தவறான சித்திரத்தை என் மீது உருவாக்கி,நான் ரெகுலராக வாக்கிங் செல்பவன் என்ற ஒரு கருத்தை நண்பர்களின் வீடுகளில் ஏற்படுத்தியிருந்தது.இது என் இமேஜை சற்று தூக்கியது என்றாலும் அது உண்மையில்லை என்பதை உணர்ந்தே இருந்தேன். இந்த கல்யாணசுந்தரத்திற்கு தனியார் நிறுவனம் ஒன்றில் மார்கெட்டிங் வேலை.பெரிய உருவம்..கரிய நிறம்..முகத்தில் ஒரு குழந்தைத்தனம். விரிந்து பரந்து..110 கிலோவில் ஆறடி உயரத்திலிருந்து பேசுவான். சாப்பிடுவதை ஒரு வேள்வியாக செய்வான்.சில சமயம் உணவுக் கட்டுபாடு என்று கூறி பதினான்கு இட்லி மட்டும் சாப்பிடுவான். வரவர அவன் அளவுகளுக்கு பேண்ட்டும்,காலணிகளும் கிடைப்பதில்லை. அதைப்பற்றியெல்லாம் அவன் கலைப்பட்டதாக தெரியவில்லை. ‘அதெல்லாம் ஆர்டர் பண்ணி செஞ்சுக்கலாம் மாப்பள..’ என்று சொல்லிக்கொண்டே நாலாவது உளுந்த வடையை உள்ளே தள்ளுவான். பார்களில் வைக்கப்படும் ‘சைட் டிஷ்’சமாச்சாரங்களை நிமிடத்தில் காலி செய்வான். போன வருடத்தில் ஒரு நாள், அவன் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு பெண் ஒரு முறை கிண்டலாக ‘ஹாய்..fatty..’ என்று சொன்னதில் கோபப்பட்டு, வாக்கிங் போகும் முடிவுக்கு வந்து என்னையும் துணைக்கு அழைத்தான்.
விடிகாலையில் காரில் பீச்சுக்கு போய்விடுவோம். காந்தி சிலையருகில் காரை நிறுத்திவிட்டு நடப்போம். அங்கு முதல் நாள், எடுத்த எடுப்பில் அவனுடைய பார்வையில் பட்ட விசயம்…அருகம்புல் ஜூஸ்,வெஜிடபுள் ஜூஸ் விற்கும் வண்டிகள்தான். “இதெல்லாம் குடித்தால் உடம்புக்கு நல்லது” எனக்கூறி ஓரக்கண்ணால் பார்த்தான். “டேய்..நடக்கலாம்டா..” என்று கூறி தள்ளிக்கொண்டு போனேன். சிறிது தூரம்தான் சென்றிருப்போம்.. அதற்குள் இரண்டு இடங்களில் ஓய்வு. “இப்போது மறுபடி காந்திசிலைக்கு நடந்தால் இரண்டு கிலோமீட்டர் சரியாக இருக்கும்..” என்றான்.திரும்பி வந்து காந்திசிலை அருகிலும் சற்று ஓய்வு.பின்னர் கிளம்பினோம். காரை எடுக்கும் போதே “போகும் வழியில் சரவணபவனில் ஒரு காப்பி சாப்ட்டு போவோம்” என்றான். அதே போல் ஒரு காப்பியை குடித்து விட்டு வீட்டிற்கு போனோம்.
மறுநாள் உற்சாகமாக கிளம்பித் தயாராக இருந்தான். அன்று ஜூஸ் வண்டிகளை திரும்பிக்கூட பார்க்கவில்லை.கை,கால்களை உதறிக் கொண்டு பல பயிற்சிகளை செய்து கொண்டே நடந்தான்.பரவாயில்லையே என நினைத்தேன்.எதிரில் வந்த ஒரு வெள்ளைக்காரிக்கு ‘ஹாய்’ சொன்னான். காரில் திரும்பி வரும்போது ஒரு பாடலைக்கூட முணுமுணுத்துக்கொண்டே ஓட்டினான்.இன்று என்னிடம் சொல்லக்கூட இல்லை. வண்டியை நேராக சரவணபவனுக்குள் விட்டான். டோக்கன் வாங்கும் இடத்தில் ஒரு நிமிடம் நின்று என்னை திரும்பிப் பார்த்து “நீ இங்க நெய் ரோஸ்ட் சாப்பிட்டிருக்கியா..?” என்று கேட்டான்.புரிந்துவிட்டது. இந்த நெய்ரோஸ்ட் திட்டத்தோடுதான் வெள்ளைக்காரிகெல்லாம் ‘ஹாய்’ சொல்லியிருக்கிறான். “டேய்..வேணாம்.. இதையெல்லாம் சாப்பிட்டா வாக்கிங் போனதற்கு அர்த்தமே இல்லை” என்றேன். “ஒன்றே ஒன்று..” எனக் கூறி சிரித்தான். சில தினங்களிலேயே எங்கள் நடைப்பயிற்சி, சரவணபவனில் தினசரி அதிகாலை உணவருந்தும் பயிற்சியாக மாறிப்போயிருந்தது.ஒரு நெய்ரோஸ்டில் ஆரம்பித்த சுந்தரம் அடுத்து ரவா தோசை, மினி இட்லிஸ்,ஆனியன் ஊத்தப்பம், ஸ்ட்ராங் காப்பி என வெளுத்துக்கட்டினான். ஒரு நாள் உற்சாக மிகுதியில் ‘அபிக்கு ரொம்ப பிடிக்கும்..’ எனக்கூறி சில நெய் ரோஸ்ட்டுகளை பார்சல் செய்து வீட்டுக்கு எடுத்துப்போனதில் கீதா டென்சனாகி “நீங்க வாக்கிங் போய் கிழிச்சது போதும்” என்று கத்த,அவனுடைய மொத்த வாக்கிங் திட்டமும் ஒரு முடிவுக்கு வந்தது. அவன் வாங்கிய அந்த ஷூ, அவன் வீட்டு நாய் ‘பிரவுனி’ யின் விளையாட்டுப் பொருளாகிவிட்டது. இப்போது மறுபடியும் புது ஷூ வாங்கி மாட்டிக்கொண்டு வாக்கிங் போகலாம் எனக்கூறுகிறான். ஒன்றும் புரியவில்லை.
அன்று இரவே கீதா மறுபடியும் அழைத்து மறுநாள் வாக்கிங் போவதை உறுதி செய்து விட்டாள். “அண்ணா..அவர் எட்டரைக்கே சாப்பிட்டு தூங்கப்போய்ட்டார்..நாலரைக்கு அலாரம் வைக்கச் சொல்லியிருக்கிறார்.. பீச்சுகெல்லாம் போகவேண்டாம்னா..லயோலா காலேஜ் இங்கதான இருக்கு.. நடந்தே போகலாம்…அங்க போங்க..நீங்க ஒரு மிஸ்டு கால் கொடுத்துட்டு வந்துடுங்க.. அவர் ரெடியா இருப்பார்..”என்று மகிழ்ச்சியாக கூறினாள்.மறுநாள் இருட்டான அந்தக் காலை நேரத்தில் அவன் வீட்டுக்குப் போனபோது சுந்தரம் தயாராக இருந்தான்.புது ட்ராக் சூட், புது ஸ்போர்ட்ஸ் மாடல் ஷூ என ஒலிம்பிக் வீரனைப் போல் இருந்தான். ‘போகலாமா..’ என்று கேட்டபடி கேட்டை திறந்து வெளிவந்தான். கீதா கேட் வரை வந்து வழி அனுப்பினாள். சுந்தரம் ‘டாட்டா’ வேறு காண்பித்தான்.எனக்கு இந்தக்காட்சி சுத்த அபத்தமாக பட்டது.நடக்க ஆரம்பித்தோம். போக்குவரத்து இல்லாத சாலைகள் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருந்தன. சில தேனீர்கடைகளே ஒற்றை பல்புடன், இயங்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தன.லயோலா கல்லூரிக் காவலாளி எங்களை வாசலிலேயே மறித்து அனுமதிக்கமுடியாது என்றான். “யோவ்..நான் இந்தக் கல்லூரி பழைய மாணவன்..நாங்க உள்ளே போய் என்னையா செய்யப் போறோம்.. வாக்கிங்தான போப்போறோம்” என்று சுந்தரம் சொல்லிப்பார்த்தான் “ சார்..அட்டை இருந்தா உள்ளே போங்க..இல்லேனா முடியாது” காவலாளி உள்ளே விடுவதாக இல்லை. “சரி..உடு மாப்ளே.. இப்படியே நேரா காலேஜ் ரோடு போய் சாஸ்திரிபவன் சுற்றி வந்தால் போச்சு..” என்றான் சுந்தரம். அந்த அளவு தூரம் நடந்துவிடுவானா என்ற சந்தேகம் இருந்தாலும்,அந்த வழியில் சரவணபவன் கிளை எதுவும் இல்லை என்பது சற்று ஆறுதலாக இருந்தது..நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை சந்திப்பில் ஒரு உணவு விடுதியை பார்த்த ஞாபகம்..ஆனால் இந்த நேரத்திற்கு திறந்திருக்காது. “சரி..போகலாம்” என்று கூறி நடந்தோம்.எந்த விசயத்தை பற்றி பேசினாலும் முடிவில் ‘சப்பாத்தி சாப்பிட்டல் எடை கூடாது என்றோ, ஜூஸ் மட்டுமே குடித்தால் எடையை குறைத்து விடலாம்’ என்றுதான் முடிக்கிறான். சரி என்று அவனுக்கு பிடித்த பங்குச் சந்தை பற்றிய பேச்சை ஆரம்பித்தேன்.. “FYI ன்னா என்னடா..ஒரு எழவும் புரிய மாட்டேங்குது..” என்றேன்.உற்சாகமாக பேச ஆரம்பித்தான்.சற்று வேகமாகக்கூட நடந்தான். எல்லாம் ஸ்டெர்லிங் ரோடு சிக்னல் வரைதான்.நடையின் வேகம் குறைந்தது.பேச்சும் நின்றது.அல்லயன்ஸ் பிரான்ஸிஸ் தாண்டி வானிலை ஆராய்ச்சிமையத்தின் அருகில் நின்றே விட்டான். நன்றாக விடிந்தும் விட்டது. “முதல் நாள் கொஞ்சம் கஷ்டமா இருக்கு..இன்னைக்கு இது போதும்..நாளைக்கு இன்னும் கொஞ்சம் தூரம் போகலாம்..மெல்ல மெல்ல தூரத்தை அதிக படுத்தலாம்” என்றான். “சரி..வா..இப்படியே திரும்பிரலாம்..”என்றேன்.அவன் மெல்ல தயங்கி “ஒரு ஆட்டோ புடிச்சு திரும்பிரலாமா?..” என்று கேட்டான். “டேய்..வாக்கிங் போய்ட்டு வரேனு சொல்லிட்டு ஆட்டோ புடிச்சு திரும்பினால் அசிங்கமா இருக்கும்..” என்றேன். “ நாம கார்ல போய் வாக்கிங் போகலையா..அது மாதிரிதான் இதுவும்..வேணுமின்னா கொஞ்சம் முன்னாடியே இறங்கிக்கலாம்..இது இன்னக்கு மட்டும்தான்”என்றான் சுந்தரம். “சரி வந்துத்தொலை..ஆட்டோவ புடி” என்றேன்.
ஆட்டோ பிடித்து லயோலா தாண்டி சப்-வே முன்னாடி இறங்கிக்கொண்டோம். நான் சப்-வே நோக்கி நடந்தேன். “இப்படியே மேல போய் ரயில்வே ஸ்டேஷனை கிராஸ் பண்ணி போயிடலாம்..இது ஷாட் கட்” என்றான் சுந்தரம். வாக்கிங் போவதற்கு ஷாட்-கட் வழி கண்டுபிடிக்கும் என் புத்திசாலி நண்பன்.
" இந்த ஆட்டோ விசயம் கீதாவுக்கு தெரிய வேண்டாம்.. நாளைக்கு முழுக்க நடைதான்”என்று கேட்டுக்கொண்டான்.பரவாயில்லை இந்த முறை கொஞ்சம் அக்கறையோடுதான் இதில் ஈடுபடுகிறான் என்பது தெரிந்தது. அந்த நேரத்திலும் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது. சென்னை நகரம் அன்றைய பொழுதை துவங்கிவிட்டது.ரயில் நிலையத்தில் நுழைந்து அதன் மறுமுனையில் வெளிவந்தால் அவன் வீடு. பேசிக்கொண்டே வந்தவன் திடிரென்று நின்று..“இங்கு நீ ரவா கிச்சடி சாப்பிட்டிருக்கியா..?” என்று கேட்டான்.
அவன் காண்பித்த இடம் ரயில் நிலைய காண்டீன்.
Monday, February 4, 2008
Thursday, January 17, 2008
என்னய்யா சொல்கிறார்கள் இவர்கள்..?



புகார் காளைகளே வந்து தர வேண்டுமாமா? காளைகள் வதைபடுகிறதா இல்லையா என்பதை பார்த்தாலே தெரியாதாமா? முதலில் இந்த விளையாட்டில் கலந்து கொள்ள விருப்பம் இருக்கிறதா என்று காளைகளிடம் கேட்கப்பட்டதா எனவும் தெரியவில்லை.
முப்பது பேர் சேர்ந்துகொண்டு,குச்சியில் குத்தி,வாலைப்பிடித்து இழுத்து ஒரு காளையை அடக்குவது நம் வீர விளையாட்டாமா?
ஆயிரம் ஆண்டுகள் செய்து வந்தாலும் தவறான செயல்கள் தவறான செயல்கள்தான். இனியாவது மனிதனுக்கும்,மிருகங்களுக்கும் ஆபத்தான இந்த விளையாட்டை தடை செய்தே ஆகவேண்டும்.
Saturday, January 12, 2008
இது உண்மையா?
Wednesday, January 2, 2008
இரண்டு பெண்களும் 80 குடிகார வெறியர்களும்..
மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு ஹோட்டலை விட்டு தங்கள் ஆண் நண்பர்களுடன் வெளியே வந்த இரண்டு பெண்களிடம் 80 பேர் கொண்ட குடிகார கும்பல் ஒன்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கிறது. உடன் வந்த ஆண் நண்பர்களையும் தாக்கி பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டிருக்கிறது.இந்தியா பண்பாடு மிக்க நாடாம்..பெண்களை தெய்வமாக போற்றும் நாடாம்..!
தூத்தேறி!
பார்க்கவும்...
Tuesday, December 11, 2007
‘கல்லூரி’ -எழுத்தாளர் ஜெயமோகன்
திருக்குறளில் ஆகச்சிறந்த கவிதை எது என்று நான் ஒருமுறை மறைந்த பேராசிரியர்ஜேசுதாசனிடம் கேட்டேன். ‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுகஉலகியற்றியான்’ என்ற குறள்தான் என்றார்.பத்து வருடங்களுக்கு முன்பு, இளைஞனான எனக்கு அது விந்தையாக இருந்தது. அருமையானஅணிகளும் சொல்லாட்சிகளும் உள்ள எத்தனையோ குறள்கள் இருக்க, உள்ளர்த்தங்களேஇல்லாத நேரடியான இந்த உணர்ச்சிவெளிப்பாட்டை ஏன் தெரிவுசெய்தார் பேராசிரியர்என்ற எண்ணம் ஏற்பட்டது.
ஆனால் பேராசிரியர் சொன்னார் .”கவிஞனின் மிக உன்னத வெளிப்பாடு என்பதுஅறச்சீற்றம் அவனை மீறி வெளிப்படும் நிலைதான். இந்தக் கவிதையை கொஞ்சம் நிதானமாகசிந்தனை செய்திருந்தால் வள்ளுவரே முட்டாள்தனமாக உணர்ந்திருப்பார். உலகைஉருவாக்கியவனை அவனால் உருவாக்கப்பட்டவனே அழிந்துபோகும்படி சாபம் போடுவதாவது….ஆனால் அந்த உணர்வெழுச்சி உண்மையானது. தமிழில் வெளிப்பட்ட அறச்சீற்றங்களின்உச்சமே இக்குறள்தான். ஆகவே இது மகத்தான கவிதை…”
பாலாஜி சக்திவேல்லின் ‘கல்லூரி’ கேளிக்கையை மட்டுமே அடிப்படை இலக்காகக் கொண்டதமிழ்த் திரையுலகில் வெளிப்பட்டிருக்கும் ஆழமான அறச்சீற்றத்தின் பதிவு.ஆகவேதான் இந்த எளிமையான, அடக்கமான, படம் எனக்கு ஒரு காவியமாகவே தெரிகிறது.மேலான கலை என்பது ஒருபோதும் உத்தி சார்ந்த அலட்டல் அல்ல, செயற்கையானஎடுப்புகளும் அல்ல. அது அடிபட்டவனின் வலி முனகல் போலவோ ஆனந்தக் கண்ணீரின்விம்மல் போலவோ இயல்பாக, தன்னிச்சையாக வெளிப்படுவது.
‘கல்லூரி’ இன்றுவரை நம் திரையுலகம் முன்வைத்துவந்த கல்லூரிகளில் இருந்து அதன்யதார்த்தம் காரணமாகவே வேறுபடுகிறது. உயர்தர உடையணிந்த விடலைகள் பளபளக்கும்இருசக்கர வண்டிகளை சாய்த்துவைத்து உலகையே நக்கல்செய்து திரியும் கல்லூரிகளையேநாம் கண்டிருக்கிறோம். காதல் அல்லாமல் வேறு விஷயமே நிகழாத இடங்கள் அவை. கல்உடைப்பவர்களின், பீடி சுற்றுபவர்களின், ஆட்டோ ஓட்டுபவர்களின்அரைப்பட்டினிப்பிள்ளைகள் படிக்கும் ஒரு கல்லூரி என்பது முப்பது வருடங்களுக்குமுன்னரே தமிழ்நாட்டில் ஒரு அன்றாட யதார்த்தமாக ஆகிவிட்டாலும் கூட இப்போதுதான்அது திரையில் முகம் காட்டுகிறது.
அந்தப் பிள்ளைகள் அவர்களின் துயரங்களால், ஓயாத போராட்டத்தால் ஒன்றாகச்சேர்வதும்அவர்கள் நடுவே உருவாகும் ஆழமான நட்பும் மிகுந்த நுட்பத்துடன்காட்சிப்பதிவாகியுள்ளது இந்த திரைப்படத்தில். அவர்கள் ஒருவரை ஒருவர்‘கலாய்ப்பதும்’ அவர்களின் ஊடல்களும் திரைப்படம் என்ற கலையின் அனைத்துவல்லமைகளும் வெளிப்பட சித்தரிக்கப்பட்டிருந்தமையால் உண்மையான வாழ்க்கையை கண்எதிரே பார்த்த பிரமிப்பும் நிறைவும் ஏற்படுகிறது.
கதாபாத்திரங்களுக்கு ஏற்ப முகங்களைத் தேர்வுசெய்ததில்தான் இப்படத்தின்முதல்பெருவெற்றி நிகழ்ந்திருக்கிறது. முத்து, ஆதிலெட்சுமி, கயல் போன்றகதாபாத்திரங்கள் மிக மிக யதார்த்தமாக இருக்கின்றன. படத்தில் ஒவ்வாமை அளிக்கும்ஒரு முகம் கூட வெளிப்படவில்லை. உழைத்து வாழும் எளிய முகங்கள் தொடர்ந்துவந்தபடியே இருப்பதை பரவசத்துடன் பார்த்தபோது இந்த சாதாரணமான விஷயத்தை எண்ணிஏங்கும்படி இருக்கிறதே தமிழ் திரையுலகு என்ற கசப்பும் ஏற்பட்டது. உதாரணமாககயலின் அப்பாவாக வருபவரின் அந்த முகம்! உழைத்து குடும்பத்தைகரையேற்றத்துடிக்கும் பாசமுள்ள ஒரு தந்தையின் அந்த இனிய சிரிப்பு! அதேபோலசலீமாவாக வரும் அந்தப்பெண். தென்தமிழ்நாட்டு மரைக்காயர் முகங்களுக்கே உரியகூறுகள் துலங்குகின்றன அதில்.
நடிப்பைக் கொண்டுவருவதிலும் பாலாஜி சக்திவேல் பெருவெற்றி பெற்றிருக்கிறார்.கல்லூரி முதல்வராக நடிப்பவரின் முகபாவனைகள் தவிர அனைத்து வெளிப்பாடுகளுமே மிகமிகக் கச்சிதமாக அமைந்துள்ளன. ஒரு பொம்மையாக மட்டுமே வரமுடியும் எனஎதிர்பார்க்கவைத்த கதாநாயகி கூட அற்புதமான மெய்ப்பாடுகளை வழங்கி மனம்நெகிழச்செய்கிறார்.
நமது கிராமப்புற கல்வி நிலையங்களில் இன்றுள்ள உண்மையான அடிப்படைச் சிக்கலேபடத்தின் மையக்கருவாகியுள்ளது.
கட்டுப்பெட்டித்தனமான நம் சமூகம் ஆணும் பெண்ணும்பழகுவதை அனுமதிக்காது. ஆனால் கல்வி நிறுவனங்களில் அதற்கான வாய்ப்புஏற்படுகிறது. ஆனால் அங்கே நட்பும் பாலியல் கவற்சியும் ஒன்றுடன் ஒன்று கலந்துஇனம்பிரிக்க முடியாதபடி சிடுக்குபட்டிருக்கின்றன. கல்லூரிகளில் நிகழும்பெண்சீண்டல்கள் அடிப்படையில் இச்சந்தர்ப்பத்தை எப்படி எதிர்கொள்வது என்றுதெரியாத இளைஞர்களின் வெளிப்பாடுகள். நம் திரைப்படங்கள் தொடர்ந்து பெண்ணைச்சீண்டி மட்டப்படுத்தும் கதாநாயகர்களை முன்வைத்து அவர்களுக்கு வழிகாட்டுகின்றன.ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே காதல் மட்டுமே நிகழ முடியும் என்ற எண்ணத்தைமீண்டும் மீண்டும் அவை வலியுறுத்துகின்றன.
அதை மீறி இயல்பான நட்புடன் ஆணும் பெண்ணும் பழக முடியுமா என இளம் உள்ளங்கள் கனவுகாண்கின்றன. அவர்களை தடுப்பது இரு வல்லமைகள். ஒன்று எப்போதும் ஒழுக்கக்கட்டுப்பாட்டின் குண்டாந்தடியுடன் பார்க்கும் சமூகத்தின் கண்கள். இன்னொன்றுஅவர்களுக்குள்ளேயே எழும் இயல்பான பாலியல் இச்சை. அவ்விரண்டாலும் கடுமையானமனக்குழப்பத்துக்கும் குற்றவுணர்வுக்கும் ஆளாகிறார்கள் அவர்கள். நம்குழந்தைகளின் வளர்இளமைப்பருவத்தில் அவர்களை சுழற்றியடிக்கும் மையச்சிக்கலாக இதுவிளங்குகிறது
மிக நேர்மையுடனும் கவித்துவத்துடனும் அதை கலையாக்கியிருக்கிறார் பாலாஜிசக்திவேல். அவ்விளைஞர் குழுவுக்குள் உள்ள இயல்பான நட்பும் அதில் இருவர் அவர்களைமீறி காதல் கொள்ளும்போது ஏற்படும் உக்கிரமான குற்றவுணர்வும் அதனுடன் அவர்கள்நிகழ்த்தும் போராட்டமும் உணர்ச்சிகரமான தருணங்கள் மூலம் வெளிப்படுகின்றன.படத்தில் இளைஞர்களின் போராட்டம் என்பது எந்த புறச்சக்தியுடனும் அல்ல தங்கள்அகமன அலைகளுடன் மட்டுமே என்பது இப்படத்தின் மிக நுட்பமான சிறப்பம்சம்.
கடைசியில் தருமபுரி பேருந்து எரிப்பில் உச்சம் கொண்டு முடிகிறது படம்.துளித்துளியாக ஏழை மக்கள் உருவாக்கியெடுத்த கனவுகளை மூர்க்கமாகஅழித்துச்செல்கிறது வன்முறை அரசியலின் ஈவிரக்கமற்ற கை. ”கெடுக!” எனமூண்டெழும் ஓர் அடிவயிற்று ஆவேசம் தொனிக்க படமாக்கப்பட்டுள்ள இந்தக் காட்சிகளேதமிழ்திரையுலகின் மறக்கமுடியாத படங்களுள் ஒன்றாக இதை நிலைநிறுத்துகின்றன.
எத்தனையோ மௌன அர்த்தங்கள் கோண்டது இக்காட்சி. சிராய்ப்புகளுடனும் கண்ணிருடனும்கனவுகளுடனும் அவ்விளநெஞ்சங்கள் நாளை வெளிச்சென்று எதிர்கொள்ள தங்களைதயாரித்தபடி இருக்கும் புறவுலகம் எப்படிப்பட்டது? அவர்கள் பேணும் மலரசைவுபோன்றமெல்லிய உணர்வுகளுக்கும் தவிப்புகளுக்கும் அங்கு என்ன இடம்? அக்கனவுகளை ஈசல்சிறகுகள் போல உதிர்த்துவிட்டுத்தான் குண்டாந்தடிகளுடன் அலையும் மனிதர்களின்சூழலுக்கு அவர்கள் வந்துசேர வேண்டுமா?
‘கல்லூரி’ உண்மையில் பலநூறு ஏழை உழைப்பாளிகளின் எதிர்காலம் குறித்த கனவுகளின்கூடமாக இந்நாவலில் காட்டப்பட்டுள்ளது. தங்கையை கல் உடைக்க அனுப்பி அண்ணாவைபடிக்க அனுப்பும் கல் உடைப்பவனின் கனவு. ஊதுவத்தி சுற்றி அக்காவை படிக்கஅனுப்பும் தங்கைகளின் கனவு. அவர்கள் படிக்கும் அந்த வரலாறு இளங்கலை அவர்களுக்குஎன்ன அளிக்கப்போகிறது? குண்டாந்தடிகளும் பெட்ரோலுமாக அலையும் அரசியல்வாதிகளிடம்அல்லவா இருக்கிறது அவர்களின் எதிர்காலம்?
செழியனின் ஒளிப்பதிவு இயல்பான ஒளியில் எடுக்கப்பட்டது என்ற எண்ணத்தைஉருவாக்கும் அளவுக்கு அழகும் இயல்பான தன்மையும் உடையதாக இருக்கிறது. இயற்கையானமழை இருளை படம்பிடித்திருப்பதும் சரி, கல் குவாரி சித்தரிப்பில் ஒளிப்பதிவுக்கோணங்களும் சரி நுட்பமாக உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் உச்ச்சகட்ட காட்சி அதற்குதேவையான உழைப்பையும் பொருட்செலவையும் அளிக்காமல் எடுக்கப்பட்டது போலப் படுகிறது.
சென்ற சில மாதங்களாக ஆழமான மன இக்கட்டில் இருந்தேன். என் நுண்ணுணர்வைஅவமானப்படுத்தி எரிச்சலூட்டிய சில படங்கள், ‘பருத்தி வீரன்’ ‘கற்றது தமிழ்’போன்றவை, ஊடகங்களால் பெரும் படங்களாக முன்வைக்கப்பட்டமைதான் காரணம். ஹாலிவுட்படங்களை நோக்கி பிரதிசெய்த ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு உத்திகளைஎந்தவிதமான கலைநுட்பமும் இல்லாமல் அசட்டுத்தனமான மிகையுடன் தோன்றியவிதமெல்லாம்கையாண்டு எடுக்கப்பட்ட இலக்கற்ற முதிரா முயற்சிகள் அவை. அவற்றின்இயக்குநர்களின் அசட்டு ஆணவமும் கலை மொண்ணைத்தனமும் மட்டுமே வெளிப்படுபவை. அவைபோன்ற படங்கள் கொண்டாடப்படும் ஒரு சூழல் காலப்போக்கில் தன் கலைமனத்தையே இழக்கநேரும் என்றே நான் அஞ்சினேன்.
நல்ல படைப்பு அடிப்படையில் உண்மையான மனஎழுச்சிகளை ஒட்டி உருவாவது. எத்தனைதொழில்நுட்பச் சரிவுகள் இருந்தாலும் ஆத்மா பங்கப்படாதது. அவ்வகைப்பட்ட படம்‘கல்லூரி’. எளிமையையே வலிமையாகக் கொண்டது. செயற்கையான மன வக்கிரங்களுக்குப்பதிலாக நம்மைச்சுற்றி வாழும் வாழ்க்கையை நம்மைப் பார்கக்ச்செய்வது. ஒரு எளியசமூகம் தன்னைத்தானே பார்க்க, தன் வலிகளை தானே சொல்லிக்கொள்ள , முயல்வதன் விளைவுஇது வெற்றிபெற்றாக வேண்டியவை இவ்வகைப்பட படங்களே. இவற்றின் வெற்றியே நம்மைப்பற்றியபெருமிதத்துடன் நாம் மேலும் எதிர்பாக்கச் செய்யும். குறைகள் இருக்கின்றன,அவற்றை இப்படம் நூறுநாள் ஓடும்போது அம்மேடையிலேயே அலசவேண்டும்.
source: http://jeyamohan.in/?p=111
Tuesday, November 27, 2007
நவம்பர் குளிரும் கலங்கிய கண்களும்….
வருடத்திற்கு 10மாதங்கள் கொளுத்தும் சென்னையில் இன்று காலை மெலிதான குளிரை உணர்ந்தேன். இரவும் குளிரத்துவங்கிவிட்டது. நள்ளிரவில் வந்து குல்பி ஐஸ் விற்கிறவனின் மணியோசை நேற்றிலிருந்து கேட்கவில்லை.காலையில் கோலம் போடும் பெண் தலையில் கம்பளிக்குல்லா அணிந்திருக் கிறாள். .வாசலில் நிறுத்திய வாகனத்தில் காலையில் ஈரம் படிந்திருக்கிறது. எதிர்வீட்டில் இருக்கும் முதியவர் இரவானதும் எப்போதும் திறந்திருக்கும் சன்னலை சாத்துகிறார். வீட்டுக்குள் எப்போதாவது வருகிற சிட்டுக்குருவியைப்போல நம் நகரத்திற்கு குளிர்காலம் வந்திருக்கிறது. முடிந்தால் பின்னிரவில் ஒரு மெது நடை நடக்கலாம். எதிரில் நீங்கள் வந்தால் புன்னகைத்துக்கொள்ளலாம்.
###############################
கமலஹாசனும் எஸ்பி பாலசுப்ரமணியனும் தொலைக்காட்சியில் பாடிக்கொண்டிருக்கிறார்கள். முகம் தெரியாதவர்களின் கைதட்டல் ஒலித்து ஓய்கிறது.ஏக் துஜே கேலியேவில் ஒரு சோகப்பாடல். கண்கலங்குகிறது.
ஒருமுறை வெயில்காலத்தில் வடபழனி பேருந்துநிலையத்தில் கேட்ட பாடலைப்பாடியவர்... கண்தெரியாத ஒரு பெண்...'கண்கள் இரண்டும்' என்று உன்னைக்கண்டு பேசுமோ'என்று கீச்சுக்குரலில் துவங்கும் பழைய பாடல். சில்லறை கொடுக்கலாம் என்று எடுத்துக் கையில் வைத்திருந்தேன். பேருந்து கிளம்பும் நேரம்வர நடத்துனர் விரட்ட பாதிப் பாடலுடன் அவள் இறங்கி வெயிலில் நடந்துபோனாள். கண்கலங்கியது.
ஒரு பிறந்தநாள் பார்ட்டியில் நல்ல குடிபோதையில் நண்பர் பாடிய 'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது.'. என்று பாடத்துவங்கி பாதியில் அழுதார். ஏனோ கண் கலங்கியது.
ஊரிலிருக்கும் அப்பாவிடம் எனது பையன் பாட்டுப்பாடு என்று கேட்க அவர் நான் சின்னவனாகத் தூளியில் இருக்கையில் பாடியதாக 'சிங்காரப்புன்னகை கண்ணாரக்கண்டாலே..' என்று குரலுடைந்து பாடினார். கண்கள் கலங்கி வழிந்தன.
பயணத்தில் சிலநேரம். தூக்கம் வராத இரவுகளில் எப்போதாவது...அழவைக்கும் பாடல்கள் உன்னிடமும் இருக்கிறதா நண்பா?
(இணையத்தில் மேய்ந்தபோது கண்ட இவ்வரிகளை எழுதியது ஒளிப்பதிவாளரும்,விகடனில் 'உலக சினிமா' எழுதிவரும் செழியன் அவர்கள்)
###############################
கமலஹாசனும் எஸ்பி பாலசுப்ரமணியனும் தொலைக்காட்சியில் பாடிக்கொண்டிருக்கிறார்கள். முகம் தெரியாதவர்களின் கைதட்டல் ஒலித்து ஓய்கிறது.ஏக் துஜே கேலியேவில் ஒரு சோகப்பாடல். கண்கலங்குகிறது.
ஒருமுறை வெயில்காலத்தில் வடபழனி பேருந்துநிலையத்தில் கேட்ட பாடலைப்பாடியவர்... கண்தெரியாத ஒரு பெண்...'கண்கள் இரண்டும்' என்று உன்னைக்கண்டு பேசுமோ'என்று கீச்சுக்குரலில் துவங்கும் பழைய பாடல். சில்லறை கொடுக்கலாம் என்று எடுத்துக் கையில் வைத்திருந்தேன். பேருந்து கிளம்பும் நேரம்வர நடத்துனர் விரட்ட பாதிப் பாடலுடன் அவள் இறங்கி வெயிலில் நடந்துபோனாள். கண்கலங்கியது.
ஒரு பிறந்தநாள் பார்ட்டியில் நல்ல குடிபோதையில் நண்பர் பாடிய 'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது.'. என்று பாடத்துவங்கி பாதியில் அழுதார். ஏனோ கண் கலங்கியது.
ஊரிலிருக்கும் அப்பாவிடம் எனது பையன் பாட்டுப்பாடு என்று கேட்க அவர் நான் சின்னவனாகத் தூளியில் இருக்கையில் பாடியதாக 'சிங்காரப்புன்னகை கண்ணாரக்கண்டாலே..' என்று குரலுடைந்து பாடினார். கண்கள் கலங்கி வழிந்தன.
பயணத்தில் சிலநேரம். தூக்கம் வராத இரவுகளில் எப்போதாவது...அழவைக்கும் பாடல்கள் உன்னிடமும் இருக்கிறதா நண்பா?
(இணையத்தில் மேய்ந்தபோது கண்ட இவ்வரிகளை எழுதியது ஒளிப்பதிவாளரும்,விகடனில் 'உலக சினிமா' எழுதிவரும் செழியன் அவர்கள்)
Thursday, November 22, 2007
இரத்த ஞாயிறு(Bloody Sunday)..திரைப்பார்வை

இந்தப்படம் 2002-ம் ஆண்டே வெளிவந்திருந்தாலும் எனக்கு இப்போதுதான் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.1972-ம் ஆண்டு அயர்லாந்து மனித உரிமை அமைப்பினர் நடத்திய ஒரு அமைதிப்பேரணியில், இங்கிலாந்து ராணுவத்தினர் நடத்திய கொடுரமான தாக்குதலை,அந்த உண்மைச் சம்பவத்தை கதைக்களனாக கொண்டு இந்த படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அந்த மோதலின் போது 27 பேர் சுடப்பட்டார்கள்..அதில் 13 பேர் கொல்லப்பட்டார்கள்.


வடக்கு அயர்லாந்து நகரமான டெர்ரியில்(Derry) நடந்த இந்த சம்பவத்தை ஒரு documentary style-ல் எடுத்திருக்கிறார் இயக்குனர் Paul Greengrass. அதை மிகச்சிறந்த முறையில் hand-held camera முறையில் படமெடுத்திருக்கிறார் Ivan Strasburg என்ற ஒளிப்பதிவாளர்! close-up காட்சிகளை அருமையாக பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த மாதிரி மக்கள் கூட்டம் அதிகமாக பங்கேற்கும் வெளிப்புற காட்சிகளை படமெடுக்கும் போது அந்த இடத்தின் topography-ஐ ஒரிருமுறை காட்டிவிட்டு close-up-களை நிறைய காட்டுவார்கள். அப்படி காட்டும்போது படம்பார்ப்பவர்களை சிரமப்படுத்தக்கூடாது. இதில் அழகாக செய்திருக்கிறார்கள் இயக்குனரும், ஒளிப்பதிவாளரும்.


கலவரத்தின் போது வெளிப்படும் வலி,வேதனை,சோகம் போன்றவற்றை அற்புதமாக இந்தப்படம் வெளிப்படுத்துகிறது. பேரணியின் ஒரு பிரிவினர் தன்னிச்சையாக பிரிந்து சென்று தாக்குதலை ஆரம்பிக்கும் அந்த mob psychology-ஐ கூட இயல்பாக காட்டுகிறார்கள். அங்கங்கு சில பிரச்சார நெடிகளும், நாடகத்தன்மைகளும் இருந்தாலும் ஒரு நல்லப் படம் பார்த்த திருப்தியை அளித்தது.இந்த படம் 2002-ம் ஆண்டு பெர்னிலில் நடந்த திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதை பகிர்ந்துகொண்டது
Subscribe to:
Posts (Atom)
