Tuesday, November 27, 2007

நவம்பர் குளிரும் கலங்கிய கண்களும்….

வருடத்திற்கு 10மாதங்கள் கொளுத்தும் சென்னையில் இன்று காலை மெலிதான குளிரை உணர்ந்தேன். இரவும் குளிரத்துவங்கிவிட்டது. நள்ளிரவில் வந்து குல்பி ஐஸ் விற்கிறவனின் மணியோசை நேற்றிலிருந்து கேட்கவில்லை.காலையில் கோலம் போடும் பெண் தலையில் கம்பளிக்குல்லா அணிந்திருக் கிறாள். .வாசலில் நிறுத்திய வாகனத்தில் காலையில் ஈரம் படிந்திருக்கிறது. எதிர்வீட்டில் இருக்கும் முதியவர் இரவானதும் எப்போதும் திறந்திருக்கும் சன்னலை சாத்துகிறார். வீட்டுக்குள் எப்போதாவது வருகிற சிட்டுக்குருவியைப்போல நம் நகரத்திற்கு குளிர்காலம் வந்திருக்கிறது. முடிந்தால் பின்னிரவில் ஒரு மெது நடை நடக்கலாம். எதிரில் நீங்கள் வந்தால் புன்னகைத்துக்கொள்ளலாம்.


###############################

கமலஹாசனும் எஸ்பி பாலசுப்ரமணியனும் தொலைக்காட்சியில் பாடிக்கொண்டிருக்கிறார்கள். முகம் தெரியாதவர்களின் கைதட்டல் ஒலித்து ஓய்கிறது.ஏக் துஜே கேலியேவில் ஒரு சோகப்பாடல். கண்கலங்குகிறது.

ஒருமுறை வெயில்காலத்தில் வடபழனி பேருந்துநிலையத்தில் கேட்ட பாடலைப்பாடியவர்... கண்தெரியாத ஒரு பெண்...'கண்கள் இரண்டும்' என்று உன்னைக்கண்டு பேசுமோ'என்று கீச்சுக்குரலில் துவங்கும் பழைய பாடல். சில்லறை கொடுக்கலாம் என்று எடுத்துக் கையில் வைத்திருந்தேன். பேருந்து கிளம்பும் நேரம்வர நடத்துனர் விரட்ட பாதிப் பாடலுடன் அவள் இறங்கி வெயிலில் நடந்துபோனாள். கண்கலங்கியது.

ஒரு பிறந்தநாள் பார்ட்டியில் நல்ல குடிபோதையில் நண்பர் பாடிய 'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது.'. என்று பாடத்துவங்கி பாதியில் அழுதார். ஏனோ கண் கலங்கியது.

ஊரிலிருக்கும் அப்பாவிடம் எனது பையன் பாட்டுப்பாடு என்று கேட்க அவர் நான் சின்னவனாகத் தூளியில் இருக்கையில் பாடியதாக 'சிங்காரப்புன்னகை கண்ணாரக்கண்டாலே..' என்று குரலுடைந்து பாடினார். கண்கள் கலங்கி வழிந்தன.

பயணத்தில் சிலநேரம். தூக்கம் வராத இரவுகளில் எப்போதாவது...அழவைக்கும் பாடல்கள் உன்னிடமும் இருக்கிறதா நண்பா?

(இணையத்தில் மேய்ந்தபோது கண்ட இவ்வரிகளை எழுதியது ஒளிப்பதிவாளரும்,விகடனில் 'உலக சினிமா' எழுதிவரும் செழியன் அவர்கள்)

No comments: