Wednesday, November 14, 2007

இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டேன்லி பேசியது...

சுப்ரபாரதிமணியனின் தேர்தெடுக்கப்பட்டக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலான

" THE LAST SYMPHONY "

வெளியிட்டு விழா சமீபத்தில் திருப்பூரில் நடந்தது. அக்கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் எஸ் எஸ் ஸ்டேன்லி(மெர்க்க்குரிப்பூக்கள், ஏப்ரல் மாதத்தில், புதுக்க்கோட்டையிலிருந்து சரவணன், கிழக்குக் கடற்கரை சாலை ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ) பேசியது::


சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்டக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சுப்ரபாரதிமணியன் போன்ற நல்ல எழுத்தாளர்கள் தமிழ் திரைப்பட உலகத்திற்குள் வர வேண்டும் என அழைக்கிறேன்.ஆனால் பன்னாட்டு நிறுவனங்களும், வெளிநாட்டினரும் தமிழ் திரைப்படங்களில் முதலீடு செய்ய ஆரம்பத்திற்கும் இந்த காலகட்டம் சிக்கலானது. தமிழ் திரைப்படம் மக்களின் தமிழ் வாழ்வும், கலாச்சார அம்சங்களும் கொண்ட படங்களைத் தயாரித்து முன்னோடிகளாக இருக்கும் பதினாறு வயதினிலே முதல் சேது வரையிலான சிறு தயாரிப்பாளர்கள் வரும் வாய்ப்புகள் அடைபட்டு போகும் துர்ப்பாக்கியங்கள் பன்னாட்டு நிறுவன முதலீட்டு முயற்சியில் உள்ளன. சுப்ரபாரதிமணியனின் "சாயத்திரை", "தேனீர் இடைவேளை" போன்ற நாவல்கள் முன்பே ஆங்கிலத்தில் வெளியாகி உள்ளன என்பது ஆரோக்கியமான விசயம்.

எனக்கு ஆர்குட் இணைய தளத்தில் அறிமுகமானவர் சுப்ரபாரதிமணியன்.இணைய தளம் போன்றவற்றில் எழுத்தாளர்கள் இயங்குவதும்,இலக்கியம் குறித்தும், திரைப்படத்துறை குறித்தும் விவாதிப்பது இன்றைய எழுத்தாளர்களுக்கு மிகவும் தேவையானது.

வாசிப்பதில் அக்கறை கொண்ட நான் சுந்தரராமசாமியின் நாவலொன்றை படமாக்குகிற ஆசையில் ஆரம்ப கட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன். அசோகமித்திரன் , பிரபஞ்சன் போன்றவர்களின் படைப்புகளும் திரைப்படமாகும் நேர்த்தி பெற்றவை. காலம் அதற்கு உதவி புரிய வேண்டும்.

நான் என்னுடைய கதைக்கு பொருத்தமானவர்களை தேர்வு செய்கிறேனே தவிர கதாநாயகர்களுக்குத் தகுந்த மாதிரி கதை அமைப்பதில்லை.

இப்போதுள்ள கதாநாயகர்களிட்மும், தயாரிப்பாளர்களிடமும் படத்தில் நீங்கள் ஒரு டாக்டராக வருகிறீர்கள் அல்லது பொறியாளராக வருகிறீர்கள் என்று சொன்னால் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள். ஆனால் ஒரு ரவுடியாக வருகிறீர்கள் என்று சொன்னால் உடனே கதையைக் கேட்பார்கள் இப்போது ரசிகர்கள் இதைத் தான் விரும்புகிறார்கள் அதற்குத் தகுந்தமாதிரிதான் படத்தின் பெயர்களும் பொறுக்கி, பொல்லாதவன், கெட்டவன் என்று உள்ளன. இதற்கு ரசிகர்கள்தான் காரணம்.

தமிழில் நிறைய நல்ல படங்கள் வரும் போது நாமும் ஒரு இயக்குனராக இருக்கிறோமே என கூச்சமாக இருக்கும். என்னுடைய லட்சியம் நல்ல படம் தர வேண்டும் என்பதுதான். ஆனால் அதற்குப் பொருளாதாரம் வேண்டும் அதனால் இப்போது சம்பாதித்து விட்டு புதுமுகங்களை வைத்து நல்ல படங்களை எடுப்பேன். மலையாளத்தில் மட்டும் நல்ல படங்கள் வருகின்றன என்று சொல்ல முடியாது. தமிழிலும் மிக நல்ல படங்கள் சமீபத்தில் வந்திருக்கின்றன..

நல்ல படங்கள் வரவேண்டுமென்றால் பார்வையாளராகிய நீங்கள் மோசமான படங்களை நிராகரிக்க வேண்டும். நீங்கள் உங்கள் பார்வையை மாற்றும் போதுதான் நாங்கள் மாறுவோம்..

எல்லோரும் திருப்பூர் என்றால் 10,000 கோடி ரூபாய் அந்நிய செலவாணி தரும் நகரம் என்றுதான் நினைக்கிறார்கள் .ஆனால் அதற்கு வேறு பார்வை உண்டு. பனியனுக்குத் தேவையான அதிநவீன இயந்திரங்களை எல்லாம் தயாரிக்க முடிந்த வெளிநாட்டினரால் பனியனை ஏன் தயாரிக்க முடியவில்லை.அங்கு பனியன் தயாரித்தால் சாயக்கழிவுகளால் அவர்கள் நாட்டில் சுற்றுச்சூழல் சீர்கேடு இருக்கும். சுகாதாரக் கேடு இருக்கும். இதை மனதில் வைத்துக் கொண்டு திருப்பூர் போன்ற நகரங்களைக் குப்பைகூடையாக்கிக் கொண்டுருக்கின்றனர்..திருப்பூரைப் பற்றி நான் ஒரு படம் எடுக்கும் போது இதையெல்லாம் என் படத்தில் கவனத்தில் எடுத்துக் கொள்வேன்.. சமூக மனிதனை எனது கதாநாயகனாகக் கொள்வேன். அவன் சமூகத்தில் இருந்து அந்நியனானவனாக இருக்கமாட்டான்..

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60711086&format=html

No comments: