Wednesday, July 4, 2007

சினிமா ஷூட்டிங்

சிவகங்கைச் சீமைக்கு ஒரு பயணம்.

போவது ஒரு சினிமா படபிடிப்புக்கு.

அந்தப் பட இயக்குனர் என் நண்பர்.அவரின் அழைப்பின் பேரில் சென்றிருந்தேன். திருச்சியிலிருந்து மூன்றரை மணி நேரம் பஸ்ஸில் பயணித்து அந்த ஊரை அடைந்தேன்.நான் போவதற்கு முன்பே மொத்த யூனிட்டும் கிளம்பி நகருக்கு வெளியே சென்றுவிட்டது.புரடக்சன் மானேஜர் போனில், நான் தங்கும் விடுதி போன்ற தகவல்களை சொல்லி ஒரு மணி நேரத்தில் தயாராக இருக்கும்படியும்,வண்டி அனுப்புவதாகவும் சொன்னார். சொன்னபடி கார் அனுப்பி படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அழைத்துக்கொண்டார்.

ஓடும் பஸ்ஸில் மாணவர்கள் பாடி,ஆடும் பாடல்காட்சி படமாக்கப்படுகிறது. காட்சி பஸ்ஸுக்கு உள்ளேயும்,வெளியே இருந்தும் மாறிமாறி எடுக்கப்படுகிறது.ஒரு பஸ் வாடகைக்கு எடுக்கப்பட்டு, அதில் மாணவ,மாணவியர் நிரப்பப்பட்டு உடன் பொதுமக்களும் பயணிப்பதாக காட்சி.பஸ்ஸின் மேற்கூறையைச் சிறிது பிரித்து உள்ளே சூரிய வெளிச்சம் வருவது போல் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஒளியைக்கூட, கூட்டி குறைப்பதற்காக சிலர் குடையுடன் பஸ்ஸின் மேற்புறம் அமர்ந்திருக்கிறார்கள். இந்த பஸ் இல்லாமல் நாலைந்து வேன்கள்,கார்கள் மற்றும் படப்பிடிப்பு யுனிட் வண்டிகள் என ஒரு convoy. இந்த வண்டிகள் காமிரா கோணத்தில் மாட்டாமல் பஸ்ஸுக்கு முன்னும் பின்னும் மாறிமாறி வரும்.

சார்..இங்க Low-வா வைக்கமுடியாது”- இது காமிராமேன்


“அப்படியா…சரி மாத்திக்கலாம்”-இது இயக்குனர்.

காமிரா கோணம் மாற்றப்பட்டு “ஒரு மானிட்டர் பாத்துரலாம்”-இது இயக்குனர்.

மானிட்டர் பார்க்கப்பட்டு, பஸ் கிளம்பத் தயாராகிறது.ஒரு ராணுவ பட்டாலியன் மாதிரி எல்லோரும் புயலென கிளம்பி, கிடைத்த வாகனத்தில் தொத்திக்கொள்கிறார்கள்.

“சைலென்ஸ்…சவுண்ட்…காமிரா..”


“ரோலிங் சார்”

“ஆக்சன்”

மொத்த யூனிட்டும் உஷாராகி, நடிகர்கள் உதடசைத்து,உணர்ச்சிகளை முகத்தில் கொண்டுவந்து நடிக்க..இயக்குனர் மைக்கில் உத்தரவுகளை தர,உதவி இயக்குனர்கள் கையில் எழுதும் ‘pad’ களை பார்க்க..சிலர் ‘field’ கிளியர் செய்ய, ‘நாகரா’ சவுண்ட் மற்றும் ‘pilot track’ விசயங்களை கவனித்துக் கொள்ள, அந்த சில வினாடி காட்சியை வியர்வையில் குளித்தபடி ‘காமிரா’வில் படம் பிடிக்கிறார் ஒளிப்பதிவாளர்.

“கட்”

“ஷாட் ok..”

உடனே மொத்த கூட்டமும் கலைந்து மறுபடியும் கலந்து கொண்டேயிருந்தது. அடுத்த ஷாட்டுக்கு வசனம் சரி பார்க்கப்படுகிறது.கலைந்து போன மேக்கப் சரி செய்யப்படுகிறது.காமிரா ஒரு கலப்பையை போல தூக்கிச் செல்லப்பட்டு வேறு கோணத்தில் வைக்கப்படுகிறது.அதற்கேற்றவாறு lights அமைக்கப்படுகிறது. இதற்கு நடுவில் டீ..,ஜுஸ்,மோர் என்றுஅனைவருக்கும் வழங்கப்படுகிறது. இயக்குனரின் ஒரு வார்த்தைக்கு, மொத்த கூட்டமும் ஒரு வாத்திய கோஷ்டியை போல இயங்குவதை பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தது. பல காட்சிகள்,பல கோணங்களில் எடுக்கப்படுகின்றன. பஸ் நிற்கும் போதெல்லாம் அந்தந்த பகுதியை சேர்ந்த மக்கள் கூடி நின்று படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கிறார்கள். பெண்கள் தங்கள் முகம் சினிமாவில் தெரிந்துவிடுமோ என வெட்கத்தோடு சிரிக்கிறார்கள்.

காமிரா இப்போது பஸ்ஸின் வெளியே,படியின் அருகில் பொருத்தப்பட்டு மக்கள் ஏறுவது போலவும்,இறங்குவது போலவும் படமாக்கப்படுகிறது.

“யாரும் காமிராவை பாக்காதீங்க…நாயன கோஷ்டி…கொஞ்சம் ஓடி வந்து ஏறுங்க… கூடக்காரம்மா…பஸ்ஸு ஸ்லோ ஆகும்போது கூடையை எடுத்து தலையில் வைச்சுகிட்டு பஸ்ஸ பார்த்து வாங்க…இந்தாங்கம்மா..நீங்க இந்த ரண்டு ஸ்கூல் பசங்களையும் ரண்டு கையிலேயும் பிடிச்சுகிட்டு ஏறுங்க…பைய்ய தோளில் மாட்டிகீங்க…காமிராமேன்…ஒரு மானிட்டர் பாத்துரலாமா? இல்லே ஷாட் போயிரலாமா?”

“ஷாட் போயிரலாம் சார்..”

இரண்டாவது டேக்கில் ஷாட் ok ஆகிறது.

"எனக்கு ok உங்களுக்கு?"

"எனக்கும் ok"

"பிரேக்"

இதை சொன்ன அடுத்த நொடி அனைத்து வாகனங்களும் ரிவர்ஸ் எடுத்து மதிய உணவு உண்ணும் இடத்திற்கு விரைந்தன. நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.எல்லோருக்கும் தட்டுகள் வினியோகிக்கப்பட்டு, நேர்த்தியாக பறிமாறப்படுகிறது.

சரியாக ஒருமணி நேரம் கழித்து அனைவரும் கிளம்பி திருப்பத்தூர் செல்லும் சாலையில் பயணிக்கிறோம்.இப்போது காமிரா பஸ் வாசற்படியின் மேலே,பஸ்ஸின் கூறையிலிருந்து கீழே பார்க்கும்படி பொருத்தப்படுகிறது. மாணவர்கள் கும்பலாக பஸ்ஸின் படிக்கட்டில் தொத்திக்கொண்டு பயணிப்பதாகக் காட்சி.

“பசங்களா பார்த்து…கவனம்..உள்ளே இருக்கிறவங்க வெளியே தொங்குறவுங்கள இழுத்துப் புடிச்சுகுங்க…டிரைவர் அண்ணே..ரொம்ப ஸ்பீட் வேணாம்… கொஞ்சமா, பசங்க முடி காத்துல பறக்கணும்…அவ்வளவுதான்..ரெடி..ஸ்டார்ட்”

அந்தக் காட்சி படமாக்கப்படுகிறது.

“உட்கார்ந்துகிட்டு இருக்கறவங்க மூஞ்சிclose up எல்லாம் இப்பவே எடுத்துடலாம்… அதெல்லாம் வெளி லைட்டோடு வேணும்..பஸ்
Exterior-கூட அப்புறமா எடுத்துக்கலாம்”

“ok..ஸார்”

மாணவ,மாணவிகளின் முகங்கள்…கண்டக்டர் டிக்கட் கொடுப்பது…கவலை தோய்ந்த ஒரு முதியவரின் முகம்…குழந்தையுடன் பயணம் செய்யும் தாய்..பூ கட்டிக்கொண்டிருக்கும் பெண்…சிவனடியார் போன்ற ஒரு சாமியார்…டிரைவரின் முகம்…எத்தனைவிதமான முகங்கள். அனைத்தும் எடுக்கப்படுகின்றன.

“ஸார்..லைட் போய்க்கிட்டிருக்கு…”

“வீல் ஷாட் எடுத்துரலாம்…டிரைவர் அண்ணே..சொல்லும்போது ஸ்டீயரிங்கை நல்லா வளைச்சு வளைச்சு ஓட்டுங்க…வீல் திரும்பறது நல்லா தெரியனும்”

காமிரா, முன் சக்கரத்தை பார்த்தவாறு பொருத்தப்பட்டு அந்தக் காட்சியும் எடுக்கப்படுகிறது. இப்போது எல்லோரும் கூடி நின்று பேசுகிறார்கள். ‘Light meter’-ஐயும் வானத்தையும் பார்த்துப் பார்த்து பேசுகிறார்கள். கிட்டத்தட்ட அனைவருமே கைகடிகாரத்தில் நேரம் பார்க்கிறார்கள். நேரம் மாலை 6 மணியை நெருங்குகிறது.

“pack up”-இது இயக்குனர்.

உடனே மொத்தக் காட்சியும் மாறுகிறது. காமிரா பிரிக்கப் பட்டு பேக் செய்யப்படுகிறது.மேக்கப் அழிக்கப்படுகிறது..போட்டிருந்த உடைகள் உருவப்பட்டு, அவரவர்களின் சொந்த உடைகள் திரும்பக் கொடுக்கப்படுகின்றன. யூனிட் வண்டிகள் சாமான்களை அள்ளிக்கொண்டு நகருக்குத் திரும்ப தயாராகின்றன. இயக்குனரும்,ஒளிப்பதிவாளரும் தனி காரில் கிளம்பினார்கள்.என்னையும் அதில் ஏற்றிக்கொண்டனர்.நகருக்குத் திரும்பி நானும் இயக்குனரும், அவருடைய அறைக்கு சென்று சில விசயங்களை விவாதித்தோம்.பிறகு நான் என் அறைக்கு திரும்பினேன். வியர்வையில் உடல் கசகசத்தது.குளித்து உடை மாற்றியதும் சற்று நன்றாக இருந்தது.

ஒரு திரைப்படத்தின் உருவாக்கம் மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கின்றது. கதைக்கான கரு தெரிவு செய்யப்பட்டு,திரைக்கதை அமைக்கப்பட்டு…வசனங்கள் எழுதப்படுகின்றன.பிறகு நடிக,நடிகையர் தேர்ந்தெடுக்கப்பட்டு artist combination சரி பார்க்கப்பட்டு, தயாரிப்பில் தலை அசைக்கப்பட்டவுடன் படப்பிடிப்புக்குப் போகிறார்கள். காமிராவும் அதற்குண்டான உபகரணங்களும் ஒரு வண்டியில் வருகின்றன.கிரேனும்,குண்டுகுண்டாக இரும்பு சமாச்சாரங்களும் இன்னொறு வண்டியில் வருகின்றன.உடைகளை தொங்கவிட்டுக்கொண்டு..உள்ளேயே ஒரு தையல் இயந்திரத்தோடு costume வேனும் வருகிறது.உணவு மற்றும் பானங்களுடன் மற்றொரு வாகனம்…இது இல்லாமல் ஜெனரேட்டர் வாகனம், Art department என்று பல சமாச்சாரங்கள்…

இந்த சாதனங்களும்,வாகனங்களும் அவற்றை இயக்குபவர்களும், ஒரு இயக்குனரின் கற்பனையை ஒரு close to real போன்றதோர் தோற்றத்தை film-ல் உருவாக்கப் பாடுபடுகிறார்கள்.நடிக,நடிகையர் மற்றும் இயக்குனர்களின் உழைப்பைப் போலவே,வெளி உலகுக்கு தெரியாத இந்த தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு மகத்தானது. அவர்கள் எல்லோரிடமும் ஒரு கனவு இருக்கத்தான் செய்கிறது. தாங்கள் சார்ந்திருக்கும் துறையில் என்றாவாது ஒரு நாள் பெரிய ஆளாக வந்துவிடுவோம் என்ற நம்பிக்கைதான்,பணத்திற்கு அப்பாலும் அவர்களை இயங்க வைக்கிறது.

கதவு தட்டப்படும் சப்தம் கேட்கிறது.

எழுந்து கதவை திறக்கிறேன். இரவு உணவு வந்துவிட்டது.இரண்டு பெரிய காரியரில். காரியர் சாப்பாடு என்பது சினிமாவின் ஒரு அடையாளம்.

“என்னப்பா..இப்பவே கொண்டுவந்துட்டே?”

“சார்..வழக்கமா கொண்டுவர நேரம்தான்…first shot காலை ஆறரைக்குன்னு சொன்னாங்க..சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு படுத்தாத்தான் காலையில் பிரஷ்ஷா இருக்கும்”

உணவு கொண்டுவந்தவனுக்கு முப்பது வயது இருக்கலாம்.கண்களில் ஒரு ஒளியோடு, ஆனால் தளர்ச்சியாகக் காணப்பட்டான்.தமிழ் சற்று வித்தியாசமாக பேசினான்.சினிமா கம்பெனிகளில் பலதரப்பட்ட மொழி பேசுபவர்கள் இருப்பது ஒரு சாதாரண விசயம்.

இவனுக்கு என்ன மாதிரி கனவு இருக்கும்?

இவன் உணவு சப்ளை செய்யும் ஒரு ஆள்.. சினிமா சூட்டிங்க்கு உணவு சப்ளை செய்யும் கம்பெனியை சொந்தமாக ஆரம்பிக்கும் கனவாக இருக்குமா?

“சார்..தண்ணி பிடிச்சு வைச்சுட்டேன்..வேறெதுவும் வாங்கி வரணுமா? மானேஜர் சொல்லியிருக்கிறார்..நீங்க மெதுவா சாப்பிடுங்க…சாப்பிட்டுவிட்டு காரியர மட்டும் வெளியே வச்சுருங்க..நா வந்து அப்புறமா எடுத்துக்கிறேன்”

“நீங்க எவ்வளவு நாளா இந்த வேலைல இருக்கீங்க?”

ஒரு நிமிடம் நிமிர்ந்து என்னை கூர்ந்து பார்த்துவிட்டு
“அஞ்சு வருசமா இருக்கேன்”

“என்ன பிளான் வச்சுருக்கீங்க? சொந்தமா இதே மாதிரி ‘கேட்டரிங்’ கம்பெனி ஏதும் ஆரம்பிக்கிறதா எண்ணம் இருக்குதா?”

“அப்படியெல்லாம் எந்த ஐடியாவும் இல்ல சார்..”

“ஐடியா இல்லையா? அப்புறம் என்னதான் செய்யப் போறீங்க எதிர்காலத்தில… இதிலேயே எவ்வளவு காலம்தான் ஓட்டுவீங்க? குடும்பத்த எப்படி சமாளிப்பீங்க?”

“ஏதோ காலம் ஓடிட்டிருக்கு.. பார்க்கலாம் சார்…”

“என்னப்பா இது…ஒரு பிளானும் இல்லேனா எப்படி?”

கதவின் அருகில் போனவன் திரும்பி..சில வினாடிகள் விட்டு
“சார்.. என் அப்பா கன்னட சினிமாவில் ஒரு தயாரிப்பாளர்…சொல்ல,சொல்ல கேட்காம ரெண்டு படம் எடுத்து, ரெண்டுலேயும் தோத்துப் போனார்…இப்போ பக்கவாதம் வந்து ‘மண்டியா’வுக்கே போய்ட்டார்…நான் சென்னைக்கு வந்துட்டேன்…இதுல எங்க சார் பிளான் பண்றது?....வரேன் சார்..”

கதவு மூடப்பட்டது.




.

Wednesday, June 27, 2007

பிரதிபா பட்டீலும் அருள்வாக்கும் !!

‘நான் உயர் பதவியில் அமர்வேன் என்று எனக்கு அருள்வாக்கு கிடைத்தது’
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதிபா பட்டீல் பேட்டி.


இதுதொடர்பாக தனியார் டெலிவிஷன் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரதீபா பட்டீல் கூறியதாவது:-


அருள்வாக்கு..

‘நான் சமீபத்தில் பிரம்மகுமாரிகள் உலக ஆன்மீக பல்கலைக்கழத்தின் தலைவர் தாதிஜியை சந்தித்து பேசிய போது, எனக்கு ஓர் இனிய அனுபவம் கிடைத்தது. தாதிஜியின் உடலில் பாபா (பிரம்மகுமாரிகள் பிரிவின் நிறுவன தலைவர் மறைந்த லெக்ராஜ்) ஆவி வந்து அவர் மூலம் பாபா எனக்கு அருள்வாக்கு சொன்னார். நான் அதிர்ஷ்டசாலி என்றும் மிகப்பெரிய பொறுப்பு எனக்காக காத்து இருப்பதாகவும் அதற்கு நான் தயாராக இருக்குமாறும் கூறினார்.’

இவ்வாறு பேட்டியில் பிரதிபா பட்டீல் தெரிவித்து உள்ளார்.
(தினத்தந்தி-27/06/2007)

ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேறும் அப்துல் கலாம் அவர்கள் குழந்தைகள் மத்தியில் விஞ்ஞானத்தையும்,நாட்டின் வளர்ச்சியையும் பற்றிய கனவுகளை உருவாக்கினார். இந்த அம்மையார் உள்ளே வரும் போதே ஆவி,அருள்வாக்கு என்று குழந்தைகளை குழப்பத் தொடங்கிவிட்டார்.

நாட்டின் மிக உயர்ந்த பதவியில் அமரப்போகும் ஒரு பெண்மணி,தன் தனிப்பட்ட நம்பிக்கையை வெளிப்படையாக தெரிவித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. பல்வேறு மதத்தினரும் வாழ்ந்து வரும் ஒரு நாட்டின் ஜனாதிபதியாக வாய்ப்பு உள்ள ஒருவர் இப்படி கூறுவது மற்ற மதத்தினரின் நம்பிக்கையை பெறமுடியாமல் போகலாம்.

பதவி என்றதும் எல்லா மக்களுமே உணர்ச்சிவசப்படுகிறார்கள் !

Friday, May 18, 2007

ஒரு பகல்நேர ரயில் பயணம்-ஒலிகளின் ஊடாக...

‘இது குருவாயூர் எக்ஸ்பிரஸ் டிரெயின் தானே?..’
‘ஆமா…’
‘மாலா…இந்த வண்டிதான்…ஓடி வா..ஏறு’

‘நான் ஒத்தாளுதான்…’
‘சரி..உட்கார்ந்துக்குங்க’

‘யோவ்..வழியவிட்டு உள்ளே போய்யா..எருமை மாடு மாதிரி வழிய மறிச்சிகிட்டு..’
‘உள்ளே எங்கய்யா எடமிருக்கு? இவரு வந்துட்டாரு பெரிய இவராட்டம்..’
‘யோவ்..உன்னாலே உள்ளே போக முடியலேனா இறங்குய்யா கீழே…பொம்பல ஆளுங்க படியிலே நிக்குது…யோய்..வண்டி கிளம்பிருச்சுய்யா..’

‘இந்தாம்மா…எங்க வந்து பைய்ய வக்கிற…?போம்மா அந்த பக்கம்..’
‘என்னையா இது..அங்கேயிருந்து எல்லாரும் இப்பிடியே சொன்னா நாங்க எங்கதான் போறது..!’
‘இங்க எங்கம்மா இடமிரூக்கு?’
‘எம் பேரன் மட்டும் இங்கன கீழேயே உட்காரட்டும்..சின்ன புள்ளைங்க.. இந்தாடா.. பைய்ய வச்சிகிட்டு இங்கனயே உட்காரு..’
‘பாட்டி….’
‘எழவெடுத்தவனே…உட்காருடா…எல்லாம் உங்க ஆத்தாகாரினாலே வந்த வினை..’

‘பரதேசி பசங்க..22,000 ஆயிரம் கோடி லாபம்கிறாங்க…இன்னும் ரண்டு வண்டியத்தான் விட்டா என்ன?

‘காமாட்சி…தண்ணி பாட்டில் இருக்குதில்ல…?’
‘கருமம்…உங்களதானே தண்ணி புடிச்சு பையிலே வைக்க சொன்னேன்..ஒரு வேலையே உருப்படியா செய்யிரதில்ல..’
‘நீ வச்சிருப்பேனு நான் நினச்சேன்..சரி விடு..இங்க விப்பான்.. வாங்கிக்கலாம்..’
‘ஆமாம்..ஒரு பாட்டில் பத்து ரூபாம்பான்…காசு விளையுதில்ல…புள்ளைங்க எதாவது கேட்டா எறிஞ்சு விழறது…இங்க வந்து வாரி இறைக்கவேண்டியது…விடுடி சேலைய..’

‘அண்ணே..கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க…கால்ல ஒரு சின்ன ஆக்சிடெண்ட்…ரொம்ப நேரம் நிக்கமுடியாது..’
‘இங்க ஏற்கனவே மூணுபேரு…இந்த பையனையும் சேர்த்தா நாலு பேரு.. இதுல நீங்க எங்க வந்து உட்காருவீங்க..?’
‘ஒண்ணும் பிரச்சனையில்ல அண்ணே…தம்பி இங்க வா..மாமா மடியில உட்கார்ந்துக்கோ..’
‘அப்ப்பா..’
‘சும்மா வா ராஜா…இங்க பார்…செல்போன்ல வீடியோ கேம்ஸ் விளையாடலாம்…’

‘ஏம்மா..பச்ச குழந்தய வச்சுகிட்டு…ரிசர்வேசன் பண்ணி வரக்கூடாது?எங்கம்மா போற?.’
‘நாகர்கோயில்’
‘அட பாவமே…நைட் எட்டறைக்குதானே போவான்..அதுவரைக்கும் நின்னுகிட்டா போவ..?’
‘மேடம்..பைய்ய வேன்னா இங்க கீழே வச்சுகிங்க..கொஞ்ச நேரம் கழித்து கீழேயே உட்கார்ந்துடுங்க..கொழந்தைய வச்சுகிட்டு எவ்வளவு நேரம் நிப்பீங்க..? தனியாவா மார்த்தாண்டம் போறீங்க..?’
‘இல்ல..எங்க அண்ணன் ஒருத்தர்..அதோ அங்க நிக்கிறார்..’
‘அப்போ சரி..’
‘பாட்டி…அந்த பைய்ய கொஞ்சம் தள்ளுங்க…இருமல் மருந்த எடுக்கணும்..’

‘ஏன்யா மேலே வந்து விழுறீங்க…பொம்பளைங்க இருக்கிறது கண்ணுக்கு தெரியலே..?’
‘ஏம்மா இவ்வளவு கூட்டத்திலே வந்துகிட்டு ‘பொம்பல ஆம்பலெனு’ இம்சைய கொடுத்துகிட்டு..’

‘இல்ல…நான் இருக்கிறது சத்தீஸ்கர்…பூரா நக்ஸலைட் ஏரியா.. முதலில் நக்ஸலைட்டுக்கு காசு கட்டிவிட்டுதான் வேலையை தொடங்கணும். ரோடுபோட ஒரு காண்டிராக்ட் காரனும் வரமாட்டேங்குறான். அரசாங்க அதிகாரியெல்லாம் டவுன்ல தான் இருப்பாங்க…சாயந்தரம் நாலரைக்கே வீட்டுக்கு போய்டுவாங்க…அந்த ஊரு உருப்பட ரொம்ப நாளாகும்...ரண்டு வருசம் கழிச்சு இப்போதான் ஊருக்கு போறேன்…மெட்ராஸ்ல இந்த பய படிக்கிறான்…அக்கா மகன்..அதுதான் இங்க வந்து இவனையும் கூட்டிகிட்டு போறேன்..நீங்க..?’

‘நமக்கு மதுரை…கூட்டுறவு பாங்க்லே வேலை..வீட்டுகாரம்மா டீச்சர்… லீவு விட்டதிலிருந்து இந்த பயக தொந்தரவு தாங்க முடியல.. மெட்ராஸ்ல ஒய்பு சித்தப்பா வீடு இரூக்கு… வில்லிவாக்கம்…அதான் வந்து ஒரு ரவுண்டு அடித்து விட்டு போறோம். பய புள்ளைங்க பத்தாயிரத்தை காலி பண்ணிடுச்சுக…போத்தீஸ் போனோம்…பாக்கட் காலி…முறைக்காதம்மா…உள்ளததானே சொல்லுறோம்… கடையா அது… லட்சம் பேர் உள்ளார இருக்கான்…எப்படியா இந்த ஊர்ல மனுசன் இருக்கான்…!’

‘இட்லி…வடை…மசாலா தோசை..’
‘யோவ்..இந்த கூட்டத்தில எங்கயா போய் இதெல்லாம் விக்க போறே..’
‘சாமி…நீங்க இன்னைக்கு ஒரு நாளைக்கு இதுல போறீங்க…நாங்க டெய்லி போறோம்..இட்லி..வடை..மசால்தோசை..’

‘நாளைக்கே திரும்ப வேண்டியதுதான்…மச்சானுக்கு ஓரகடத்தில் ஒரு இடம் பார்த்திருக்கு…ஒரு ரண்டு வருசம் கடைய நடத்திட்டோம்னா.. அப்புறம் நின்னுக்கலாம்…இனிமே அந்த ஏரியாதான் டெவலப்பாக போகுதாம்…நிறைய பேக்ட்டரியெல்லாம் வரப் போகுதாம்…பார்ப்போம்..நாம ஒரு பிளான் போடுறோம்..ஆண்டவன் என்ன நினைக்கிறானோ..’

‘அம்மா..ஒண்ணுக்கு வருது..’

‘ஹலோ..ஜெயந்தி…நான்தான்…என்னாச்சு? மூர்த்தி கிளம்பிட்டானா இல்லையா? …சொதப்பிட்டான்…சரி…செட்டியாருக்கு போன் செஞ்சு செவ்வா கிழமை செட்டில் செஞ்சுடுலாம்னு சொல்லு….பாரமொவுண்ட்டா? அட நீ வேறே…குருவாயூர் எக்ஸ்பிரஸ்…அன் ரிசர்வுடு கம்பார்ட்மெண்ட்…நின்னுகிட்டு போறேன்..சரி..சரி..நா கூப்பிடுறேன்..’

‘காப்பி..காப்பி…..காப்பி..’

‘பாத்திமா…சேட் வீடு எங்க இருக்கு? விளக்கு தூண்லயா?..ஒண்ணு செய்யு..நீ மட்டும் போயிட்டு வந்துடு…அவன பார்த்தாலே எனக்கு எரிச்சல் வருது…நாங்கு நேரில இடம் வித்து பணம் வந்திருக்கு….ஒரு வார்த்த சொன்னானா பார்த்தியா? வட்டி பணத்தையாவது கொடுத்திருக்கலாம்லே..’

‘என் பேரா…நாகலச்சுமி… எல்.கே.ஜி….இப்பவா..? விருதுநர்க்கு போறோம்..எங்கப்பா ஐஸ் பாக்டரி வச்சுருக்கார்..’

‘பிரதர்…சட்ட பாக்கெட்ல ஒரு மாத்திரை இருக்கு..பிரசருக்கு..கொஞ்சம் எடுத்து கொடுங்க..பிளீஸ்…கைய கூட எடுக்க முடியல..என்ன எழவு கூட்டம்டா இது..’

‘விழுப்புரத்திலே இஞ்சின் மாத்துவான்யா….’

‘அட கருமாந்திரமே..இங்க பார்ரா கூட்டத்தை…இவங்க எல்லோரும் இந்த வண்டியிலே ஏறப் போறாங்களாமா? கிழிஞ்சது…’

‘பெரியவனே…வடை சாப்பிடுறியா…நல்லா இருக்கும்டா..’

‘பிரட் சாண்ட்விச்…சமோசா…’
‘ஏங்க…புளியோதரை இருக்கா? பிரட் சாண்ட்விச் எல்லாம் யாருங்க சாப்பிட போறாங்க?’
‘அட நீங்க வேற..இது இல்லேனு சொன்னா வெள்ளைக்காரன் கம்பளைண்ட் எழுதி போட்டுட்டு போயிருவான்..நம்ம தாழி அறுந்துடும்..’

‘ஏய்..வெள்ளரிபிஞ்சு…உப்பு, மிளகாய் தூள் இருக்கா…?’
‘இந்த கூட்டத்திலே எப்படி தடவி தர்றது…இந்தா…நீயே தடவிக்க..’

‘இந்தாம்மா..கொஞ்ச நேரம் நீ உட்கார்ந்துக்கோ…காலுக்கு நல்லாயிருக்கும்… நான் கொஞ்ச நேரம் நிக்கிறேன்…’

‘அய்யா…இந்தாங்க தண்ணி..முதல்ல மாத்திரைய சாப்பிடுங்க…கண்ணெல்லாம் ஒரு மாதிரி இருக்கு..’

‘பாப்பா..குழந்தைய ஏங்கிட்ட கொடு…கொஞ்ச நேரம் நான் வச்சிருக்கேன்…’

‘பெரியம்மா…நான் திருச்சிலே இறங்கிடுவேன்…அப்ப நீ இங்க உட்காந்துக்க…’

‘புண்ணியமா போச்சு…நீ நல்லா இருப்பய்யா…’

இந்திய ரயில்கள் ஒரு பயணம் அல்ல…ஒரு அனுபவம் என்று ஒரு வெளிநாட்டு சுற்றுலா பயணி எழுதியிருந்தார்.

Thursday, May 17, 2007

கமல்ஹாசனின் சொந்தப் பிரச்சனை

என் நண்பனின் வீடு.

எல்லோரும் டி.வி பார்த்துக்கொண்டிருக்கிறோம்.டி.வியில் ஏதோ திரைப்படத் துறையினரின் விழாவை காண்பித்துக்கொண்டிருந்தார்கள்.முக்கிய நடிகர்கள்,இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள் என்று ஒரே கூட்டம்....அவ்வப்போது காமிரா, கூட்டத்தில் அமர்ந்திருப்போரையும் காண்பிக்கிறது.என் நண்பனின் தங்கை ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லிக்கொண்டே வருகிறாள்.

இந்த முறை காமிரா கமல்ஹாசனை காண்பிக்கிறது.அருகில் அமர்ந்திருக்கும் கெளதமியையும் காண்பிக்கிறது.உடன் அந்த இருவரின் குழந்தைகளையும் காண்பிக்கிறது.அந்த காட்சியை ஒருவித குறுகுறுப்புடன் எல்லோரும் பார்க்கிறார்கள்.அப்போது என் நண்பனின் அப்பா கேட்கிறார்" இந்தப் பெண் யார்?" என்று.அவர் கேட்டது கெளதமியை குறித்து.என் நண்பன் திடுக்கிட்டு"கூட நடிக்கிற பொண்ணு" என்று தடுமாறி கூறினான்.

ஆனால் அவனுடைய தங்கை, கமல்-கெளதமி குறித்த முழுக் கதையையும் அவிழ்த்து விட்டுவிட்டாள்.நண்பன் டென்சனாகி " போடி உள்ளே" என்று கத்தினான்.அவளும் பதில் சண்டைக்கு தயாராகி இருவரும் உள்ளே சென்றார்கள்.அவ்வளவாக சினிமா தெரியாத அந்த அப்பா அதிர்ந்து விட்டார்."இருவரையும் விட்டுவிட்டு மூன்றாவதாக இவளை சேர்த்துக்கொண்டானா? அதுவும் ஒரு குழந்தையோட.." என்று என்னிடம் கேட்டார்.நான் மய்யமாக தலையசைத்தேன்.அப்போது வந்த நண்பன் "அப்பா அதெல்லாம் அவங்களோட சொந்த விசயம்...அவங்களோட நடிப்பை மட்டும் தான் நாம பார்க்கனும்" என்று சற்று உரத்தகுரலில் கூறினான். அப்பா அமைதியாக சற்று நேரம் டி.வி பார்த்தார்.

பிறகு என்னிடம் திரும்பி "அது அவுங்க சொந்த விசயம்தான்...ஆனா இந்த உறவுகளை பற்றி சரியாக புரிந்து கொள்ள முடியாத அவர்களின் குழந்தைகளின் மனநிலை எப்பிடியிருக்கும்? இவர்களை பற்றிய செய்திகளை பத்திரிக்கையில் படிக்கும் நம் வீட்டு குழந்தைகளின் ஒழுக்கம் பற்றிய சிந்தனை என்னவாக இருக்கும்?...இதை எப்பிடி அவர்களின் சொந்த பிரச்சனை என்று கூறமுடியும்?" கேட்டார்.

உடனே என் நண்பன் இடைமறித்து "உனக்கு டயமாகுது.கிளம்பு.." என்றான்

Tuesday, May 15, 2007

அழும் பெற்றோர்கள்..

விஜய் டி.வியில் 'ஜுனியர் சூப்பர் சிங்கர்' என்ற நிகழ்ச்சி ஒளி பரப்பாகி வருகிறது. இதில் பங்கேற்கும் குழந்தைகள் கடும் பயிற்சிக்கு பின்னரே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். பல்வேறு கட்டங்களாக இந்த தேர்வு நடை பெறுகிறது. சில கட்டங்களில் சில குழந்தைகள் தோல்வியுற்று போட்டியிலிருந்து விலக்கப் படுகிறார்கள்.அப்போது நிகழ்ச்சியின் நீதிபதிகளாக வருபவர்கள் தோல்வியுற்ற குழந்தைகளுக்கு ஆறுதலாக பேசி, இன்னும் நல்ல முறையில் பயிற்சி செய்தால் பல வெற்றிகளை அடையமுடியும் என்று நம்பிக்கையூட்டுகிறார்கள்.கலங்கிய கண்களுடன் அந்த குழந்தைகள் மேடையைவிட்டு விலகுகிறார்கள்.

சின்ன வயதில் அந்த தோல்வியை அச்சிறு குழந்தைகளின் மனம் ஏற்று கொள்ளும் நிலையில் பக்குவப்பட்டு இருக்குமா? பாடுவதற்கு பயிற்சி அளிக்கும் பெற்றோர்கள், வெற்றி அல்லது தோல்வி அடையும்போது அதை எதிர்கொள்ளும் வகையில் குழந்தைகளை தயார் செய்கிறார்களா என்பது கேள்விக்குறியாகவே தெரிகிறது. ஏனென்றால் தோல்வியுற்று குழந்தைகள் மேடையை விட்டு இறங்கும் போது அவர்களின் பெற்றோர்களும் கண்கலங்கி உணர்ச்சிவசப்படுகிறார்கள்.

குழந்தைகளு க்கு ஆறுதல் சொல்லி, அவர்களின் மனநிலையை மாற்ற வேண்டிய பெற்றோர்களே கண்கலங்குவது குழந்தைகளின் மனநிலையை நிச்சயம் பாதிக்கும். பெற்றோர்கள் இதை கவனத்தில் எடுத்து கொள்வார்களா?