Wednesday, September 5, 2007

கவிஞர் சினேகனுடன் ஒரு திடீர் சந்திப்பு.



என் நண்பர்கள் சிலர் கவிஞர் சினேகனை ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்கப் போனபோது நானும் உடன் செல்ல வேண்டிவந்தது.

தோழா தோழா , அவரவர் வாழ்க்கையில் (படம்:பாண்டவர் பூமி), ஆடாத ஆட்டமெல்லாம் (படம் : மௌனம் பேசியதே) பருத்திவீரன், ராம் போன்ற படங்களில் கருத்தாழமிக்க பாடல்களையும்,…கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஒடிப்போலாமா? போன்ற உலகப் புகழ் பெற்ற பாடல்களையும் எழுதியவர். மிகவும் இளஞராக இருந்தார். கிடைத்த சந்தர்ப்பத்தில் நானும் சில விளக்கங்களைக் கேட்டேன். அவர் கருத்துக்களுடன் முழுக்க முழுக்க ஒத்து போகிறோமோ இல்லையோ அவர் சிரித்த முகத்துடன்,மிக நம்பிக்கையுடன் பதிலளித்த விதத்தைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

“அதென்ன ‘டைனமிக் திருமணம்’? எதற்கு அந்த ‘கட்டிப்புடி’ திருமண வாழ்த்து கலாட்டக்கள்..என்ன சொல்ல வருகிறீர்கள்?”

“இந்த ‘கட்டிப்புடி’ விசயம் மட்டுமே எல்லோருக்கும் தெரிவது மிகவும் வருத்தத்துக்குரிய விசயம்..இது சில ஊடகங்கள் செய்த வேலை. இதை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் முதலில் எங்கள் அமைப்பின் நோக்கத்தினை புரிந்து கொள்ள வேண்டும். Dynamic Self Awakening என்ற இந்த அமைப்பு (http://www.dynamicdsa.com)15 ஆண்டுகளுக்கு மேலாக செயல் பட்டு வருகிறது.மலேசியாவில் ஆரம்பிக்கப்பட்டு, இப்போது சென்னையிலும், தமிழகத்தின் பல ஊர்களிலும் கிளை பரப்பி செயல் பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம் மனிதர்களை, தங்களை பற்றி தாங்களே அறிந்து கொள்ளச் செய்வது, அதன் மூலம் மன வலிமை கூடி மொத்த சமூகத்திற்கும் பயனுள்ளதாக மாற்றுவது,மூட பழக்க வழக்கங்களை ஒழித்து மனித சமூகத்தை நாகரீக அமைப்பாக மாற்றுவது.

“இதற்கு எந்த வகையில் நீங்கள் உங்கள் உறுப்பினர்களை தயார் படுத்துகிறீர்கள்?”

“இதற்கென்று பயிற்சி வகுப்புகள் நடத்தப் படுகின்றன. இந்த பயிற்சி ஐந்து நிலைகளுக்கு நடத்தப்படுகின்றன. முதல் நிலை பயிற்சி வகுப்பு மூன்று தினங்கள் எனத் தொடங்கி ஐந்து நிலைகள் வரை இந்த வகுப்புகள் போகின்றன. மூன்று தின முதல் நிலை வகுப்புக்கு ரூபாய் 2000/= வசூலிக்கப் படுகிறது.இதில் உணவு, தங்குமிடம் போன்றவற்றிக்கு ஆகும் செலவும் சேர்ந்து அடங்கும்.பயிற்சி திருப்தி அளிக்காவிட்டால் முழுப் பணமும் திருப்பித்தரப்படும். இது லாப நோக்கத்திற்காக நடத்தப்படும் பயிற்சி வகுப்புகள் அல்ல.உண்மையில் சொல்ல வேண்டுமானால் இதில் ஆர்வமாக இருப்பவர்கள் கணிசமான அளவில் தங்கள் சொந்தப் பணத்தை செலவு செய்து இந்த வகுப்புகளை நடத்தி வருகிறார்கள்.

“சரி.. பயிற்சி பற்றி சொல்லுங்கள்..”

“இது முழுக்க முழுக்க ஒருவர் தன்னைப் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ளும் விதமாக பயிற்சிகள் இருக்கும்.அதன் மூலம் தங்களுடைய மனபலம்,செய்யும் தொழிலின் நேர்த்தி, சமூக உறவு குறித்த பார்வைகள் போன்றவற்றில் மிகப் பெரிய மாறுதல்களை நிச்சயம் உணர்வீர்கள்.இது உறுதி.இந்த பயிற்சிகள் எந்த ஒரு மத,இன,நாடு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு நடத்தப்படவில்லை. இது மனிதம் சார்ந்தது.இது ஒரு மாதிரியான self- awakening training .எவரையும் கட்டாயப்படுத்தி இதில் சேர்க்க மாட்டோம். விருப்பமுள்ளவர்களை இணைத்து இப்பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது. இந்த பயிற்சிகளின் அனுபவத்தை வார்த்தையால் கூறமுடியாது.ஒரு முறை இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்தால்தான் அதை உணரமுடியும்.

“அதெல்லாம் சரி..இதில் எங்கே வந்தது ‘டைனமிக் மேரேஜ்’..?”

“இந்த பயிற்சிகளில் சமூகத்தை நாம் எப்படிப் பார்க்க வேண்டும்,அதை எந்த வகையில் மாற்ற வேண்டும் எனவும் சொல்லித்தரப்படுகிறது. இந்த அமைப்பினரின் இல்லத் திருமணங்கள் முழுக்க, தந்தை பெரியாரின் சுயமரியாதை திருமண முறைப்படி நடத்தப்படுகின்றன. வேத மந்திரங்கள் கிடையாது,வரதட்சணை கிடையாது. இது போன்ற பல சீர்திருத்தங்கள் இதில் அடங்கும். அதில் ஒரு அங்கமாகத்தான் வாழ்த்துக்களை ஒருவரை ஒருவர் தழுவி பரிமாறிக் கொள்கிறார்கள்.இது தான் இப்போது சர்ச்சைக்குரிய விசயமாகி இருக்கிறது.

“இந்த தழுவுதல் ஒரு சமூக ஒழுக்கப் பிழையை நோக்கி எடுத்துச் சென்று விடாதா?..”

“இல்லை..அப்படி ஆகாது. தழுவுதல் என்பது ஒரு உயிரினச் செயல்.மனிதனும் ஒரு உயிரினமே. தழுவுதலின் போது மனிதர்களிடையே அன்பும்,பாதுகாப்பு உணர்வும் அதிகரிப்பதாக மனவியல் நிபுணர்கள் சொல்லியிருக்கிறார்கள். மனிதர்களிடையே இயல்பாக நடைபெற வேண்டிய இந்த தழுவல்கள் ஒரு பாலின உணர்ச்சியாகவும், ஆபாச நடவடிக்கையாகவும் நம் சமூகத்தில் பார்க்கப் படுகிறது. இதை மறுபடியும் இயல்பான ஒரு செயலாக மாற்றவே இந்த முயற்சி. இதை சரியான முறையில் பார்ப்பதற்கும்,செயல் படுத்துவதற்கும் இந்த பயிற்சி வகுப்புகளில்
சொல்லித்தரப்படுகிறது. எங்கள் அமைப்பினர் இதில் தெளிவாகவே உள்ளார்கள். இதை ஒரு செக்ஸ் நடவடிக்கையாக பார்ப்பது அவரவர் மனோபாவத்தை பொறுத்தது”

“இந்த பிரச்சனையின் போது வந்த எதிர்ப்பை எப்படி சமாளித்தீர்கள்?”

“அவை ஒரு மோசமானத் தருணங்கள்…எல்லாத் திசைகளிலிருந்தும் எதிர்ப்பு வந்தது. ஏன் நான் இருக்கும் சினிமாத் துறையிலிருந்தும் கண்டனங்கள் வந்தன. நான் வசிக்கும் தெரு முழுக்க என்னைக் கண்டித்து சுவரொட்டிகள். என் வீட்டிற்கே கூட்டமாக வந்து போராடப்
போவதாக ஒருவர் அறிவித்திருந்தார். எல்லாவற்றையும் சமாளித்தேன். அதற்கான மனவலிமையை நான் சார்ந்திருக்கும் இந்த அமைப்பின் பயிற்சிகள் எனக்கு அளித்தன.”


“தங்களின் சில பாடல்களுக்கு எதிர்ப்பு வந்ததே…குறிப்பாக..’கல்யாணந்தான் கட்டிகிட்டு’…இந்த மாதிரி பாடல்களை எந்த நிர்பந்த்தில் எழுதுகிறீர்கள்?”

“திரைப்பட பாடல்கள் என்பது இயக்குனரின் கதைக்கும்,கற்பனைக்கும் ஏற்றவாறு எழுதப்படுவது. வியாபார ரீதியில் எழுதப் படுவது. .இதே சினிமாவில் தான்`அவரவர் வாழ்க்கையில்’ போன்ற பாடல்களையும் எழுதியிருக்கிறேன்.என் தீவிர எழுத்துக்களை என்னுடைய கவிதை நூல்களில் தேடுங்கள்.”

இதற்கு பின்னால் எங்கள் பேச்சு பல திசைகளிலும் போனது. அதில் அவர் அ.தி.மு.க வில் சேர்ந்தது பற்றியும், அவர் சந்தித்த எதிர்ப்புகள் எப்படி ஒரு சாதீய பிரச்சனையாக பரிணாம வளர்ச்சி அடையப் பார்த்தது குறித்தும் பேசினோம். அதற்கு கவிஞர் சினேகன் அளித்த பதில்கள் அவ்வளவாக திருப்தி அளிக்கவில்லை. கவிஞர் சினேகனின் சில திரைப்பட பாடல்கள் சர்ச்சைக்குரியதாக இருப்பது போலவே அவருடைய கருத்துகள் சிலவும் சர்ச்சைக்குரியதாக இருக்கிறது.ஒரு முறை ஆபாசமாக எழுதும் பெண் கவிஞர்களை சென்னை அண்ணா சாலையில் வைத்து கொளுத்த வேண்டும் என்று கூறியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ச.மனோகர்.

sa.manoharan@gmail.com



இது சம்பந்தமான சுட்டிகள்:

http://www.dynamicdsa.com/home.htm

http://bsubra.wordpress.com/2007/03/19/lyricist-snehan-is-raping-tamil-culture-by-innovative-marriage-ceremonies/

http://www.aaraamthinai.com/cinema/cini-katturai/june30katturai.asp

3 comments:

வடுவூர் குமார் said...

இங்க இப்படி ஒரு பதிவா?
கண்ணில் படவே இல்லை.
நீங்கள் வவ்வால் பதிவில் போட்ட பின்னூட்டம் மூலம் வந்தேன்.
பேட்டி நன்றாக இருக்கு.

ச.மனோகர் said...

குமார்...தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

வவ்வால் said...

கட்டிப்புடி வைத்தியம் புகழ் சினேகனுடன் பேசினார்களா , உரையாடல் ரொம்ப தமாசா இருந்து இருக்கும் போல!

இந்தக்கட்டிப்புடி பயிற்ச்சிக்கு 2000 ரூபாய் எல்லாம் ரொம்ப அதிகமா இருக்கே, அப்படி பணம் கொடுத்து இந்த நாகரீகத்தை கத்துக்க ஆள் இருக்கா நாட்டில!