Monday, January 3, 2011

ஜெயமோகனிடம் ஒரு கேள்வி!

அன்பு ஜெமோ..

தங்களின் இந்த 'கீதை வழிகள்' கட்டுரை பல விசயங்களை தொட்டுச் செல்வதே அதன் சிறப்பு. இறை நம்பிக்கை சம்பந்தமான விசயத்தில் ஒரு வரி வருகிறது..'நான் என் தர்க்கத்தின் தடியுடன் போய் அவர்களை உடைக்க முயல்வதில் என்ன பொருள் இருக்க இயலும்?' என்று. சரி.. தடியை எடுத்துச் செல்லவேண்டாம். மெல்லிய குரலில் அவர்களை விலகிச் செல்ல கேட்கலாம் இல்லையா? நம்பிக்கை என்ற பெயரில் மற்ற மனிதர்களுக்கு கிடைக்க வேண்டிய பயனை தடுப்பவர்களை எப்படி கையாள்வது? பாலத்தை ராமர் கட்டினார் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை, அது ஒரு நம்பிக்கைதான் என்று அகழாராய்ச்சி நிபுணர்கள் சொல்லிவிட்டபின்பு, சொன்ன நிபுணர்களின் கையை பிடித்து திருகி அவர்களை பணி மாற்றம் செய்யும்அளவுக்கு சமூகத்தை அழுத்தும் இந்த நம்பிக்கையாளர்களை எப்படி சமாளிப்பது? இயற்கையை மனிதன் ஆராய்ந்து அதை தன் வசப்படுத்தும் போது மனிதன் இப்போது வைத்திருக்கும் இந்த இறை நம்பிக்கைகள் உதிர்ந்து விட வாய்ப்புள்ளதாலே மனிதன் அஞ்சுகிறான். அந்த அச்சம்தான் மற்ற மனிதர்களுக்கு இடைஞ்சலை கொடுக்கின்றது. இறை நம்பிக்கை என்பது தனி மனித விசயமாக இருக்கும்போதே அது ஒரு சமூக பிரச்சனையாகவும் இருப்பதால் அதை விவாதத்துக்குள் இறக்குவதை தவிர வேறு வழியில்லை. இறை நம்பிக்கையை முழுக்க முழுக்க தனிமனித விசயமாக பார்க்கமுடியாது என்பது என் கருத்து.

மற்றபடி 'கீதை' படிப்பதற்கு ஒரு நல்ல நூல். அதன் கதைகளில் ஒருவித விட்டேத்தியான, நம் கைகளில் ஒன்றும் இல்லை போன்ற ஒப்பியம் கலந்த சித்தர்கள் போக்கு தெரிவதாகவே நான் கருதுகிறேன்.

சஞ்சீவி மனோகரன்.



அன்புள்ள மனோகர்

நான் சொன்னவற்றைணிவ்வாறு வலியுறுத்த விரும்புகிறேன். தர்க்கம் போலவே நம்பிக்கையும் ஒரு கருவி. இரண்டுக்கும் பயன்கள் உண்டு. பயன்படுத்தப்படும் ஒரு பொருளை பயனற்றது என்று வாதிடுவதும் சரி வெல்வதும் சரி நடக்காத காரியம். நம்பிக்கையுடன் மோதும் தர்க்கம் வீணாக இயங்கும் இயந்திரம் போன்றது. நம்பிக்கை அரசியல்,சமூகவியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும்போது அது வேறு ஒரு தளத்தை அடைகிறது. கண்டிப்பாக அது எதிர்க்க படவேண்டியதே. அது இவ்விவாதத்துக்குள் வராது. இது தனிமனித ஆன்மீக தேட்டம் தொடர்பான விவாதம் மட்டுமே. நம்பிக்கையின் அடிப்படையிலேயே உலகில் எப்போதும் சர்வாதிகாரங்களும் வன்முறைகளும் கட்டமைக்கப்படுகின்றன. தர்க்கம் என்பது ஜனநாயகத்தின் அடிக்கட்டுமானமாகும். இன்னொன்று உண்டு. ஒரு சமூகச் செயல்பாட்டில் தர்க்கமும் நம்பிக்கையும், மதமும் ஆன்மீகமும் , அறிவியலும் மூடநம்பிக்கைகளும் மோதியபடியேதான் இருக்க வேண்டும். அச்சமூகம் அந்த முரணியக்கம் மூலமே முன்னகர முடியும். சொல்லப்போனால் சமூகத்தில் சிந்தனை என்பது நிகழ்வதே ஒரு விவாதமாகத்தான். இந்த கீதை விவாதத்திலேயே ஒரு தரப்பை அப்படி முன்னிறுத்தி பிறவற்றுடன் விவாதிக்கும் போக்கை நாம் காணலாம். அதற்கும் தனிமனித ஆன்மீக தேட்டத்துக்கும் தொடர்பில்லை என்பதே என் எண்ணமாகும்.

ஜெயமோகன்.

Saturday, August 8, 2009

களைவதாம் நட்பு

சில தினங்களுக்கு முன் என் நண்பனின் மனைவி உடனே என்னை அவள் வேலை பார்க்கும் அலுவலகத்துக்கு வரச் சொன்னாள்.

மறுபடியும் நண்பன் பிரச்சனையை ஆரம்பித்துவிட்டான் எனப் புரிந்தது. நண்பன் குடிப் பழக்கம் உள்ளவன். நண்பன் நல்லவன்தான். ஆனால் குடித்துவிட்டால் அவனுள்ளே இருக்கும் மிருகம் வெளியே வந்துவிடும். குடி என்றால் அப்படி ஒரு குடி ... தடுமாறி கீழே விழும் வரை குடிப்பான். குடித்துவிட்டு வாயில் வந்ததை பேசுவான். ஒரு விருந்தில் நன்றாக குடித்துவிட்டு தன் பத்து வயது மகளை தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு 'இவளை கலெக்டராக்கப் போறேன்..' என்று கூறி டான்ஸ் ஆடி,சண்டை போட்டு, அழுது மொத்த விருந்தையும் பாழாக்கினான். அதிலிருந்து இவனோடு எந்த பொது நிகழ்ச்சிக்கும் அவன் மனைவி வருவதில்லை. இப்போது என்ன புதிய பிரச்சனை என்று யோசித்தவாறு அங்கு சென்றேன். அலுவலக பியூனிடம் நான் வந்த விஷயத்தை அவளிடம் சொல்லுமாறு கூறிவிட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டேன். இப்படி பிரச்சனை வரும் போதெல்லாம் அவள் என்னிடம் புகார் சொல்லுவதும் நான் அவனிடம் பேசி சரி செய்வதும் வழக்கமான ஒன்றுதான் என்றாலும் அவள் வேலை செய்யும் அலுவலகத்துக்கே என்னை வரச் சொன்னது பிரச்சனையின் தீவிரத்தை மெலிதாக உணர்த்தியது. நண்பனின் மனைவி உள்ளேயிருந்து வரும்போதே புயலாக வந்தாள். முகத்தில் எரிச்சலும், கோபமும் நன்றாகவே தெரிந்தது.

"இதுக்குமேல தாங்க முடியாது...என்னையும் குழந்தையையும் விட்டுட சொல்லுங்க.. நாங்க போயிடறோம்.." என்று சற்று உரத்த குரலில் என்னை மிரட்டுவது போல் சொன்னாள்.

எனக்கு எரிச்சலாக வந்தது. என்னிடம் ஏன் இப்படி ஆத்திரத்தை காண்பிக்கிறாள் எனப் புரியவில்லை.

"என்ன நடந்துச்சுனு முதல்ல சொல்லு..." என்று எரிச்சலை அடக்கிக்கொண்டு கேட்டேன்.

"வேலை விஷயமா பாண்டிச்சேரி போறேனு சொல்லிட்டு போய் மூணு நாளாகுது...ஒரு போன்கூட பண்ணல..செல் போன ஆப் பண்ணி வைச்சுருக்கறார்.. விசாரித்தால் இங்க தி.நகர்லதான் ஒரு லாட்ஜ்ல ரூம் போட்டு மூணு நாளா குடிச்சிருக்கார்..நேத்து நைட் ஒரு வழியா போன்ல புடிச்சிட்டேன்...குடிச்சுட்டு பேசுறார்..நான் ஒரு கேள்விகூட அவர கேட்கக் கூடாதாம்..அவர் இஷ்டத்துக்குதான் இருப்பாராம்..என்னன்னவோ பேசுறார்.. அசிங்கமாவெல்லாம் பேசினார்..நானும் பதிலுக்கு பேசினேன்..நாம பிரிஞ்சிடலாம்னு சொல்லிட்டேன்.."

எனக்கு சலிப்பாக வந்தது. ஒவ்வொரு முறையும் இப்படிதான் நடக்கும். இதுக்காகவா என்னை இவ்வளவு அவசரமாக வரச்சொன்னாள்.

"அந்த முட்டாள் எப்பவுமே இப்படிதானே பண்றான்..உனக்கு தெரியாதா..சரி வுடு..நான் பேசிக்கிறேன்.." என்றேன்.

"இல்ல..இந்த தடவ கொஞ்சம் சீரியஸ்..நேத்து நைட்டும் வீட்டுக்கு வரல்ல.. இன்னைக்கு காலையில் ஏழு மணி இருக்கும்... போன் செஞ்சார்...அப்பவே குடிச்சுதான் இருந்தார்....இன்னைக்கு சாயந்தரத்துக்குள்ள தற்கொலை பண்ணிக்க போறாராம்..அவர் தற்கொலைக்கு நான்தான் காரணம்னு எழுதி வைச்சுட்டு செய்துக்க போறாராம்.." என்றாள்.

எனக்கு பகீரென்றது.

"என்னங்க இது..இதுக்காகவா நான் இவர நம்பி என் வீட்டுலகூட சொல்லாம கிளம்பி வந்தேன்...வேண்டாம் நான் போயிடறேன்"

அவள் கண்களில் நீர் சேரத் தொடங்கியது.

"சரி..அவன் இப்ப எங்க இருக்கான்..அந்த லாட்ஜ் பேரு தெரியுமா..?" என்றேன்.

"தி.நகர்னுதான் தெரியுது..எந்த லாட்ஜ்னு தெரியல...மூர்த்திக்கு போன் பண்ணி கேட்டேன்..அவருக்கும் தெரியல.." என்று கூறினாள். இப்போது அவள் குரலில் கோபம் போய் ஒரு பயம் தெரிந்தது.

அவன் வழக்கமாக போகும் சில இடங்கள் எனக்கும் தெரியும். அவனை பிடிப்பது ஒன்றும் சிரமமான வேலையில்லை.

"சரி..நீ..ஒண்ணும் கவலைப் படாதே..இப்பவே போய் நான் அவன பாக்கறேன்.. பார்த்துட்டு உனக்கு போன் செய்றேன்..நீ டென்ஷன் இல்லாம உன் வேலைய பார்.." என்றேன்.

சில நொடிகள் அமைதி காத்துவிட்டு...

"அக்கவுண்ட்டண்ட் சார்கிட்ட டெய்லி நான் அக்கவுண்ட்ஸ் சப்மிட் பண்ணனும்... அவர் ஏர்போர்ட், ஹார்பர் ரவுண்ட்ஸ் போனால் நைட் போன் பண்ணி விவரம் கேட்டுக்குவார்...அதையெல்லாம் இவர் தப்பா பேசுறார்...என் அப்பா வயசு அவருக்கு.. குடிச்சு குடிச்சு இவர் மூளையே கெட்டுப்போச்சு.. இனி இவருகூட இருக்க முடியாது..." என்று சோர்வாகச் சொன்னாள்.

"அய்யயே...நீ போ..நான் அவன்கிட்ட பேசிக்கிறேன்.." என்று கூறினேன்.

ஒன்றும் பேசாமல் தளர்வாக உள்ளே போனாள்.

அவனை எளிதாக கண்டுபிடித்துவிடலாம் என நினைத்தது தவறு. யாரிடம் கேட்டாலும் தெரியவில்லை. நானே தி.நகர் சென்று சில இடங்களில் தேடினேன். அவனுடைய உதவியாளன் ஒருவன் இருக்கிறான். இந்த மாதிரி நிழல் நடவடிக்கைகளில் அவன் பங்கு நிச்சயம் இருக்கும். ஒருவாறு அவனை பிடித்து அந்த லாட்ஜை கண்டுபிடிக்க மாலை ஆகிவிட்டது. அதற்குள் நண்பனின் மனைவியிடமிருந்து இரண்டு அழைப்புகள்.

அந்த லாட்ஜை கண்டுபிடித்து அந்த அறைக் கதவை தட்டியவுடன் அவனே திறந்தான்.

"வாடா வா..நீ எப்படியும் வருவேனு எனக்குத் தெரியும்...அவளுக்கு சப்போர்ட் பண்ணி ஒரு வார்த்தை நீ பேசினே..உனக்கு மரியாதை போய்டும்..ஷீ இஸ் எ பிட்ச்..." என்றான்.

அவனை பார்த்தபோதே தெரிந்தது இந்த மூன்று நாட்களும் இடைவிடாமல் குடித்திருக்கிறான் என்பது. இப்போதும் குடித்துக் கொண்டுதான் இருக்கிறான் என்பதை அறையின் சூழ்நிலை விவரித்தது. நல்ல போதையில் இருக்கிறான் என்பதும் நன்றாக தெரிந்தது. இந்த நாட்களில் குளித்திருப்பானா என்ற சந்தேகமும் வந்தது.

"நான் சீரியசா சொல்றேன்..அவள பத்தி ஒரு வார்த்தை பேசாத....பிசாசுடா அவ.... மனுசன் இருப்பானா அவகூட.....பைத்தியம் பிடிச்சுரும் அவகூட இருந்தா....கண்ட கண்ட நேரத்தில் போன்ல பேசுறா..ஷீ இஸ் எ புரோ..அவ சொல்லித்தான் நீ வந்திருக்கற.. எனக்குத்தெரியும்..ஒரு வார்த்தை அவள பத்தி பேசாத" என்று உரத்த குரலில் கூறினான்.

பிசாசு என்று இவனால் அழைக்கப்படும் இந்தப் பெண்ணை , சும்மா பார்ப்பதற்காக மட்டுமே கொளுத்தும் வெயிலில் மூன்று மணி நேரம் பிராட்வே பஸ் நிலையத்தில் இவன் காத்திருந்தான் ஒரு முறை.

"இங்க பார்..அவ சொல்லித்தான் நான் வந்தேன்..உண்மைதான்..ஆனால் இந்த முறை உங்க பிரச்சனையில் நான் தலையிடமாட்டேன்.. எனக்கே சலிச்சுருச்சு. எதோ அவ சொன்னாங்கறதுக்காக வந்துருக்கேன்.. அவ்வளவுதான்..எனக்கும் இதை பத்தி பேச பிடிக்கல..எனக்கே ஆயிரம் பிரச்சனை இருக்கு.." என்று கூறி கட்டிலில் சாய்ந்தேன்.

அவன் என்னை ஆச்சரியமாக பார்த்தான்.

"ஒரே அலைச்சல்...டயர்டா இருக்கு..எனக்கு ஒரு பீர் ஆர்டர் பண்ண முடியுமா?" எனக்கேட்டேன்.

அடுத்த நொடியில் அவன் மொத்த முகபாவனையும் மாறி உடல் மொழியிலும் உற்சாகம் தொற்றிக்கொண்டது.

"ஒண்ணு என்ன..ரெண்டு சொல்றேன்..சைட் டிஷ் என்ன சொல்லட்டும்? இங்க மீன் நல்லா இருக்கும்..சொல்லவா?" உற்சாகமாக போனை எடுத்து ஆர்டர் செய்தான்.

அடுத்த சில மணிநேரங்களில் பல்வேறு விஷயங்கள் பேசினோம். கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கம் குறைந்து, வெடித்துச் சிரித்து... இப்போது மொத்த சூழ்நிலையும் வேறாக தெரிந்தது. அவன் பிரச்சனையை பற்றி நான் பேச்சே எடுக்கவில்லை. அவ்வப்போது அவனே அதைப் பற்றி பேச முற்பட்டாலும் நான் பேச்சை மாற்றினேன். இடையில் அவன் பாத்ரூம் சென்ற நேரத்தில் அவன் மனைவிக்கு போன் செய்து நான் அவனுடன் இருப்பதை தெரிவித்திருந்தேன். இரவு அங்கேயே தங்கப்போவதாக இவனிடமும் தெரிவித்துவிட்டேன். இரவு உணவு ஆர்டர் பண்ணுகிறேன் என்று கூறினான்.

"வேண்டாம்..வா..அப்படியே ஒரு வாக் போய்ட்டு வெளியே சாப்பிடலாம்.. அதுக்குள்ள இந்த ரூமை சுத்தப்படுத்தச் சொல்லலாம்" என்றேன்.

வெளியே கிளம்பிச் சென்றோம். டெஸ்கில் இருந்த லாட்ஜ் மானேஜர் எங்களை பார்த்த பார்வையில் ஒரு வெறுப்பு தெரிந்தது.

சிறிது தூரம் நடந்து சென்று ஒரு இடத்தில் சாப்பிட்டோம். வண்டியில் வாழைப்பழங்கள் வாங்கித் தின்றோம். திரும்பி அறையை அடைந்த போது அறை சுத்தமாக்கப்பட்டு நன்றாக இருந்தது. படுத்துக்கொண்டே நிறைய பேசினோம். வடிவேல் நகைச்சுவையைப் பேசி அறை அதிரச் சிரித்தோம். அப்படியே தூங்கிப் போனோம்.

மறுநாள் காலை நான் எழுந்து பார்த்தபோதே நண்பன் குளித்து முடித்து சுத்தமாக இருந்தான். சோபாவில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தான்.

"உனக்கு காபி ஆர்டர் பண்ணவா..?" என்றான்.

முகம் கழுவி காப்பி அருந்திவிட்டு நான் கிளம்ப ஆயத்தம் காண்பித்தேன்.

அமைதியாகக் கட்டிலில் உட்கார்ந்திருந்தான்.

"சரி..நான் கிளம்பறேன்.." என்றேன்.

மெல்ல என்னைப் பார்த்தவாறே..

"அவ கேட்டா நீ என்ன சொல்லுவ..?" என்று கேட்டான்.

"என்னத்தச் சொல்றது...எதாவது சொல்லி சமாளிக்கணும்.." என்று படாமல் பேசினேன்.

"இல்லடா..அவ ரொம்ப படுத்துறா..அன்னிக்கு பார்.. அபர்ணாவ அந்த அடி அடிச்சுருக்கா.. எனக்கு கோபம் தாங்கல." என்றான்.

சில நொடிகள் விட்டு..

"சரி..நீ அபர்ணாவுக்கு ஒரு போன் பண்ணி பேசியிருக்கலாம் இல்ல..அவ குழந்தைதானே.. உங்க பிரச்சனை பத்தி அவளுக்கு என்னத் தெரியும்..மூணு தடவ எங்கிட்ட கேட்டுட்டா 'அப்பா எங்கேன்னு" என்றேன்.

அவன் கண்களில் ஒரு கலக்கம் தெரிந்தது. சிறுது நேரம் கீழே குனிந்து பார்த்துக்கொண்டே இருந்தான்.

"இங்க பார்..நான் ஒண்ணு சொல்றேன்..எங்கூட வா.. வந்து உம் மகள ஒரு தடவை பார்த்துட்டு நீ எங்க வேணும்னாலும் போ.." என்றேன்.

ஒரு முறை நிமிர்ந்து என்னைப் பார்த்துவிட்டு குனிந்து யோசனையில் இருந்தான்.

"கிளம்புடா..வா..போகலாம்...' என்று சற்று உரத்து கூறி அவன் பொருட்களை அவன் பையில் திணிக்கத் தொடங்கினேன்.

அவன் அமைதியாக பாத்ரூம் போய் அங்கிருந்த பொருட்களை எடுத்துவந்து பையில் போட்டான். ரூமை காலி செய்து ஒரு வார்த்தை பேசாமல் என் பைக்கில் பின்னால் உட்கார்ந்து வந்தான். அவன் பலத்த யோசனையில் இருப்பது தெரிந்தது. அவன் வீட்டு வாசலில் அவனை இறக்கிவிட்டேன். அவன் கேட் கதவை திறந்து வீட்டினுள் போவதை உறுதி செய்துகொண்டு நான் கிளம்பினேன்.

அடுத்த பத்து நாட்களில் அவனிடமிருந்தோ,அவன் மனைவியிடமிருந்தோ எந்த ஒரு தகவலும் இல்லை. நானும் அவர்களை அழைக்கவில்லை.அவன் அலுவலக உதவியாளனை அழைத்து விவரம் கேட்டேன்.

"நேத்துகூட சார பார்க்க வீட்டுக்கு போயிருந்தேனே..மேடம் எனக்கு பிரிஞ்சி சாதம் கொடுத்தாங்க.." என்றான்.

பரவாயில்லையே என் நினைத்துக்கொண்டு நாமே ஒரு முறை நேரில் போய் பார்த்து வரலாம் என நினைத்து நண்பன் வீட்டுக்கு போனேன். என்னைப் பார்த்தது கணவன் மனைவி இருவருக்குமே ஒரு ஆச்சரியம், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

"வா..வா…உட்காரு..நானே உனக்கு போன் செய்யலாம்னு நினைச்சுக்கிட்டுருந்தேன். நீயே வந்துட்ட...காப்பி சாப்பிடுறியா..? என்று நண்பன் கேட்டான்.

நண்பன் தெளிவாக இருந்தான். மனைவி எனக்கு காப்பி தயார் செய்ய சமையலறைக்கு சென்றாள். அபர்ணா அவளிடம் இருந்த எல்லா பலூன்களையும் கொண்டுவந்து போட்டு ஊதி தருமாறு கூறினாள். எல்லாவற்றையும் ஊதிக்கொடுத்தேன். நண்பன் அங்குமிங்கும் அலைந்தபடியே செல்போனில் பரபரப்பாக பேசிகொண்டிருந்தான். காப்பி வந்தது. சிறிது நேரம் டி.வி பார்த்துக்கொண்டிருந்தேன். கையில் காப்பியின் பிசுபிசுப்பு. கழுவலாம் என வாஷ்பேனுக்குச் சென்றேன். உள்ளே சமையலறையில் பேசுவது கேட்டது.

"உங்களுக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா? இப்ப பார்த்தா இவர வரச்சொல்றது...எப்ப கிளம்பி எப்பப் போய் சேர்றது? இந்நேரம் கேக் வெட்டியிருப்பாங்க.."

"நான் எங்க இவன வரச்சொன்னேன்..அவனா வந்திருக்கான்...நான் என்ன செய்யட்டும்..."

நான் மறுபடியும் ஹாலுக்கு வந்து சில நொடிகள் விட்டு உரத்த குரலில் நான் கிளம்புகிறேன் எனக் கூறிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் வெளியே நடந்தேன்.

Wednesday, August 20, 2008

அறையில் ஒரு நாள்

அறையில் விவாதம் போய்க்கொண்டிருக்கிறது. எல்லோரும் திரைத்துறையில் முயற்சிக்கிறவர்கள். உதவி இயக்குனர்கள்,உதவி ஒளிப்பதிவாளர்,கவிதை பண்ணுபவர் என்று.

"நேரடியான படுக்கை அறை காட்சிகளை எதிர் கொள்ளும் மனநிலை நம் ரசிகர்களுக்கு கிடையாது.. அதற்கு ஈடாக குத்துப்பாட்டுகளும், வக்கிரம் மிகுந்த நடன அசைவுகளும் அந்த இடத்தை பிடித்துக்கொள்ளுகின்றன.." என்ற தாமு ஒரு கவிஞன்.

"இத்தாலி படமான 'லாஸ்ட் டாங்கோ இன் பாரீஸ்' -ல் ஒரு ஆணும்,பெண்ணும் முதல் சந்திப்பிலேயே எந்தவித அறிமுகமும் இல்லாமல் செக்ஸில் இறங்குவார்கள்..மர்லன் பிராண்டோவும், மரியா ஷீனீடரும் மிருகங்களை போல இயங்குவதுகூட எனக்கு ஒரு அழகிய கவிதை போலத்தான் தெரிந்தது..." என்றான் ஜெயராஜ்,உதவி ஒளிப்பதிவாளர்.

"சித்திரம் பேசுதடி படம் பார்த்தாயா? அதில் ஒரு காட்சி..கதாநாயகி ஒரு ரவுடி மேல் காதல் வயப்படுகிறாள்.. எரிச்சலோடு வீட்டிற்குள் உலா வருகிறாள்..அப்பா கேட்கிறார்..'ஏம்மா..அந்த பொறுக்கிய பார்த்தாயா?' என்று. அவள் கூறுகிறாள்.. 'இல்லப்பா..இன்னைக்கு பார்க்கல..' கைகளில் ஒரு flower vase..உருட்டிக்கொண்டு சொல்கிறாள். காதல் வயப்படும் பெண்கள் எப்போதும் கைகளில் எதாவது பொருளை கையாண்டு கொண்டே இருப்பார்களாம்..உளவியல் சொல்லுகிறது...இங்கும் இயக்குனர்கள் முயற்சிக்கிறார்கள்" இது கிருஷ்ணகுமார்..இவனும் ஒரு உதவி இயக்குனர்.

"நீ சொல்வது இயக்குனரின் திறமை பற்றி..நான் சொல்வது படம் பார்ப்பவர் பற்றி..இங்கு படம் பார்ப்பவர்களுக்கு, ஒரு காட்சியை பார்ப்பதற்கான limitations உள்ளது..பாத்திரங்கள் புகை பிடிப்பதுகூட பிரச்சனையை கிளப்புகிறது. பெரும்பாலான இயக்குனர்கள் நடிகர்களின் பின்னால் இருந்துதான் இயங்கவேண்டிய சூழ்நிலை உள்ளது. சினிமாவின் வியாபாரத்தை நடிகன் இங்கு தீர்மானிக்கிறான். இதை நாம் மறைக்க வேண்டியதில்லை" என்றான் மோகன்தாஸ். உதவி இயக்குனர்.

"பிரச்சனை நம் சமூக மதிப்பீடுகளில் உள்ளது. படைப்பாளிகளின் கட்டுப்படுத்தப்பட்ட படைப்புகளைத்தான் இங்கு நீ பார்த்துக்கொண்டிருக்கிறாய். சமூகம் வர்க்கங்களாய் பிரிந்து கிடப்பதுதான் காரணம்" என்று கூறினான் கிருஷ்ணகுமார்..

"நீ 'நியூ சென்சுரி' புத்தக தயவில், மலிவு விலையில் 'மார்க்ஸியம்' படித்தவன். இப்படி படக்கென்று வாந்தி எடுக்காதே..'மார்க்ஸியம்' அழியத் தொடங்கி ரொம்ப நாளாகிவிட்டது.. அதற்கு பின்னால் நிறைய விசயங்கள் வந்துவிட்டன..கொஞ்சம் பின்நவீனத்துவம் பற்றியும் தெரிந்து கொள் " என்றான் தாமு.

"பெரும்பாலும் சோர்ந்துபோன, முன்னாள் 'மார்க்ஸிஸ்டு'களின் குழப்பமான உளறல்கள்தான் பின்நவீனத்துவம்.. ஐரோப்பாவின் சில பகுதிகளில் இந்த பின்நவீனத்துவம் தன்னுடைய கல்லறையை கட்டத்துவங்கிவிட்டது. 'மார்க்ஸியம்' ஒரு சமூக விஞ்ஞானம்..அழிவதற்கு வாய்ப்பில்லை.அது இதுவரை நிறைய 'இசங்களை' சந்தித்துவிட்டது. post-modernism என்பது ஒரு பேஷன்..அவ்வப்போது இதுபோல நிறைய பேஷன்கள் வரும். இம்ப்ரெஷனிஸம்..அப்ஸ்ட்ராக்ட் எக்ஸ்ப்ரெஷனிஸம் போல..அவைகள் மார்க்ஸியத்தின் முன் வந்து கத்தி ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு வழிவிட்டுவிடும்.. மார்க்ஸியம் தொடர்ந்து நடைபோடும். மார்க்ஸ் காலத்திலேயே 'ஸிண்டிகலிச'த்தில் ஒரு பகுதியினர் அசைத்து பார்த்தனர். 'இலக்கு என்று எதுவும் இல்லை..பயணிப்பது மட்டும்தான் நடக்கும்' போன்ற மயக்கும் சிந்தனை போக்குகள் வந்து போயின.." என்றான் கிருஷ்ணகுமார்.

"எனக்கு ஒன்றுமே புரியவில்லை..புரிகிறாற்போல் சொல்" என்றான் ஜெயராஜ்.

"எல்லா நிறுவனமாதலையும் எதிர்த்துவிட்டு, அதிகார மய்யத்தை கேள்விகள் கேட்டு,சிறு சிறு குழுக்களாய் தாந்தோன்றித்தனமாக செயல்பட்டு குழப்புவதுதான் நோக்கம்..கடைசியில் தனிமனித வழிபாட்டில் போய் முடியும்" என்றான் கிருஷ்ணகுமார்.

"சுத்தம்.." என்றான் ஜெயராஜ்.

"நீ பின்நவீனத்துவம் குறித்து சரியான புரிதல் இல்லாமல் பேசுகிறாய்.." என்றான் தாமு.

"சரி..அது பற்றிய சரியான புரிதலை நீ எனக்கு விளக்கு..'ஆசிரியர் இறந்து விடுகிறார்' பற்றி நீ எப்படி புரிந்துகொண்டாய் என்பதை சொல்லு பார்ப்போம்.." என்று வினவினான் கிருஷ்ணகுமார்.

"நானும் நீயும் அதை இரு வேறு விதங்களில் புரிந்துகொண்டிருப்பதை பின்நவீனத்துவம் அங்கீகரிப்பதுதான் அதன் சிறப்பு" என்றான் தாமு.

"ஆனால் புரட்சி என்பது ஒரே தலைமையின் கீழ் கட்டுப்பாட்டுடன் நடப்பது. ஆனால் அதற்கு முன்பாக சமூகத்தில் உள்ளூர நிறைய நீரோட்டங்கள் நடக்க வேண்டியதிருக்கிறது. மெல்ல நடந்து கொண்டுமிருக்கிறது" என்றான் கிருஷ்ணகுமார்.

" எப்போதுதான் இந்த மாதிரி கனவு காணுவதைவிடப்போகிறீர்களோ..தெரியவில்லை.. 'மூலதனம்' புத்தகத்தை, அண்ணா சாலையில் நின்று கொண்டு இலவசமாக கொடுத்துப்பார்..எத்தனை பேர் வாங்கிக்கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்வாய்.." என்றான் மோகன்தாஸ்.

"அப்படியானால்..பால்-டி-அமட்டோ எழுதிய The meaning of marxism என்ற புத்தகம் இப்போது இலட்சக்கணக்கில் விற்றுக்கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றதே..அதற்கு என்ன சொல்கிறாய்..?" என்று கேட்டான் கிருஷ்ணகுமார்.

"அப்போ..பின்நவீனத்துவ இலக்கியங்கள் எல்லாம் என்னதான் செய்கின்றன..?" என்று கேட்டான் மோகன்தாஸ்.

"அதில்கூட ஏகப்பட்ட வாக்குவாதம்..சட்டை கிழிப்புகள்..உம்பர்டோ ஈக்கோ எழுதிய Name of the Rose என்ற நாவலை ஒருவழியாக பின்நவீனத்துவ நாவலாக எல்லோரும் ஏற்றுக்கொண்டதாக இணையத்தில் படித்தேன்" என்றான் கிருஷ்ணகுமார்.

"அப்படியானால் உன்னுடைய முதல் படம் இடதுசாரி சிந்தனை பிரச்சார படமாக இருக்குமா..?" என்று கிருஷ்ணகுமாரை பார்த்துக் கேட்டான் மோகன்தாஸ்.

"இருக்காது. என் படங்களில் மக்கள் பிரச்சனைகள் இருக்கும். எந்த ஒரு நேரடியான கொள்கை பிரச்சாரத்தையும், மக்கள் கலைப் படைப்புகளில் விரும்ப மாட்டார்கள் என்பது என் கருத்து. நீ தெருவில் பார்க்கும் அந்த சாதாரண மக்கள், அவர்களுடைய பிரச்சனைளோடு என் திரையில் வந்துவிடுவார்கள். நான் சொல்ல நினைப்பதை உள்ளூர உணர்த்துவேன்" என்றான் கிருஷ்ணகுமார்.

"உனக்கு நிறைய விருதுகள் கிடைக்கும்" என்றான் மோகன்தாஸ்.

"உன் கேலி புரிகிறது. அப்படியானால் அந்த சமயத்தில் நீ நிறைய படத் துவக்கவிழா பூஜையில் கலந்து கொள்வாய் என நினைக்கிறேன். நான் உன்னை தொலைக்காட்சியில்தான் பார்க்கமுடியும்" என்றான் கிருஷ்ணகுமார்.

"நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்..இரானிய,தென் அமெரிக்க படங்களை பார்த்துவிட்டு இங்கு முயற்சிக்கப் போகிறீர்கள்..எப்படியோ உங்கள் புண்ணியத்தால் தமிழ் சினிமா ஆஸ்கருக்கும், கான்ஸுக்கும் போனால் சரிதான்..." என்றான் தாமு.

"அப்போ இதையும் plagiarism மாதிரி என்று சொல்கிறாயா? நல்ல விசயத்தில் influence ஆவது தப்பா?.."

"தப்பு என்று சொல்லமாட்டேன்....ஒரு நிமிஷம்..யாரோ கதவை தட்டுகிறார்கள்..ஜெயா..கதவை திற.." என்றான் தாமு.

"அட..வாங்க கோனார்..உட்காருங்க.."

"தேவையில்லை..அது சரி..உங்களுக்கெல்லாம் இரக்கமே கிடையாதா?நானும் ஒரு மாசமா நடையா நடக்குறேனே..ஒருத்தராச்சும் காசு கொடுத்தீங்களா? உங்கள நம்பித்தானே கடன் கொடுத்தேன்.. தோசையும் இட்லியுமா தின்னீங்க இல்ல..காச கொடுக்க வேண்டியதுதானே..மொத்தமா ஆயிரத்தி ஐநூற தாண்டியாச்சு..இப்போ என்னடான்னா என் மெஸ் பக்கமா வராம பக்கத்து சந்து வழியா போறீங்க.. என்ன செய்வீங்களோ எனக்குத்தெரியாது...நாளைக்கு சாயந்திரம் எனக்கு பணம் வந்தாகணும்.. இல்லாவிட்டால் பிரச்சனையாயிடும்.." கதவை அடித்து சாத்திவிட்டு போனார் கோனார்.

விவாதம் தொடர்ந்து நடந்தது.




ச.மனோகர்
sa.manoharan@gmail.com

Tuesday, August 5, 2008

மனிதர்கள்

வெய்யில் கொளுத்தும் ஒரு மதிய வேளையில் என் நண்பரை பார்க்க அவர் கடைக்குச் சென்றேன். சிறிது நேரம் ஏ.சி குளுமையில் இருக்கலாம் என்ற நினைப்பையும் தவிர்க்கமுடியவில்லை. அந்த நண்பர் ஜாப் டைப்பிங், ஜெராக்ஸ் மற்றும் ஸ்பைரல் பைண்டிங், லாமினேசன், ஸ்கேனிங், எஸ்.டி.டி தொலைபேசி போன்ற தேவைகளுக்கான கடையை நடத்திக்கொண்டிருக்கிறார். நான் போனபோது அவர் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தார். வாடிக்கையாளர்கள் நிறைய பேர் காத்திருந்தார்கள். என்னைப் பார்த்ததுமே நண்பர் முகத்தில் மலர்ச்சி.

"வா..வா..நல்ல நேரத்தில் வந்தாய்..பையன் சொல்லாம லீவு போட்டுட்டான்..அஜீத் படம் எதாவது இன்னைக்கு ரிலீஸாகுதா?" என்றார் நண்பர்.

நண்பர் மிக மும்முரமாக தட்டச்சு செய்துகொண்டே ஜெராக்ஸ் எடுத்தார், ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டே லாமினேசன் செய்தார், லாமினேசன் செய்து கொண்டே தொலை பேசியதற்கான பில்லை கிழித்து காசு வாங்கி கல்லாவில் போட்டார். ஒரு இயந்திரம் போல இயங்கினார். இந்தக் கடைக்குப் போட்டியாக சுற்று வட்டத்தில் வேறு கடை இல்லாததாலும், அருகே ஒரு அரசாங்க அலுவலகம் மற்றும் நிறைய தனியார் நிறுவனங்களும், ஒரு கல்லூரியும் இருந்ததால் கடையில் எப்போதும் வாடிக்கையாளர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். இந்த மாதிரி சமயங்களில் நான் அங்கு இருந்தால் அவருக்கு உதவியாக எனக்குத் தெரிந்த சில வேலைகளை செய்வதுண்டு. அது போலவே அன்றும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பிளாப்பி டிஸ்க், பென் டிரைவ் மற்றும் சி.டிக்களை வாங்கி பிரிண்ட் அவுட்கள் எடுத்துக் கொடுத்தேன். சில சி.டிக்களை 'எரித்து'க் கொடுத்தேன். இப்போது மேலும் மேலும் வாடிக்கையளார்கள் வந்துகொண்டே இருந்தார்கள். நாங்கள் இருவருமே பரபரப்பாக இயங்கினாலும் நிமிர்ந்து பார்த்தால் எங்கள் மேசையை சுற்றி நிறைய தலைகள் தெரிந்துகொண்டே இருந்தன. இரண்டு கிளாஸ்களில் இருக்கும் டீ யும் ஆடைகட்டிவிட்டது. மூன்று மணி வாக்கில் சற்று கூட்டம் குறைந்தது. ஒரு தருணத்தில் கடையில் ஒரு வாடிக்கையாளர் கூட இல்லாத ஒரு சூழ்நிலை அமைந்தது.

"உனக்கு சாப்பாடு ஆர்டர் பண்ணவா?" என்று நண்பர் கேட்டார்.

"இல்லை நான் சாப்பிட்டுவிட்டுத்தான் வந்தேன். நீ சாப்பிடு..யாராவது வந்தால் நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றேன்.

" ஆமாம்..எனக்கும் சரியான பசி.." என்று கூறி வீட்டிலிருந்த கொண்டு வந்திருந்த டிபன் பாக்ஸை திறந்தார்.

அப்போது மூன்று பேர் உள்ளே நுழைந்தார்கள். அவர்களில் குண்டான ஒரு பெண்மணியும் இருந்தார். வந்தவர்கள் ஒரு பதட்டத்துடனும், வேகத்துடனும் இருந்தார்கள். மூன்று பேருக்கும் வியர்வை வழிந்தோடியது. இந்தக் கடையை தேடி நிறைய அலைந்திருக்கலாம். கைகளில் பைல்களும்,நிறைய பேப்பர்களும் இருந்தது. குண்டான பெண்மணி நாற்காலி தேடி உட்கார்ந்து மூச்சு வாங்கினார்.

" பிரதர்..இத டைப் பண்ணனும்..இத ஸ்கேனிங் பண்ணனும்..இந்த சி.டில இருக்குற எல்லாத்தையும் பிரிண்ட் எடுக்கணும்.." என்றார் வந்தவர்களில் ஒருவர்.

" சரி..கொஞ்சம் உட்காருங்கள்..ஒரு பத்து நிமிசம்..சாப்பிட்டுவிடுகிறேன்..உட்காருங்கள்" என்றார் நண்பர்.

"இல்லை பிரதர்..இது ரொம்ப அவசரம்..நாலு மணிக்குள் 'பிரிட்டீஸ் எம்பஸி'ல குடுத்தாகனும்..விசா பேப்பர்ஸ்"

"சார்..இத டைப் பண்ணவே முக்கா மணி நேரம் ஆகும்,அப்புறம் ஸ்கேனிங்,பிரிண்ட் எல்லாம் இருக்கு..ஒரு அஞ்சு நிமிசம்..சாப்பாட முடிச்சுடுறேன்..கொஞ்சம் வேயிட் பண்ணுங்க" என்றார் நண்பர்.

"பிளீஸ்..ரொம்ப அவசரம்..கொஞ்சம் உதவி பண்ணுங்கள்" என்றார்கள் வந்தவர்கள்.

" சரி சார்..ஒரு ரெண்டு நிமிசம்..இங்க பாருங்க....இப்ப ஆரம்பிச்சுடலாம்" என்றார் நண்பர்.

" இல்ல..நாலு மணிக்கு முன்னால இந்த பேப்பர்ஸ உள்ள கொடுக்கலனா அப்புறம் திங்கக்கிழமைதான் முடியும். கொஞ்சம் சிரமம் பார்க்காம உடனே இத செஞ்சு கொடுங்க..பிளீஸ்"

நண்பரின் முகம் சற்று எரிச்சலில் மாறியது. இருந்தாலும் நொடியில் அதை மாற்றிக்கொண்டு டிபன் பாக்ஸை மூடி வைத்துவிட்டு அவர்களுடைய டைப்பிங் வேலையை ஆரம்பித்தார். நான் பிரிண்ட் எடுக்க ஆரம்பித்தேன். வந்தவர்கள் இப்போது சற்று நிம்மதியாகி அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர் நாங்கள் அவர்கள் வேலையைத்தான் செய்கிறோமா என்பதை அவ்வப்போது உறுதி செய்துகொண்டார். நண்பரின் கைகள் படுவேகமாக இயங்கியது தெரிந்தது. இப்போது வந்தவர்கள் முழுவதுமாக இயல்புக்கு வந்துவிட்டார்கள். சில நிமிடங்கள் பொறுமையாய் இருந்த அவர்கள் கேட்டார்கள்..

"பிரதர்..இந்த எல்லா வேலையையும் முடிக்க எவ்வளவு நேரம் ஆகும்?"

"எப்படியும் ஒரு அரைமணி நேரமாவது ஆகும்" என்றார் நண்பர்.

"அப்ப ஒண்ணு செய்யுங்க..நீங்க டைப் அடிங்க..அதுக்குள்ள நாங்க போய் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுகிறோம்"

Thursday, June 26, 2008

கிளாஸ் டீச்சர்..!

மந்தைவெளியில் குடியிருக்கும் என் ஒன்றுவிட்ட சகோதரி, ஒரு நாள் அதிகாலை நேரத்தில் தொலைபேசியில் அழைத்து ஒரு உதவி செய்ய வேண்டுமெனவும், உடனே வருமாறும் அழைத்தாள். அவளுடைய கணவர் ஒரு ஆடிட்டர். ஒரே மகள்.பெயர் ரேணுகா. எட்டாம் வகுப்பு படிக்கிறாள்.

நான் அவர்கள் வீட்டை அடைந்தபோது காலை மணி எட்டு.ரேணுகா தாயிடம் திட்டு வாங்கிக்கொண்டிருப்பது வெளியிலிருந்தே நன்றாக புரிந்தது. மூன்றாவது தோசையை சாப்பிட மறுக்கும் ரேணுகா பள்ளிச் சீருடையில் இருந்தாள்.முகம் உம்மென்றிருந்தது. செயல்களில் ஒரு கோபம் தெரிந்தது. சோபாவின் மீது பள்ளிக்கு எடுத்துச்செல்லும் பை கிடந்தது. அதன் வாய் திறந்திருந்தது. ரேணுகா என்னை நிமிர்ந்துகூட பார்க்கவில்லை.

"அப்படியே நீயும் உட்கார்ந்து சாப்பிட்டுவிடு..''என்றாள் சகோதரி.

''எதற்கு வரச் சொன்னாய்..என்னப் பிரச்சனை..?" என்றேன்.

"எல்லாம் இந்த பிசாசினால் வரும் பிரச்சனைதான்..இன்றைக்கு நானோ இல்ல இவ அப்பாவோ இவ கிளாஸ் டீச்சரை பார்த்து இவளை பற்றி ரிப்போர்ட் வாங்கணும். அவர் வெளியூர் போயிருக்கிறார். கொஞ்சம் நீ போய் அவ கிளாஸ் டீச்சரை பார்த்துட்டு வந்திடேன்..நாங்க ரெண்டு பேருமே ஊரில் இல்லைனு சொல்லிடு.இன்னைக்கு போய் பார்க்கலேனா இவ கிளாஸ் 'அட்டர்ன்' பண்ண முடியாது..அந்த ஸ்கூல் ரொம்ப கண்டிப்பு" என்றாள்.

"அம்மா..நீ வாம்மா..நீ தான் வரணும்.." சிணுங்கினாள் ரேணுகா.

"வாயத் திறந்த..வாயிலேயே போடுவேன்.."

"நீ போய் அவ கிளாஸ் டீச்சர பார்ப்பதில் என்னப் பிரச்சனை..?" என்று கேட்டேன்.

"ஒவ்வொரு தடவையும் நான் அங்க போய் சமாதானம் சொல்வதற்கு சங்கடமா இருக்கு. வீட்டில் நாங்கள் இவள் படிப்பு விசயமாக கவனம் எடுத்துக் கொள்வதில்லையாம்.. அந்த டீச்சர் ஒரே குற்றச்சாட்டு. அதுவும் இந்த முறை நடந்த டெஸ்டில் இரண்டு பாடத்தில் பெயில். அந்த டீச்சர் என்னை காய்த்து விடுவாள். நீ போய் எதாவது பேசி சமாளித்துவிட்டு வா" என்றாள்.

"மா..நீ வாம்மா..இல்லாட்டி அந்த மிஸ் திட்டுவாங்க" என்று மறுபடியும் எரிச்சலோடு கெஞ்சினாள் ரேணுகா.

"வாய மூடிகிட்டு மாமாவ கூட்டிகிட்டு போ..மிஸ்ஸு ஒன்னும் சொல்ல மாட்டாங்க..நீ முதல்ல லன்ச் பாக்ஸ எடுத்து பையில வை.."

"அவ அப்பா என்னா சொல்றார்..?" எனக் கேட்டேன்.

"அவர்தானே..எல்லாத்துக்கும் காரணமே அவர்தான்..அவர் செல்லம் கொடுத்து கொடுத்துதானே இவ அடங்காப்பிடாரிய இருக்கா..ராத்திரி பதினோரு மணி வரைக்கும் டி.விய போட்டுகிட்டு அப்பாவும்,மகளும் காமெடி ஷோ பார்த்துட்டு 'கெக்க பிக்கே'னெ சிரிக்க வேண்டியது... ஒரு கிரிக்கெட் மேட்ச விட்றதில்ல..பொம்பள புள்ளைக்கு எதுக்கு கிரிகெட் மேட்ச்? இவ கேட்டாள் என்பதற்காக, அவர் ஆபீஸுக்கு லீவு போட்டுட்டு 'பில்லா' படம் கூட்டிகிட்டு போறார்..என்னத்த சொல்ல.. எல்லா அக்கிரமங்களும் இவுங்க ரெண்டு பேரும் செய்ய வேண்டியது...கடைசியில் பள்ளிக்கூடத்தில் போய் நான் அவமானப்பட வேண்டியது..ஒரு தடவைக் கூட அவர் ஸ்கூலுக்கு போனதில்லை.போகவும் மாட்டார்.என்னைத்தான் அனுப்புவார்."

எனக்கு தோசையை சுட்டுப் போட்டுக்கொண்டே ரேணுகா பற்றிய பல குறைகளையும், பல செய்திகளையும் கூறினாள். மகளுக்கு படிப்பை காட்டிலும் வேறு விசயங்களில் ஈடுபாடு என்பது புரிந்தது. கிளம்பும்போது ரேணுகா தன் தாயிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் கிளம்பினாள்.கடும் கோபத்தில் இருக்கிறாள் என்பது புரிந்தது. நான் வருவதில் அவளுக்கு துளியும் விருப்பமில்லை என்பது தெளிவாக புரிந்தது. வழியில் நான் கேட்ட சில கேள்விகளுக்குக்கூட என் முகத்தை பார்க்காமல் ஒரிரு வார்த்தையில்தான் பதிலளித்தாள்.

பள்ளியில் பிரார்த்தனை முடிந்து, மாணவ மாணவியரின் இறைச்சல்கள் மெல்ல அடங்கி, வகுப்பெடுக்கும் ஆசிரியர்களின் அதட்டலான குரல்கள் ஆங்காங்கே கேட்டன. ஒரு சில மாணவ,மாணவியரே அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். அது ஒரு மத்திய,உயர் மத்திய குடும்பப் பிள்ளைகள் படிக்கும் பள்ளி எனத்தெரிந்தது. அங்கு படிக்கும் பிள்ளைகளின் புஷ்டியான தோற்றமே பெற்றோரின் பொருளாதார பின்னணியை நமக்கு விளக்கியது. ரேணுகாவின் வகுப்பு ஆசிரியையின் தனி அறையை நாங்கள் அடைந்தபோது, ஏற்கனவே இரண்டு மாணவிகள் தங்கள் பெற்றோருடன் வந்து காத்திருந்தனர். உள்ளே ஒரு மாணவனின் படிப்பாற்றல் அலசப்பட்டு,மாணவனுக்கு அர்ச்சனை விழுந்து கொண்டு இருந்தது. இப்போது ரேணுகாவின் முகத்தில் பயம் அப்பியிருந்தது. கண்களில் ஒரு நீர்த்திரை. எங்கள் முறை வந்து உள்ளே சென்றோம்.
அந்த ஆசிரியைக்கு ஒரு முப்பது வயதிருக்கலாம். கண்ணாடி அணிந்து சிடுசிடுவென முகத்தை வைத்திருந்தாள். நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அவள் பெற்றோர்கள் வர முடியாத சூழ்நிலையை கூறினேன்.

"குழந்தைக்காக ஒரு மணி நேரம் பள்ளிக்கு வரமுடியவில்லையா? இப்படி பெற்றோர்களே அடிக்கடி வெளியூர் பயணம் போனால்..குழந்தைகளின் படிப்பு என்னாவது?" என்று கேட்டாள்.

"இல்லை மேடம்.. ஒரு அவசர சூழ்நிலை..அதனால்தான்.." என இழுத்தேன்.

"இவளுடைய 'பிராகிரஸ்' சரியில்லை...வீட்டிலிருந்து கொஞ்சமாவது எங்களுக்கு சப்போர்ட் பண்ணனும்..இந்தப் பள்ளியில் இடம் கிடைப்பதே கஷ்டம்..உள்ளே வந்துவிட்டு படிக்கமாட்டேன் என்றால் எப்படி..? போன முறையே இவள் அம்மாவிடம் சொல்லியிருந்தேன்..கொஞ்சம் கண்டிப்பாக இருக்கும்படி..ஆனால் இப்போது இரண்டு பாடங்களில் பெயில்..வீட்டில் கொஞ்சமாவது படிக்கச்செய்யவேண்டும்..வீட்டில் எதாவது இவளுக்கு பிரச்சனை இருக்கிறதா என்பது முதலில் தெரியவேண்டும்" என்றாள்.

"இல்லை மேடம்..வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை..அம்மா,அப்பா சொன்ன பேச்சை கேட்பாள். அவர்களும் இவள் மீது பிரியமாக இருப்பார்கள். இவளுக்கென்று படிக்க தனி அறை..பள்ளியிலிருந்து வந்தவுடனேயே வீட்டுப்பாடங்களை செய்வாள். காலையில்கூட சீக்கிரமே எழுந்து படிப்பாள்..வீட்டில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஒருவேளை வகுப்பில் பாடம் நடத்தப்படும் போது புரிந்துகொள்வதில் பிரச்சனை வருகிறதோ..?" என சந்தேகப்படுவது போல் கேட்டேன்.

"வகுப்பில் சந்தேகம் வந்தால் கேட்டுத்தொலைக்க வேண்டியதுதானே..மற்ற பிள்ளைகளெல்லாம் கேட்டு தெரிந்து கொள்கிறார்களே..இவளுக்கு மட்டும் என்ன கேடாம்..? இவளை போன்றவர்களை வைத்துக் கொண்டு எங்கள் பள்ளி எப்படி நூறு சதவீத தேர்ச்சி காண்பிப்பது? அதெல்லாம் இல்லை.. இவளுக்குத் திறமை இல்லை..இவளெல்லாம் பிளஸ் டூ எங்கே தாண்டப் போகிறாள்..?" என்றாள்.

"என்ன மேடம் இது...இவளுக்கு திறமை இல்லை என்று சொல்லிவிட்டீர்கள்..படிப்பில் சற்று கவனம் குறைவாக உள்ளது என வேண்டுமானால் சொல்லலாம்..திறமை இல்லாமலா பத்தாம் வகுப்பு மாணவியை 'ஜாவ்லின் த்ரோ'வில் ஜெயித்திருக்கிறாள்..? பி.டி மாஸ்டரே வீட்டுக்கு வந்து, 'இவள் 'எய்ம்' நன்றாக உள்ளது என்கிறார்...நூறு மீட்டர் 'ரன்னிங் ரேஸி'ல் அம்பு போல கிளம்புகிறாள்..தனி 'கோச்' வைத்து பயிற்சி கொடுக்கலாம்' என்றும் சொல்கிறார்..மூன்று முறை பாட்டுப் போட்டியில் வெற்றி.. பள்ளிச் சேவையில் தேனாம்பேட்டை சிக்னல் அருகில் போக்குவரத்தை திறமையாக கட்டுப்படுத்தியதில் போக்குவரத்து காவற்துறையிடமிருந்து பாராட்டு பத்திரம் வாங்கியிருக்கிறாள்..ஒரு நாளிதழ் நடத்திய ஓவிய போட்டியில் முதல் பரிசு! திறமை என்பது படிப்பு மட்டுமில்லையே மேடம்..அடுத்த முறை நிச்சயம் எல்லா பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்துக் காட்டுவாள்..எங்களிடம் உறுதி கூறியிருக்கிறாள்.. எனவே இவளுக்குத் திறமையில்லை என்று மட்டும் சொல்ல வேண்டாம்.." என்று சற்று உறுதியான குரலில் கூறினேன்.

சில வினாடிகள் எங்களை அமைதியாக பார்த்துவிட்டு.."சரி..அடுத்த முறை பார்க்கலாம்..ரேணுகா..நீ இப்ப கிளாஸுக்கு போகலாம்" என்று கூறினாள் அந்த ஆசிரியை.

நாங்கள் அந்த அறையை விட்டு வெளியே வந்தோம். அப்போது ரேணுகா என் கையை பற்றிக் கொண்டிருந்தாள்.

Sunday, March 16, 2008

குரங்கு பொம்மை!

என் நண்பர் ஒருவரை பார்க்க அவர் வீட்டிற்கு போனேன். வீட்டுப் பணியாள் நான் வந்திருப்பதை உள்ளே போய் சொல்ல, நண்பரின் மனைவி என்னை வரவேற்று அமரச் சொன்னார். நண்பர் குளித்துகொண்டிருப்பதாகவும் சிறிது நேரத்தில் வந்துவிடுவாரென்றும் கூறினார்.

நான் சோபாவில் உட்கார்ந்தேன்.

நண்பரின் மூன்று வயது பெண்குழந்தை; தரையில் அமர்ந்து, ஒரு ஓவிய முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாள். சுற்றிலும் வண்ணக் கலவைகள், தூரிகைகள், காகிதங்கள். அருகிலேயே ஒரு ஒல்லியான fur-ல் செய்ப்பட்ட ஒரு குரங்கு பொம்மை; குரங்கின் ஒரு கை, பிய்த்தெடுக்கபட்டு தனியே வைக்கப்பட்டிருந்தது. குரங்குக்கு மூக்கு மட்டும் நீளமாக இருந்தது. குரங்கு இவள் வரைவதை பார்ப்பதுபோல் கட்டாயமாக உட்கார வைக்கபட்டிருந்தது. குரங்கும் சிரித்தமுகத்துடன் ஓவியத்தை பார்த்துக்கொண்டிருந்தது. உள்ளேயிருந்து அம்மாவின் குரல் வந்தது...

'தீபு... பெயிண்டையெல்லாம் கீழே சிந்தக்கூடாது... பார்த்துக்க...' தீபிகா என்ற தீபு, அதை கவனித்ததாக தெரியவில்லை!

நான் சற்று எட்டி, என்ன ஓவியம் எனப் பார்த்தேன். ஒரு பச்சைக் கிளி முயற்சிக்கபட்டு அதற்கு வண்ணம் தீட்டும் பணி நடந்துகொண்டிருந்தது. சற்று நெருங்கி பார்க்கலாம் என எத்தனித்து, எழுந்தேன். அவ்வளவுதான்... என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு, வண்ணங்கள், காகிதம் மற்றும் குரங்கு பொம்மை எல்லாவற்றையும் வாரி எடுத்துக்கொண்டு தீபு உள்ளே சென்று விட்டாள்.

துண்டினால் தலையை துடைத்தவாறும், செல்போனில் பேசியவாறும் என் நண்பர் உள்ளிருந்து வந்தார். சைகையிலேயே 'வா... அங்கு போய்விடலாம்' எனக்கூறி பக்கத்து அறையை காண்பித்தார். அந்த அறை நாற்காலி, மேசை எல்லாம் போடப்பட்டு ஒரு அலுவலக அறை போலவே இருந்தது.

இவருடைய வியாபார அலுவலகம் கிண்டியில் இருக்கிறது. அது இல்லாமல் இங்கு ஒரு குட்டி அலுவலகம். மேசையில் இரு தொலைபேசிகள், கணிணி, பேக்ஸ் மிசின், பேனாக்கள், குண்டூசி, காகிதங்கள் என, அறை முழு அலுவலக வாசனையில் இருந்தது. இது போக, இன்னொறு செல்போனும் மேசைமேல் இருந்தது. இன்னும் நண்பர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். நண்பருக்கு logistics சம்பந்தமான தொழில். excise துறைகளிலும், சுங்கத்துறையிலும் இம்சையை அனுபவித்து எந்நேரமும் பணத்தை துரத்துபவர். சிறிது நேரத்தில் பேசி முடித்துவிட்டு "...ஸாரி... முக்கியமான அழைப்பு... இப்போ சொல்" என்றார், என்னிடம். நான் வந்த நோக்கத்தை சொல்லத்துவங்கி சில நிமிடங்கள்கூட இல்லை; மேசையின் மீதிருந்த தொலைபேசி அடிக்கத்துவங்கியது. அதை எடுத்து காதில் வைத்த அடுத்த நொடி 'அப்படியா..நான் பார்க்கிறேன்' எனக்கூறியவாறே கணிணியை 'ஆன்' செய்தார்.

பேச்சுத்தொடர்ந்தது. சிறிது நேரம் பேசிவிட்டு '...சரி..அப்புறமா பேசுறேன்' எனக்கூறி வைத்துவிட்டார். என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு "இந்தத் தொழிலில் பத்து நிமிசத்துக்கு ஒரு பிரச்சனை வரும்..நீ சொல்லு.." என்றார்.மறுபடியும் எங்கள் பேச்சு துவங்கியது.

அப்போது "அப்பா... இங்க பாருங்க!!! அம்மு ஜூஸ் குடிக்குது!!!" என்ற அலறலோடும், ஆச்சரிய குரலோடும் தீபிகா உள்ளே வந்தாள். தீபிகாவின் ஒரு கையில் 'பிளாஸ்டிக்' டம்ளரில் சிகப்பு நிற வண்ணம் கலந்த தண்ணீர்; மறு கையில் அம்மு என்று பெயரிடப்பட்ட குரங்கு பொம்மை. 'அப்பா..இங்க பாரு...'என்று சொல்லி குரங்கின் நீண்ட மூக்கை டம்பளரின் உள்ளே நுழைத்து எடுத்தாள். அம்முவின் மூக்கு இப்போது நனைந்து மூக்கு சிவப்பு நிறத்தில் இருந்தது. அதை பார்த்த நண்பர் வெடித்துவிட்டார். 'விமலா... என்ன பண்ற உள்ளே? இந்த சனியன பாரு... முதல்ல இந்த பெயிண்டையெல்லாம் பிடுங்கு இவகிட்டயிருந்து' என்று கத்தினார். இவர் போட்ட கூச்சலில் தீபிகா அதிர்ந்து போய் குரங்கின் மூக்கை பார்த்துக்கொண்டே விலகிவிட்டாள்.

அடுத்த ஐந்து நிமிடங்களுக்குதான் எங்கள் பேச்சு நீடித்தது. மேசையின் மேல் வைக்கப் பட்டிருந்த இன்னொறு செல்போன் ஒலிக்கத் தொடங்கியது. எடுத்து காதில் வைத்தவுடன் 'சொல்லுங்க சார்...' எனச் சொல்லிகொண்டே பால்கனி பக்கம் போனார். போகும் போது என்னிடம் ஐந்து நிமிடம் என சைகையில் என்னிடம் கூறிச்சென்றார்.என்ன மனிதர்கள் இவர்கள்!... வீட்டில் ஒரு அலுவலகம் வைக்கலாமா?ஒரு வீட்டில் இத்தனை தொலைபேசிகளா? ஒரு நாளின் பெரும்பகுதி ஒலிகளுடன் மட்டும்தான் உரையாடல்களா? வீட்டிற்குள் கூட மனைவி, குழந்தைகள் இவர்களுடன் தொலைபேசியில்தான் பேசமுடியும் போல. நான் திரும்பவும் ஹாலுக்கு சென்று எதாவது படிக்க கிடைக்குமா எனப் பார்த்தேன்.

இப்போது மறுபடியும் ஹாலில் தீபு.

அம்மு என்ற அந்த குரங்கு இன்னும் ஜூஸ் குடிக்க வைக்கப் பட்டுக்கொண்டுடிருந்தது. என்னை நிமிர்ந்து பார்த்த தீபுவின் முகத்தில் இப்போது ஒரு நட்புணர்வு தெரிந்தது. ஒரு மெலிதான புன்னகைகூட அவள் முகத்தில் காணப்பட்டது.

நான் சற்று கவனமாக தள்ளியே உட்கார்ந்துகொண்டு 'அம்மு ஜூஸ் குடிச்சுருச்சா?' எனக் கேட்டேன். அவள் முகம் மலர்ந்து... 'அம்மு... இன்னும் ஜூஸ் கேட்குது...' என்றாள். 'எங்கே காமி...' என்று கூறிக்கொண்டே அவள் அருகில் தரையில் அமர்ந்துகொண்டேன். குரங்கு பொம்மையின் மூக்கை மறுபடியும் வண்ண நீரில் அமிழ்த்து எடுத்தாள். டம்ளரில் நீரின் அளவு குறைவது அவளுக்கு ஆச்சரியத்தை அளித்தது.

நான் குரங்கு பொம்மையை தூக்கிப்பார்த்தேன். பொம்மை, நிறைய நீரை உறிஞ்சி கனமாக இருந்தது. அந்த விஞ்ஞானம் அவளுக்கு ஆச்சரியத்தையும், குழப்பத்தையும் அளித்து குரங்கு ஜூஸ் குடிக்கிறது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாள்.அவள் முகத்தில் இருந்த ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் பார்க்க நன்றாக இருந்தது. ஆனால் அவளுக்கு ஏற்ப்பட்ட சந்தேகத்தை பகிர்ந்துகொள்ள யாருமில்லை. நான் அந்த பிய்த்து எடுக்கப்பட்டு தனியே வைக்கப்பட்டிருந்த பொம்மையின் கையை எடுத்து அந்த வண்ண நீரில் முக்கி எடுத்தேன். அதை அப்படியே அவள் கையில் கொடுத்தேன். அவள் அதை மெல்ல அமுக்கி பார்த்தாள். கொஞ்சம் நீர் பிதுங்கி வெளியே வந்தது. நிமிர்ந்து என்னை பார்த்தாள். அவளே மறுபடியும் அந்தக் கையை நீரில் அமிழ்த்து எடுத்தாள். அமுக்கி பார்த்தாள். அப்போதும் சற்று நீர் வந்தது. குழப்பமாக என்னைப் பார்த்தாள்.

அப்போது நண்பர் என்னை அழைக்கவே நான் மீண்டும் பேசப்போனேன்.

அவரிடம் பேசிவிட்டு விடைபெற்றேன். வாசல்வரை வந்து வழிஅனுப்பினார். உள்ளேயிருந்து தீபிகா ஓடிவந்து 'டாட்டா' என்று கூறினாள்.

நண்பர் சற்று ஆச்சரியபட்டு 'இவள் யாருக்குமே 'டாட்டா' காட்டியதில்லை' என்று கூறினார்.

அதற்கு நான் கூறியது 'அது ஏன் என்று யோசியுங்கள்.'

Thursday, March 6, 2008

பண்ணை வீடு!

"இந்த வாரம் சனி,ஞாயிறு எந்த வேலையும் வைத்துக்கொள்ளாதே.. நாமெல்லாம் farmhouse போறோம்..இது ஒரு family trip..with kids and all...its gonna be a real fun..கிச்சா எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணிட்டான்.. எதாவது சாக்கு சொல்லி தப்பிக்கப் பார்த்தே.. மகனே நீ காலி.."

கிச்சா,சிவா, கல்யாணசுந்தரம், பிரேம், நடராஜ் ஆகியோர் அடங்கிய நண்பர் குழாம் என்னை மிரட்டியது. எதற்காக இவர்களுக்கு திடிரென்று குடும்பத்தின் மீது பாசம் பொங்குகிறது எனத்தெரியவில்லை. ஒருவேளை பொறுப்பான 'குடும்பத்தலைவர்கள்' பட்டம் பெற திட்டமிடுகிறார்களா? எனக்கு ஒருநாளும் அந்தப் பட்டம் கிடைக்கப்போவதில்லை. நான் ஒரு 'பேச்சிலர்' என்பதால். மனைவிகள் வட்டாரத்தில் ஒருவனுக்கும் அவ்வளவாக மரியாதை இல்லை.என்னை மட்டும் கொஞ்சம் மதிப்பார்கள். காரணம் அவர்களின் குழந்தைகளுக்கு நான்தான் 'பேவரைட்'.! குழந்தைகள் இரண்டு வயது முதல் பதினேழு வயது வரை இரண்டு பாலினங்களிலும் இருப்பார்கள்.அந்தக் குழந்தைகள் எதற்கும் என்னைத்தான் அணுகுவார்கள். கிரிகெட் மட்டை வாங்குவது, பள்ளிக்கூட 'பிராஜக்ட்' செய்வது,உடனடியாக 'ஐஸ் கிரீம்' தேவைப்படுவது, குட்டி சைக்கிளில் 'செயின்' அறுந்தது பற்றி, சுவற்றில் எந்த இடத்தில் பந்து பட்டால் 'அவுட்' என்ற சந்தேகம்.... அவர்களின் தொலைபேசி அழைப்பு பலவிதத்திலும் இருக்கும். 'சர்க்கஸ்' வந்துவிட்டால் போதும். எனக்கு தினசரி அழைப்புதான். இவர்களை சர்க்கஸ் அழைத்துச் சென்று வருவதே மிகப்பெரிய 'சர்க்கஸ்'. இருந்தாலும் அவையெல்லாம் எனக்கு இனிய தருணங்கள்தான். இந்தக் குழந்தைகள் காரணமாகவே, இந்தப் பெண்கள் என்னை மன்னித்து விடுவார்கள். எந்த வீட்டில் எது விஷேசமாக செய்தாலும் எனக்கு சாப்பிட அழைப்பு வந்துவிடும். இந்தப் பயணத்திற்கு வர முடியாத சில நண்பர்களின் குழந்தைகளும் லிஸ்டில் சேர்ந்து, குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அது எனக்குத்தான் சற்று கலக்கத்தைக் கொடுத்தது என்றாலும் இந்தப் பயணத்தின் போது அந்தக் குழந்தைகளின் முகத்தில் மலரப்போகும் மகிழ்ச்சியை காண விருப்பமாகத்தான் இருந்தேன்.கோகுல் பெயரும் அந்த லிஸ்டில் இருந்தது. சற்று கவனமாக இருக்க வேண்டும். இரண்டு முறை அவன் குத்திய குத்தில் உயிர் போய் உயிர் வந்தது. அவன் வயதுக்கு அந்த அளவு உயரம்தான் எட்டியது..... பெரிய பாக்ஸராக்கும். சிவாவின் மனைவி வேறு ' அண்ணே..நீங்க அவசியம் வந்துடுங்க.. இல்லாவிட்டால் இதுங்கள மேய்க்கிறது கஷ்டம்..' என்று கூறினாள். விட மாட்டார்கள்.. போவதைத் தவிர வேறு வழியில்லை.

தினமும் மாலையானால் இதே பேச்சு.ராணுவ திட்டமிடல் மாதிரி பேசினார்கள். எனக்கு ஒரு விதத்தில் இது மகிழ்ச்சியை கொடுத்தது. இவர்கள் மனைவி, குழந்தைகளை மகிழ்ச்சி படுத்தப் போகிறார்கள். அதுவே எனக்கு பெரிய விசயமாக இருந்தது. மொத்தம் எத்தனை பேர் என கணக்கிட்டு அதெற்கேற்றார்போல் வாகன ஏற்பாடு, உணவுக்கு என்ன செய்யப்போகிறோம் என்பது பற்றி.. பண்ணை வீட்டில் உள்ள நீச்சல்குளத்தில் குளிக்க அவர்களுக்கும், குழந்தைகளுக்கும் swim suit வாங்குவது பற்றி.. நீச்சல்குளத்தில் மிதக்கவிட பலூன்கள்,வளையங்கள்.. குழந்தைகளுக்கு தேவைபடும் 'ஸ்னாக்ஸ்' பற்றி.. அவர்களின் எல்லோருடைய தேவையும் அலசப்பட்டது. பேச்சு..பேச்சு..கிளம்பும் வரை இதே பேச்சுதான்..

''முதலில் பசங்களுக்கு கொஞ்சம் 'மாயாஜாலில்' விளையாட்டு.. அப்புறம் 'முட்டுக்காடில்' போட்டிங்.. முதலை பண்ணையில் கொஞ்ச நேரம்.. அப்புறம் நேரா மகாபலிபுரம்.. திரும்பி 'உத்தண்டி' வந்து பண்ணைவீட்டில் இரவு தங்குறோம்.. அங்க சமையல் பாத்திரங்களோடு அருமையான 'கிச்சன்' இருக்குது ..பெண்கள் இரவு உணவு தயார் செய்கிறார்கள்..நான் கொரியன்பாணி முட்டைப் பொறியல் செய்யப் போகிறேன்..அதிகாலையில் பசங்களை எழுப்பி கடற்கரையில் சிப்பிகளை பொறுக்கச் சொல்லலாம்..அங்கேயே அருமையான மீன் கிடைக்கும்..மதிய சாப்பாட்டிற்க்கு மீன் குழம்பு மீன் வறுவல்" இது பிரேம்.

"சந்திரா பல்லியை பார்த்தாலே நடுங்குவாள்..முதலைப் பண்ணையில் நிச்சயம் அவள் காரை விட்டு இறங்கப்போவதில்லை. அப்புறம்.. ரிட்டர்ன் வரும்போது 'மாயாஜால்' போகலாமே.." என்று சிவா சொன்னான்.

"ஒ.கே.." குழு ஒப்புதல் அளித்தது.

"ஹலோ..கீதா..நான் பரமேஸ்வரி பேசுறேன்..இந்த ஹேமா வருவேன்னு அலுச்சாட்டியம் பண்றா..அவள அனுப்பி வைக்கிறேன்..கொஞ்சம் பார்த்துக்க..வளர்ந்த பொண்ணு மாதிரியா நடந்துக்குறா..?அப்புறம்..அவள 'ஸ்விம்மிங்பூலில்' குளிக்கவிடாதே.. ஆமா..'pads' இருக்கு..அவ 'பேக்' லேயே வைச்சு இருக்கேன்.."

ஹேமா, இந்தப் பயணத்தில் கலந்துகொள்ள முடியாத ராஜேந்திரனின்-பரமேஸ்வரி தம்பதியின் பத்தாம் வகுப்பு படிக்கும் அருமைபுத்திரி.. 'அந்தாஷ்சரி' மன்னி.. புதிய இந்தி,தமிழ் படங்களின் ஆடியோ ரிலீஸான மறுநாள் அனைத்துப் பாடல்களையும் பாடுவாள். வீடுகளில் குழந்தைகளை வைத்து அவ்வப்போது நடைபெறும் ஆடல்,பாடல் நிகழ்ச்சிக்கு இவள்தான் இயக்குனர். எங்களையெல்லாம் வைத்து 'கேம் ஷோ' நடத்துவாள். எனக்கு 'பபூன்' குல்லா வைத்து எல்லாக் குழந்தைகளையும் சிரிக்க வைப்பாள்.உற்சாகத்தின் மறு பெயர் ஹேமா!

"சந்திரா..உன்கிட்டே 'பிரட் டோஸ்டர்' இருந்தா எடுத்துக்க..பசங்க பசின்னு சொன்னா.. உடனே போட்டுக் கொடுத்திடலாம்.."

"அம்மா..இங்க வந்து அப்பாவ பாரு..!"

" அய்யோ..என்னா எழவு ட்ரெஸ் இது..முக்கா காலுக்கு பேண்ட்.. கழட்டுங்க முதல்ல.."

"நோ சான்ஸ்..அய்யா இன்னும் இரண்டு நாளைக்கு 'பீச் காஸ்டியூம்தான்'.."

"கருமம்.."

"நாம சரியா 10.30க்கு கிளம்பி விடனும்.."

"நடராஜ்..என்னடா இது..உன் மாமனார் எல்லோருக்கும் முன்னாலே வேனில் ஏறி பளிச்சுனு உட்கார்ந்து இருக்கார்..முதல்ல அவர கழட்டிவிடுடா.."

"டேய்..அவர வேண்டாம்னு சொன்னேன்னு வைச்சுக்க.. அவ்வளவுதான்.. என் பொண்டாட்டி பத்தரகாளியா மாறிடுவா.. அவரால ஒரு பிரச்சனையும் இல்லடா.."

"திருவான்மியூரில் வண்டியை நிறுத்தி அவர பொடி வாங்க அனுப்பி அப்படியே ஆள தொலைச்சிடலாமா?"

"டேய்.."

"இத முதல்ல ஏத்துங்க..இதுல தான் அரிசி,பருப்பு மசாலா அயிட்டமெல்லாம் இருக்கு."

"அம்லு..அஜய்..தீபிகா..எல்லோரும் வேன்லே ஏறுங்க..லேடிஸும் அதிலேயே ஏறுங்க..நாங்க கார்ல வறோம்"

"எங்கள வெட்டி உடுருதிலேயே குறியா இருங்க..அப்படி என்னத்ததான் சேர்ந்து சேர்ந்து பேசுவீங்களோ.."

"சரி..சரி..ஏறு..டயமாச்சு.."

அனைவரையும் ஏற்றிக்கொண்டு, இரைச்சல்களோடும் உற்சாகமாகவும் கிழக்குக் கடற்கரை சாலையை நோக்கிக் கிளம்பின, அந்த வாகனங்கள். சன்னல்களில் இரண்டொரு பலூன்கள்கூட தலைகாட்டின.

ஆனால் மறுநாள் அதே வாகனங்கள் சென்னையை நோக்கி திரும்பி வருகையில் மிக அமைதியாக திரும்பின. யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. கணவர்கள் அமைதியாக சாலையை பார்த்து வாகனங்களை ஓட்டினார்கள். மனைவிகளின் முகங்களில் எரிமலை தெரிந்தது.எடுத்துப் போன மூன்று முழுஅளவு 'விஸ்கி' பாட்டில்களால் வந்த வினை. நான் கல்யாணசுந்தரத்தின் காரில் பின் இருக்கையில் உட்கார்ந்திருக்கிறேன். முன்இருக்கை இடது புறத்தில் கீதா உர்ரென்று கடந்து செல்லும் சாலையின் நடுவே பார்த்தவாறு உட்கார்ந்திருக்கிறாள். அவளை பார்க்கும் போது இலக்கை நோக்கி விரையும் ஏவுகணையை போலவே இருந்தாள். வீட்டில் போய்தான் விழுந்து வெடிக்கும் என நினைக்கிறேன்.என் இடப்புற இருக்கைகளில் குழந்தைகள் ஒன்றோடொன்று கலந்து அசதியில் உறங்கிக் கொண்டிருந்தன. பிரேம்'மின் இரண்டரை வயது மகள் அஸ்வினி என் கழுத்தைக் கட்டிக்கொண்டு தூங்கிக்கொண்டு வந்தாள். அவள் தூக்கம் கெட்டுவிடாதவாறு அதிகம் அசையாமல் வந்தேன்.கண்ணாடி வழியாக சுந்தரத்தின் முகத்தைப் பார்த்தேன். அமைதியாக வண்டி ஓட்டினான். திரும்பி வரும்போது நாங்கள் போவதாக இருந்த 'மாயாஜால்' இடதுபுறம் சட்டென்று தோன்றி ஓடி மறைந்தது. யாரும் அதை கவனித்ததாகவும் தெரியவில்லை. இதே அமைதி மற்ற நண்பர்கள் வரும் வண்டியிலும் இருப்பது அவர்கள் அனுப்பும் எஸ்.எம்.எஸ் செய்தியிலிருந்து எனக்குத் தெரிந்தது. தாம்பத்யத்தில் அவ்வப்போது குறுக்கிடும் இந்த மெளனராகக் காலம், பிரம்மச்சாரியாக இருந்தபோதிலும் நான் அறிந்த ஒன்றுதான். சில நாட்களில் சரியாகும் எனவும் எனக்குத் தெரியும்.அவரவர் வீடு வந்ததும் அமைதியாக பிரிந்தார்கள்.கணவர்கள் gas chamber-ன் உள்ளே போகும் யூதர்கள் போல் வீட்டினுள் சென்றார்கள்.

அடுத்து வந்த தினங்களில் ஒரு மாலைப் பொழுதில் நண்பர்கள் கூடி பேசிய பேச்சு இப்படியாக இருந்தது..

" useless ladies..next time no females..only stags..கிச்சா..இனிமே ஒருத்தியையும் வண்டிலே ஏத்தாதே..சீரியல கட்டிகிட்டு அழட்டும்.. அவள்களும் 'எஞ்ஜாய்' பண்ண மாட்டாள்க..நம்மையும் 'எஞ்ஜாய்' பண்ண விடமாட்டாள்க..!"

எனக்குப் புரியவில்லை.. 'எஞ்ஜாய்' பண்ணுவது என்றால் என்ன?

பண்ணைவீடு முழுவதும் வாந்தி எடுப்பதா?