Sunday, March 16, 2008

குரங்கு பொம்மை!

என் நண்பர் ஒருவரை பார்க்க அவர் வீட்டிற்கு போனேன். வீட்டுப் பணியாள் நான் வந்திருப்பதை உள்ளே போய் சொல்ல, நண்பரின் மனைவி என்னை வரவேற்று அமரச் சொன்னார். நண்பர் குளித்துகொண்டிருப்பதாகவும் சிறிது நேரத்தில் வந்துவிடுவாரென்றும் கூறினார்.

நான் சோபாவில் உட்கார்ந்தேன்.

நண்பரின் மூன்று வயது பெண்குழந்தை; தரையில் அமர்ந்து, ஒரு ஓவிய முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாள். சுற்றிலும் வண்ணக் கலவைகள், தூரிகைகள், காகிதங்கள். அருகிலேயே ஒரு ஒல்லியான fur-ல் செய்ப்பட்ட ஒரு குரங்கு பொம்மை; குரங்கின் ஒரு கை, பிய்த்தெடுக்கபட்டு தனியே வைக்கப்பட்டிருந்தது. குரங்குக்கு மூக்கு மட்டும் நீளமாக இருந்தது. குரங்கு இவள் வரைவதை பார்ப்பதுபோல் கட்டாயமாக உட்கார வைக்கபட்டிருந்தது. குரங்கும் சிரித்தமுகத்துடன் ஓவியத்தை பார்த்துக்கொண்டிருந்தது. உள்ளேயிருந்து அம்மாவின் குரல் வந்தது...

'தீபு... பெயிண்டையெல்லாம் கீழே சிந்தக்கூடாது... பார்த்துக்க...' தீபிகா என்ற தீபு, அதை கவனித்ததாக தெரியவில்லை!

நான் சற்று எட்டி, என்ன ஓவியம் எனப் பார்த்தேன். ஒரு பச்சைக் கிளி முயற்சிக்கபட்டு அதற்கு வண்ணம் தீட்டும் பணி நடந்துகொண்டிருந்தது. சற்று நெருங்கி பார்க்கலாம் என எத்தனித்து, எழுந்தேன். அவ்வளவுதான்... என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு, வண்ணங்கள், காகிதம் மற்றும் குரங்கு பொம்மை எல்லாவற்றையும் வாரி எடுத்துக்கொண்டு தீபு உள்ளே சென்று விட்டாள்.

துண்டினால் தலையை துடைத்தவாறும், செல்போனில் பேசியவாறும் என் நண்பர் உள்ளிருந்து வந்தார். சைகையிலேயே 'வா... அங்கு போய்விடலாம்' எனக்கூறி பக்கத்து அறையை காண்பித்தார். அந்த அறை நாற்காலி, மேசை எல்லாம் போடப்பட்டு ஒரு அலுவலக அறை போலவே இருந்தது.

இவருடைய வியாபார அலுவலகம் கிண்டியில் இருக்கிறது. அது இல்லாமல் இங்கு ஒரு குட்டி அலுவலகம். மேசையில் இரு தொலைபேசிகள், கணிணி, பேக்ஸ் மிசின், பேனாக்கள், குண்டூசி, காகிதங்கள் என, அறை முழு அலுவலக வாசனையில் இருந்தது. இது போக, இன்னொறு செல்போனும் மேசைமேல் இருந்தது. இன்னும் நண்பர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். நண்பருக்கு logistics சம்பந்தமான தொழில். excise துறைகளிலும், சுங்கத்துறையிலும் இம்சையை அனுபவித்து எந்நேரமும் பணத்தை துரத்துபவர். சிறிது நேரத்தில் பேசி முடித்துவிட்டு "...ஸாரி... முக்கியமான அழைப்பு... இப்போ சொல்" என்றார், என்னிடம். நான் வந்த நோக்கத்தை சொல்லத்துவங்கி சில நிமிடங்கள்கூட இல்லை; மேசையின் மீதிருந்த தொலைபேசி அடிக்கத்துவங்கியது. அதை எடுத்து காதில் வைத்த அடுத்த நொடி 'அப்படியா..நான் பார்க்கிறேன்' எனக்கூறியவாறே கணிணியை 'ஆன்' செய்தார்.

பேச்சுத்தொடர்ந்தது. சிறிது நேரம் பேசிவிட்டு '...சரி..அப்புறமா பேசுறேன்' எனக்கூறி வைத்துவிட்டார். என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு "இந்தத் தொழிலில் பத்து நிமிசத்துக்கு ஒரு பிரச்சனை வரும்..நீ சொல்லு.." என்றார்.மறுபடியும் எங்கள் பேச்சு துவங்கியது.

அப்போது "அப்பா... இங்க பாருங்க!!! அம்மு ஜூஸ் குடிக்குது!!!" என்ற அலறலோடும், ஆச்சரிய குரலோடும் தீபிகா உள்ளே வந்தாள். தீபிகாவின் ஒரு கையில் 'பிளாஸ்டிக்' டம்ளரில் சிகப்பு நிற வண்ணம் கலந்த தண்ணீர்; மறு கையில் அம்மு என்று பெயரிடப்பட்ட குரங்கு பொம்மை. 'அப்பா..இங்க பாரு...'என்று சொல்லி குரங்கின் நீண்ட மூக்கை டம்பளரின் உள்ளே நுழைத்து எடுத்தாள். அம்முவின் மூக்கு இப்போது நனைந்து மூக்கு சிவப்பு நிறத்தில் இருந்தது. அதை பார்த்த நண்பர் வெடித்துவிட்டார். 'விமலா... என்ன பண்ற உள்ளே? இந்த சனியன பாரு... முதல்ல இந்த பெயிண்டையெல்லாம் பிடுங்கு இவகிட்டயிருந்து' என்று கத்தினார். இவர் போட்ட கூச்சலில் தீபிகா அதிர்ந்து போய் குரங்கின் மூக்கை பார்த்துக்கொண்டே விலகிவிட்டாள்.

அடுத்த ஐந்து நிமிடங்களுக்குதான் எங்கள் பேச்சு நீடித்தது. மேசையின் மேல் வைக்கப் பட்டிருந்த இன்னொறு செல்போன் ஒலிக்கத் தொடங்கியது. எடுத்து காதில் வைத்தவுடன் 'சொல்லுங்க சார்...' எனச் சொல்லிகொண்டே பால்கனி பக்கம் போனார். போகும் போது என்னிடம் ஐந்து நிமிடம் என சைகையில் என்னிடம் கூறிச்சென்றார்.என்ன மனிதர்கள் இவர்கள்!... வீட்டில் ஒரு அலுவலகம் வைக்கலாமா?ஒரு வீட்டில் இத்தனை தொலைபேசிகளா? ஒரு நாளின் பெரும்பகுதி ஒலிகளுடன் மட்டும்தான் உரையாடல்களா? வீட்டிற்குள் கூட மனைவி, குழந்தைகள் இவர்களுடன் தொலைபேசியில்தான் பேசமுடியும் போல. நான் திரும்பவும் ஹாலுக்கு சென்று எதாவது படிக்க கிடைக்குமா எனப் பார்த்தேன்.

இப்போது மறுபடியும் ஹாலில் தீபு.

அம்மு என்ற அந்த குரங்கு இன்னும் ஜூஸ் குடிக்க வைக்கப் பட்டுக்கொண்டுடிருந்தது. என்னை நிமிர்ந்து பார்த்த தீபுவின் முகத்தில் இப்போது ஒரு நட்புணர்வு தெரிந்தது. ஒரு மெலிதான புன்னகைகூட அவள் முகத்தில் காணப்பட்டது.

நான் சற்று கவனமாக தள்ளியே உட்கார்ந்துகொண்டு 'அம்மு ஜூஸ் குடிச்சுருச்சா?' எனக் கேட்டேன். அவள் முகம் மலர்ந்து... 'அம்மு... இன்னும் ஜூஸ் கேட்குது...' என்றாள். 'எங்கே காமி...' என்று கூறிக்கொண்டே அவள் அருகில் தரையில் அமர்ந்துகொண்டேன். குரங்கு பொம்மையின் மூக்கை மறுபடியும் வண்ண நீரில் அமிழ்த்து எடுத்தாள். டம்ளரில் நீரின் அளவு குறைவது அவளுக்கு ஆச்சரியத்தை அளித்தது.

நான் குரங்கு பொம்மையை தூக்கிப்பார்த்தேன். பொம்மை, நிறைய நீரை உறிஞ்சி கனமாக இருந்தது. அந்த விஞ்ஞானம் அவளுக்கு ஆச்சரியத்தையும், குழப்பத்தையும் அளித்து குரங்கு ஜூஸ் குடிக்கிறது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாள்.அவள் முகத்தில் இருந்த ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் பார்க்க நன்றாக இருந்தது. ஆனால் அவளுக்கு ஏற்ப்பட்ட சந்தேகத்தை பகிர்ந்துகொள்ள யாருமில்லை. நான் அந்த பிய்த்து எடுக்கப்பட்டு தனியே வைக்கப்பட்டிருந்த பொம்மையின் கையை எடுத்து அந்த வண்ண நீரில் முக்கி எடுத்தேன். அதை அப்படியே அவள் கையில் கொடுத்தேன். அவள் அதை மெல்ல அமுக்கி பார்த்தாள். கொஞ்சம் நீர் பிதுங்கி வெளியே வந்தது. நிமிர்ந்து என்னை பார்த்தாள். அவளே மறுபடியும் அந்தக் கையை நீரில் அமிழ்த்து எடுத்தாள். அமுக்கி பார்த்தாள். அப்போதும் சற்று நீர் வந்தது. குழப்பமாக என்னைப் பார்த்தாள்.

அப்போது நண்பர் என்னை அழைக்கவே நான் மீண்டும் பேசப்போனேன்.

அவரிடம் பேசிவிட்டு விடைபெற்றேன். வாசல்வரை வந்து வழிஅனுப்பினார். உள்ளேயிருந்து தீபிகா ஓடிவந்து 'டாட்டா' என்று கூறினாள்.

நண்பர் சற்று ஆச்சரியபட்டு 'இவள் யாருக்குமே 'டாட்டா' காட்டியதில்லை' என்று கூறினார்.

அதற்கு நான் கூறியது 'அது ஏன் என்று யோசியுங்கள்.'

Thursday, March 6, 2008

பண்ணை வீடு!

"இந்த வாரம் சனி,ஞாயிறு எந்த வேலையும் வைத்துக்கொள்ளாதே.. நாமெல்லாம் farmhouse போறோம்..இது ஒரு family trip..with kids and all...its gonna be a real fun..கிச்சா எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணிட்டான்.. எதாவது சாக்கு சொல்லி தப்பிக்கப் பார்த்தே.. மகனே நீ காலி.."

கிச்சா,சிவா, கல்யாணசுந்தரம், பிரேம், நடராஜ் ஆகியோர் அடங்கிய நண்பர் குழாம் என்னை மிரட்டியது. எதற்காக இவர்களுக்கு திடிரென்று குடும்பத்தின் மீது பாசம் பொங்குகிறது எனத்தெரியவில்லை. ஒருவேளை பொறுப்பான 'குடும்பத்தலைவர்கள்' பட்டம் பெற திட்டமிடுகிறார்களா? எனக்கு ஒருநாளும் அந்தப் பட்டம் கிடைக்கப்போவதில்லை. நான் ஒரு 'பேச்சிலர்' என்பதால். மனைவிகள் வட்டாரத்தில் ஒருவனுக்கும் அவ்வளவாக மரியாதை இல்லை.என்னை மட்டும் கொஞ்சம் மதிப்பார்கள். காரணம் அவர்களின் குழந்தைகளுக்கு நான்தான் 'பேவரைட்'.! குழந்தைகள் இரண்டு வயது முதல் பதினேழு வயது வரை இரண்டு பாலினங்களிலும் இருப்பார்கள்.அந்தக் குழந்தைகள் எதற்கும் என்னைத்தான் அணுகுவார்கள். கிரிகெட் மட்டை வாங்குவது, பள்ளிக்கூட 'பிராஜக்ட்' செய்வது,உடனடியாக 'ஐஸ் கிரீம்' தேவைப்படுவது, குட்டி சைக்கிளில் 'செயின்' அறுந்தது பற்றி, சுவற்றில் எந்த இடத்தில் பந்து பட்டால் 'அவுட்' என்ற சந்தேகம்.... அவர்களின் தொலைபேசி அழைப்பு பலவிதத்திலும் இருக்கும். 'சர்க்கஸ்' வந்துவிட்டால் போதும். எனக்கு தினசரி அழைப்புதான். இவர்களை சர்க்கஸ் அழைத்துச் சென்று வருவதே மிகப்பெரிய 'சர்க்கஸ்'. இருந்தாலும் அவையெல்லாம் எனக்கு இனிய தருணங்கள்தான். இந்தக் குழந்தைகள் காரணமாகவே, இந்தப் பெண்கள் என்னை மன்னித்து விடுவார்கள். எந்த வீட்டில் எது விஷேசமாக செய்தாலும் எனக்கு சாப்பிட அழைப்பு வந்துவிடும். இந்தப் பயணத்திற்கு வர முடியாத சில நண்பர்களின் குழந்தைகளும் லிஸ்டில் சேர்ந்து, குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அது எனக்குத்தான் சற்று கலக்கத்தைக் கொடுத்தது என்றாலும் இந்தப் பயணத்தின் போது அந்தக் குழந்தைகளின் முகத்தில் மலரப்போகும் மகிழ்ச்சியை காண விருப்பமாகத்தான் இருந்தேன்.கோகுல் பெயரும் அந்த லிஸ்டில் இருந்தது. சற்று கவனமாக இருக்க வேண்டும். இரண்டு முறை அவன் குத்திய குத்தில் உயிர் போய் உயிர் வந்தது. அவன் வயதுக்கு அந்த அளவு உயரம்தான் எட்டியது..... பெரிய பாக்ஸராக்கும். சிவாவின் மனைவி வேறு ' அண்ணே..நீங்க அவசியம் வந்துடுங்க.. இல்லாவிட்டால் இதுங்கள மேய்க்கிறது கஷ்டம்..' என்று கூறினாள். விட மாட்டார்கள்.. போவதைத் தவிர வேறு வழியில்லை.

தினமும் மாலையானால் இதே பேச்சு.ராணுவ திட்டமிடல் மாதிரி பேசினார்கள். எனக்கு ஒரு விதத்தில் இது மகிழ்ச்சியை கொடுத்தது. இவர்கள் மனைவி, குழந்தைகளை மகிழ்ச்சி படுத்தப் போகிறார்கள். அதுவே எனக்கு பெரிய விசயமாக இருந்தது. மொத்தம் எத்தனை பேர் என கணக்கிட்டு அதெற்கேற்றார்போல் வாகன ஏற்பாடு, உணவுக்கு என்ன செய்யப்போகிறோம் என்பது பற்றி.. பண்ணை வீட்டில் உள்ள நீச்சல்குளத்தில் குளிக்க அவர்களுக்கும், குழந்தைகளுக்கும் swim suit வாங்குவது பற்றி.. நீச்சல்குளத்தில் மிதக்கவிட பலூன்கள்,வளையங்கள்.. குழந்தைகளுக்கு தேவைபடும் 'ஸ்னாக்ஸ்' பற்றி.. அவர்களின் எல்லோருடைய தேவையும் அலசப்பட்டது. பேச்சு..பேச்சு..கிளம்பும் வரை இதே பேச்சுதான்..

''முதலில் பசங்களுக்கு கொஞ்சம் 'மாயாஜாலில்' விளையாட்டு.. அப்புறம் 'முட்டுக்காடில்' போட்டிங்.. முதலை பண்ணையில் கொஞ்ச நேரம்.. அப்புறம் நேரா மகாபலிபுரம்.. திரும்பி 'உத்தண்டி' வந்து பண்ணைவீட்டில் இரவு தங்குறோம்.. அங்க சமையல் பாத்திரங்களோடு அருமையான 'கிச்சன்' இருக்குது ..பெண்கள் இரவு உணவு தயார் செய்கிறார்கள்..நான் கொரியன்பாணி முட்டைப் பொறியல் செய்யப் போகிறேன்..அதிகாலையில் பசங்களை எழுப்பி கடற்கரையில் சிப்பிகளை பொறுக்கச் சொல்லலாம்..அங்கேயே அருமையான மீன் கிடைக்கும்..மதிய சாப்பாட்டிற்க்கு மீன் குழம்பு மீன் வறுவல்" இது பிரேம்.

"சந்திரா பல்லியை பார்த்தாலே நடுங்குவாள்..முதலைப் பண்ணையில் நிச்சயம் அவள் காரை விட்டு இறங்கப்போவதில்லை. அப்புறம்.. ரிட்டர்ன் வரும்போது 'மாயாஜால்' போகலாமே.." என்று சிவா சொன்னான்.

"ஒ.கே.." குழு ஒப்புதல் அளித்தது.

"ஹலோ..கீதா..நான் பரமேஸ்வரி பேசுறேன்..இந்த ஹேமா வருவேன்னு அலுச்சாட்டியம் பண்றா..அவள அனுப்பி வைக்கிறேன்..கொஞ்சம் பார்த்துக்க..வளர்ந்த பொண்ணு மாதிரியா நடந்துக்குறா..?அப்புறம்..அவள 'ஸ்விம்மிங்பூலில்' குளிக்கவிடாதே.. ஆமா..'pads' இருக்கு..அவ 'பேக்' லேயே வைச்சு இருக்கேன்.."

ஹேமா, இந்தப் பயணத்தில் கலந்துகொள்ள முடியாத ராஜேந்திரனின்-பரமேஸ்வரி தம்பதியின் பத்தாம் வகுப்பு படிக்கும் அருமைபுத்திரி.. 'அந்தாஷ்சரி' மன்னி.. புதிய இந்தி,தமிழ் படங்களின் ஆடியோ ரிலீஸான மறுநாள் அனைத்துப் பாடல்களையும் பாடுவாள். வீடுகளில் குழந்தைகளை வைத்து அவ்வப்போது நடைபெறும் ஆடல்,பாடல் நிகழ்ச்சிக்கு இவள்தான் இயக்குனர். எங்களையெல்லாம் வைத்து 'கேம் ஷோ' நடத்துவாள். எனக்கு 'பபூன்' குல்லா வைத்து எல்லாக் குழந்தைகளையும் சிரிக்க வைப்பாள்.உற்சாகத்தின் மறு பெயர் ஹேமா!

"சந்திரா..உன்கிட்டே 'பிரட் டோஸ்டர்' இருந்தா எடுத்துக்க..பசங்க பசின்னு சொன்னா.. உடனே போட்டுக் கொடுத்திடலாம்.."

"அம்மா..இங்க வந்து அப்பாவ பாரு..!"

" அய்யோ..என்னா எழவு ட்ரெஸ் இது..முக்கா காலுக்கு பேண்ட்.. கழட்டுங்க முதல்ல.."

"நோ சான்ஸ்..அய்யா இன்னும் இரண்டு நாளைக்கு 'பீச் காஸ்டியூம்தான்'.."

"கருமம்.."

"நாம சரியா 10.30க்கு கிளம்பி விடனும்.."

"நடராஜ்..என்னடா இது..உன் மாமனார் எல்லோருக்கும் முன்னாலே வேனில் ஏறி பளிச்சுனு உட்கார்ந்து இருக்கார்..முதல்ல அவர கழட்டிவிடுடா.."

"டேய்..அவர வேண்டாம்னு சொன்னேன்னு வைச்சுக்க.. அவ்வளவுதான்.. என் பொண்டாட்டி பத்தரகாளியா மாறிடுவா.. அவரால ஒரு பிரச்சனையும் இல்லடா.."

"திருவான்மியூரில் வண்டியை நிறுத்தி அவர பொடி வாங்க அனுப்பி அப்படியே ஆள தொலைச்சிடலாமா?"

"டேய்.."

"இத முதல்ல ஏத்துங்க..இதுல தான் அரிசி,பருப்பு மசாலா அயிட்டமெல்லாம் இருக்கு."

"அம்லு..அஜய்..தீபிகா..எல்லோரும் வேன்லே ஏறுங்க..லேடிஸும் அதிலேயே ஏறுங்க..நாங்க கார்ல வறோம்"

"எங்கள வெட்டி உடுருதிலேயே குறியா இருங்க..அப்படி என்னத்ததான் சேர்ந்து சேர்ந்து பேசுவீங்களோ.."

"சரி..சரி..ஏறு..டயமாச்சு.."

அனைவரையும் ஏற்றிக்கொண்டு, இரைச்சல்களோடும் உற்சாகமாகவும் கிழக்குக் கடற்கரை சாலையை நோக்கிக் கிளம்பின, அந்த வாகனங்கள். சன்னல்களில் இரண்டொரு பலூன்கள்கூட தலைகாட்டின.

ஆனால் மறுநாள் அதே வாகனங்கள் சென்னையை நோக்கி திரும்பி வருகையில் மிக அமைதியாக திரும்பின. யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. கணவர்கள் அமைதியாக சாலையை பார்த்து வாகனங்களை ஓட்டினார்கள். மனைவிகளின் முகங்களில் எரிமலை தெரிந்தது.எடுத்துப் போன மூன்று முழுஅளவு 'விஸ்கி' பாட்டில்களால் வந்த வினை. நான் கல்யாணசுந்தரத்தின் காரில் பின் இருக்கையில் உட்கார்ந்திருக்கிறேன். முன்இருக்கை இடது புறத்தில் கீதா உர்ரென்று கடந்து செல்லும் சாலையின் நடுவே பார்த்தவாறு உட்கார்ந்திருக்கிறாள். அவளை பார்க்கும் போது இலக்கை நோக்கி விரையும் ஏவுகணையை போலவே இருந்தாள். வீட்டில் போய்தான் விழுந்து வெடிக்கும் என நினைக்கிறேன்.என் இடப்புற இருக்கைகளில் குழந்தைகள் ஒன்றோடொன்று கலந்து அசதியில் உறங்கிக் கொண்டிருந்தன. பிரேம்'மின் இரண்டரை வயது மகள் அஸ்வினி என் கழுத்தைக் கட்டிக்கொண்டு தூங்கிக்கொண்டு வந்தாள். அவள் தூக்கம் கெட்டுவிடாதவாறு அதிகம் அசையாமல் வந்தேன்.கண்ணாடி வழியாக சுந்தரத்தின் முகத்தைப் பார்த்தேன். அமைதியாக வண்டி ஓட்டினான். திரும்பி வரும்போது நாங்கள் போவதாக இருந்த 'மாயாஜால்' இடதுபுறம் சட்டென்று தோன்றி ஓடி மறைந்தது. யாரும் அதை கவனித்ததாகவும் தெரியவில்லை. இதே அமைதி மற்ற நண்பர்கள் வரும் வண்டியிலும் இருப்பது அவர்கள் அனுப்பும் எஸ்.எம்.எஸ் செய்தியிலிருந்து எனக்குத் தெரிந்தது. தாம்பத்யத்தில் அவ்வப்போது குறுக்கிடும் இந்த மெளனராகக் காலம், பிரம்மச்சாரியாக இருந்தபோதிலும் நான் அறிந்த ஒன்றுதான். சில நாட்களில் சரியாகும் எனவும் எனக்குத் தெரியும்.அவரவர் வீடு வந்ததும் அமைதியாக பிரிந்தார்கள்.கணவர்கள் gas chamber-ன் உள்ளே போகும் யூதர்கள் போல் வீட்டினுள் சென்றார்கள்.

அடுத்து வந்த தினங்களில் ஒரு மாலைப் பொழுதில் நண்பர்கள் கூடி பேசிய பேச்சு இப்படியாக இருந்தது..

" useless ladies..next time no females..only stags..கிச்சா..இனிமே ஒருத்தியையும் வண்டிலே ஏத்தாதே..சீரியல கட்டிகிட்டு அழட்டும்.. அவள்களும் 'எஞ்ஜாய்' பண்ண மாட்டாள்க..நம்மையும் 'எஞ்ஜாய்' பண்ண விடமாட்டாள்க..!"

எனக்குப் புரியவில்லை.. 'எஞ்ஜாய்' பண்ணுவது என்றால் என்ன?

பண்ணைவீடு முழுவதும் வாந்தி எடுப்பதா?