Wednesday, October 17, 2007

இவனையெல்லாம் அடித்தால் தப்பா?

நேற்று பூந்தமல்லி நெடுஞ்சாலையில் என் இருச்சக்கர வாகனத்தில் போய்க் கொண்டிருந்தேன். பச்சையப்பன் கல்லூரி தாண்டி ஹாரிங்டன் சாலையில் திரும்பினேன்.அப்போது என்னை உரசுவது போல் இரு சக்கர வாகனத்தில் கடும் வேகத்தில் ஒருவன் கடந்தான்.கடந்த சில அடிகளிலேயே இடது புறம் திரும்பி பான்பராக் எச்சிலை காற்றில் துப்பினான். அவ்வளவுதான்.. என் இடது கை, கால், ஹெல்மட்...என் அருகில் குழந்தையை வைத்துக்கொண்டு பயணம் செய்த தம்பதி.. எல்லோர் மீதும் எச்சில் தூறல்."ஏய்.." என்று கத்ததான் முடிந்தது.நொடியில் வாகன நெரிசலில் மறைந்தான்.

இவனையெல்லாம் அங்கேயே சட்டையை பிடித்து நாலு அறை அறைந்தால் தப்பா?

இந்த அதீத எச்சில் துப்பும் பழக்கம்..அதுவும் ஓடும் வாகனத்திலிருந்து எச்சில் துப்பும் பழக்கம் சென்னைக்கே உரித்தான ஒன்றா..இல்லை மற்ற நகரங்களிலும் இருக்கிறதா?

Tuesday, October 9, 2007

சோதிடம் என்ற புண்ணாக்கு ஒரு புரட்டாம்...

சோதிடம் புவியில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒரு குழந்தையின் தலைவிதியை அந்த நேரத்தில் விண்ணில் காணப்படும் சில குறிப்பிட்ட கோள்கள், இராசிகள், நட்சத்திரங்கள் ஆகியன தீர்மானம் செய்கின்றன என்று சொல்லுகிறது. இதனை அறிவியல் அடிப்படையில் எண்பிக்க முடியாது. சோதிடத்தின் அடிப்படை மத நம்பிக்கை மற்றும் கடவுள் நம்பிக்கை போல் வெறும் மனத்தளவிலான நம்பிக்கை மட்டுமே.

சோதிடம் - சாதகம் என்பவை போலி அறிவியலே என்பதை சுருக்கமாகக் காண்போம்..

1) சோதிட சாத்திரம் நாட்டுக்கு நாடு இனத்துக்கு இனம் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் வேறுபடுகின்றன.

2) வெப்ப மண்டல சோதிடம் நெப்தியூன், யுறேனஸ் மற்றும் புளுட்டோ கோள்களைக் கணக்கில் எடுக்கிறது. ஆனால் இராகு கேது கோள்களையும் 27 நட்சத்திரங்களையும் கணக்கில் எடுப்பதில்லை.

3) இந்திய சோதிடம் நெப்தியூன், யுறேனஸ், புளுட்டோ கோள்களைக் கணக்கில் எடுப்பதில்லை. ஆனால் இராகு கேது என்ற கற்பனைக் கோள்களைக் கணக்கில் எடுக்கிறது.

4) சோதிடம் ஞாயிறு குடும்பத்தின் மையம் புவி என்று சொல்வது பெரிய மடமை. அதன் மையம் ஞாயிறு என்பது இன்று அறிவியல் பால பாடம்.

5) சோதிடம் ஞாயிறு போன்ற விண்மீனையும் நிலா போன்ற துணைக் கோளையும் கோள்களாகவே கொள்கிறது.

6) இராசி மண்டலத்தை 12 ஆகப் பிரித்து அவை ஒவ்வொன்றையும் 30 பாகை கொண்ட வீட்டுக்குள் அடைப்பது செயற்கை ஆனது. அப்படிப் பிரிக்கப்படுவதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் கிடையாது. அது முற்றிலும் விதிக்கட்டின்றி (Arbitrary) மனம் போன போக்கில் வகுக்கப் பட்டதாகும். கோள்கள் வௌ;வேறு இராசியில் வௌ;வேறு காலத்தைச் செலவிடுகின்றன. பாம்பாட்டி என்ற இராசியை சோதிடம் முற்றாகக் கணக்கில் எடுப்பதில்லை.

7) இராசி உருவங்கள் (மேடம், இடபம்...) வெறும் கண்காட்சியை அடிப்படையாகக் கொண்டவை. வௌ;வேறு தொலைவில் கூட்டமாக இருக்கும் நட்சத்திரங்கள் பண்டைய மனிதனுக்கு ஆடு, மாடு, சிங்கம், நட்டுவக்காலி போன்ற தோற்ற மயக்கத்தைக் கொடுத்தன. அந்தத் தோற்றத்தை வைத்து அந்த இராசிகளுக்கு உண்மையான ஆடு, மாடு, சிங்கம், நட்டுவக்காலி போன்றவற்றின் குணாம்சங்களை மாடேற்றினர்! அறிவியல் வளர்ந்து விட்ட இந்தக் காலத்திலும் அறிவிலிகளான சோதிடர்கள் தங்கள் மூடத்தனத்தைக் கைவிடாது தொடர்ந்து சோதிடத்தைக் குரங்குப் பிடியாகப் பிடித்து வருகின்றனர்.

8) சோதிடத்தில் ஒரு குழந்தை பிறந்த நேரம் மற்றும் இடம் முக்கியமானது. ஆனால் குழந்தையின் பிறப்பு என்னும் பொழுது அது குழந்தை கருவறையில் இருக்கும் பொழுது உயிர் ஏற்பட்ட நேரமா? பிறக்கும் பொழுது தலை வெளியில் தெரிந்த நேரமா? கால் தரையில் படும் நேரமா? மருத்துவச்சி கையில் எடுத்த நேரமா? தொப்புள்கொடி அறுக்கப்பட்ட நேரமா? மருத்துவர் வயிற்றை அறுத்து எடுத்த நேரமா? குழந்தையின் முதல் மூச்சா? அல்லது அழுகையா? இதில் எது என்பதில் சோதிடர்களிடையே கருத்து ஒற்றுமை இல்லை. இரண்டொரு மணித்துளி நேர வித்தியாசம் ஒரு குழந்தை பிறக்கும் சமயத்தில் அடிவானத்தில் எழுகிற இராசி வீடான பிறப்பு (ஜென்ம) இலக்கினம், சந்திரன் நின்ற இராசி வீடான பிறப்பு (ஜென்ம) இராசி, பிறப்புக் காலத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இடம்பெற்று இருந்ததோ அந்தப் பிறப்பு (ஜென்ம) நட்சத்திரம் ஆகியவை வேறு வேறாக மாறி விட வாய்ப்பு இருக்கிறது.

9) புவி தன்னைத்தானே தனது அச்சில் சுற்றும்பொழுது தளம்பல் (றழடிடிடந) ஏற்படுகிறது. அதனால் ஞாயிறு தனது பயணத்தில் புவியின் நடுவட்டக்கோட்டைக் கடக்கும் பொழுது முந்திய ஆண்டைவிட மறு ஆண்டு சற்று மேற்கு நோக்கிக் கடக்கிறது. இந்த வேறுபாட்டை வெப்ப மண்டல சோதிடம் கணக்கில் எடுப்பதில்லை. இரண்டுக்கும் இடையிலான இந்த வேறுபாடு இன்று ஏறத்தாழ 24 பாகையை (24 நாள்களை) எட்டி இருக்கிறது.

(10) ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் விண்ணில் வலம் வரும் கோள்கள், இராசிகள் மற்றும் விண்மீன்களின் இருக்கைகள் அந்தக் குழந்தையின் தலைவிதியை நிர்ணயிக்கிறது என்றால் அந்த இரண்டுக்கும் உள்ள தொடர்பு என்ன? பல கோடி கல் அப்பால் இருக்கும் கோள்களின் ஈர்ப்பு அல்லது காந்த விசையா? பல நூறு ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள நட்சத்திரங்களின் ஈர்ப்பு அல்லது காந்த விசையா? ஆம் என்றால் அந்தக் குழந்தைக்கு அண்மையில் உள்ள பருப்பொருள்களின் ஈர்ப்பு அல்லது காந்த விசை ஏன் கணக்கில் எடுக்கப்படுவதில்லை?

(11) புவியின் நடுவட்டக்கோட்டுக்கு அண்மித்த நிலப் பகுதிகளிலேயே சோதிட சாத்திரம் தோற்றம் பெற்றது. இதன் தார்ப்பரியம் என்னவென்றால் நடுவட்டக்கோட்டுக்கு வடக்கே அலஸ்க்கா, நோர்வே, பின்லாந்து, கிறீன்லாந்து போன்ற நாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்குச் சாதகம் கணிப்பது முடியாத செயலாகும். காரணம் இந்த நாடுகளில் பகல் இரவுகள் பல கிழமைகள் பல மாதங்கள் தொடர்ச்சியாக நீடிக்கிறது. இதனால் ஒரு குழந்தை பிறக்கும் பொழுது அடிவானத்தில் 2 மணித்தியாலத்துக்கு ஒரு இராசி என எழும் இராசி மண்டலங்களையும் கோள்களையும் பார்க்க முடியாது. இதனால் சோதிடத்தின் அடித்தளமே ஆட்டங்கண்டு விடுகிறது.

(12) மனிதன் பிறந்த புவி;க் கோளையும் அதன் தாக்கத்தையும் சோதிட சாத்திரம் அறவே கணக்கில் எடுப்பதில்லை. புவியும் ஒரு கோள் என்பது சோதிட சாத்திரிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதே அதற்கான ஏது ஆகும்.

கீழே கொடுக்கப்பட்ட அட்டவணை ஈர்ப்பு விசையின் பெறுமதியை (செவ்வாய்க் கோளோடு ஒப்பிடும் பொழுது) காட்டுகிறது. செவ்வாய்க் கோள் விதிக் கட்டின்றித் தெரிவு செய்யப்பட்டது. செவ்வாயோடு ஒப்பிடுவது சோதிடம்; அந்தக் கோளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாகவே! .
ஈர்ப்பு விசை ஈர்ப்பு விசையின் பெறுமதி
தாய் 20
மருத்துவர் 06
மருத்துவமனை 500
ஞாயிறு 854,000
நிலா 4,600
புதன் .38
வெள்ளி 27
செவ்வாய் 1
வியாழன் 46
யுறேனஸ் 0..1
நெப்தியூன் 0.03
புளுட்டோ 0.059
வால்மீன் 0.00001
ஈர்ப்பு விசை கோள்கள் புவிக்கு அருகில் வரும் பொழுது கணிக்கப்பட்டதாக கொள்ளப்பட்டது. மேலதிகமாக கொள்ளப்பட்ட அனுமானங்கள் (யுளளரஅpவழைளெ)-
குழந்தையின் எடை - 3 கிலோ
தாயின் எடை - 50 கிலோ
மருத்துவர் எடை - 75 கிலோ
மருத்துவமனைக் கட்டடத்தின் எடை- 2.1 தர 1012
தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் உள்ள தொலை- 0.1 மீ
மருத்துவருக்கும் குழந்தைக்கும் இடையில் உள்ள தொலை- 0.3 மீ
மருத்துவமனையின் மைய எடைக்கும் குழந்தைக்கும்இடையில் உள்ள தூரம் - 6.1 மீ
மேலே கொடுக்கப்பட்ட தரவுகள் அடிப்படையில் குழந்தை பிறக்கும் பொழுது தாய், மருத்துவர் மற்றும் மருத்துவமனைக் கட்டடம் மூலமாக இடம் பெறும் ஈர்ப்பு விசையின் தாக்கம் (force of gravity) சோதிடம் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் செவ்வாய்க் கோளை விட முறையே 20, 6 மற்றும் 500 மடங்கு கூடுதலாக இருப்பதை நீங்கள் அவதானிக்கலாம். எனவே ஒரு சோதிடர் ஒரு குழந்தையின் சாதகத்தை ஈர்ப்பு விசை அடிப்படையில் தயாரித்தால் கோள்களை மட்டுமல்ல விண்வெளியிலும் மண்ணிலும் காணப்படும் ஏனைய பருப்பொருள்களையும் கணக்கில் எடுக்க வேண்டும்.
ஈர்ப்பு விசை அல்ல அந்த ஆற்றல் மின்காந்த ஆற்றல் (electro-magnetic energy) என்று சோதிடம் சொல்லுமானால் ஒரு குழந்தை பிறக்கும் பொழுது அதன் மீது பருப்பொருள்கள் செலுத்தும் மின்காந்த ஆற்றல் செவ்வாய்க் கோளில் இருந்து வெளிப்படும் மின்காந்த ஆற்றலோடு ஒப்பிடும் பொழுது பின்வருமாறு காணப்படும்.

பருப்பொருள் மின்காந்த ஆற்றல்
ஞாயிறு 3 தர 109
200 வட்ஸ் மின்குமிழ் 9 தர 106(2 மீ தொலைவில்)முழு நிலா 7,600
புதன் 0.4
வெள்ளி 4.4
செவ்வாய் 1
வியாழன் 0.8
சனி 0.1
யுறேனஸ் .0004
நெப்தியூன் .00005
புளுட்டோ 8 தர 10 - 3
மேலே கொடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 200 வாட்ஸ் ஆற்றல் உடைய ஒரு மின்குமிழியில் இருந்து வெளிப்படும் மின்காந்த ஆற்றல் செவ்வாய், புதன், வெள்ளி போன்ற கோள்களைவிட பல ஆயிரம் மடங்கு வலுவானது!
குழந்தை பிறக்கும் பொழுது அதனைப் பாதிப்பது கோள்களின் ஈர்ப்பு விசையும் அல்ல மின்காந்த விசையும் அல்ல என்றால் பின் எதுதான் அந்தக் குழந்தையின் தலைவிதியை நிர்ணயிக்கிறது என்பதைச் சோதிடர்கள் தெளிவாக விளக்க வேண்டும். பிறப்பதற்கு முன்னரே முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினை காரணமாக ஒவ்வொரு உயிரின் தலைவிதி தீர்மானிக்கப்படுகிறது என்று இந்து மதம் சொல்கிறது! அது உண்மையென்றால் ஒரு குழந்தையின் பிறப்பின் பொழுது கோள்கள், நட்சத்திரங்கள், இராசிகள் ஆகியவற்றின் இருக்கை முக்கியமற்றுப் போய்விடுகிறது.

சோதிடம் முற்றிலும் பிழையான அடித்தளத்தில் எழுப்பப்பட்டிருக்கிறது என்பதற்கு மேலே எடுத்துக் காட்டியவை மேலதிக சான்றுகளாகும்.
வானியல் பற்றிய அறிவு இன்றிருப்பது போல் பண்டைக் காலத்தில் இல்லாததால் சோதிடர்கள் மனம் போன போக்கில் கோள்கள் பற்றியும் இராசிகள் பற்றியும் இராசி வீடுகள் பற்றியும் எழுதி வைத்தார்கள். அப்படி எழுதி வைத்ததைப் பெரிய குற்றம் என்று சொல்ல முடியாது. அன்றைய அறிவு அவர்களுக்கு அந்த அளவில் மட்டுமே இருந்தது. ஆனால் இன்றைய சோதிடர்கள் தொலமி, வராகமிரர் போன்றோர் தங்கள் காலத்தில் எழுதி வைத்ததையே கிளிப்பிள்ளை போல் மனப்பாடம் செய்து அதன் அடிப்படையில் சாதகம் கணித்துப் பலன் சொல்கிறார்கள். இது சோதிடர்களின் உச்ச கட்ட புரட்டு ஆகும்.

source: http://thozharperiyar.blogspot.com/2007/07/blog-post_8530.html

Saturday, October 6, 2007

ஜோதிடம்‍‍‍- என் கேள்வியும் வந்த பதிலும்

செல்லா அவர்களின் பதிவில் நான் இட்ட பின்னூட்டதிற்கு Dr.Bruno அவர்கள் தன் பதிவில் பதிலளித்திருக்கிறார்.அது எனக்கு ஒரு தெளிவை தராததால் மீண்டும் விளக்கம் கோருகிறேன்.

என் கேள்வி:

Greenwich Mean Time- பல முறை மாற்றி அமைக்கப்பட்டது.இலங்கையின் நேரம் கூட சிறிது நாட்களுக்கு முன் மாற்றி அமைக்கப்பட்டது.இது போன்ற சமயங்களில் எல்லா ஜாதகங்களும் மாற்றி எழுதப்படுமா?

http://osaichella.blogspot.com/2007/10/blog-post_8682.html

வந்த பதில்:

Horoscope is written with reference to the Time of Sun Rise. So Change of GMT or the DST will not have any impact on the horoscope.

For example, if you are going in Pandian Express from Egmore to Madurai. If the train starts at 9 PM, and if you eat a biscuit after 30 mintues, then you have eaten the biscuit at 9:30

If the train starts at 8 PM and if you eat a biscuit after 30 minutes, then you have eaten the biscuit at 8:30

http://bruno.penandscale.com/2007/10/faq-on-astrology.html

எனக்கு இன்னும் புரியவில்லை...Time of sun rise ஐ எப்ப‌டி க‌ணிக்கிறார்க‌ள்? GMT அல்ல‌து local standard time ஐ வைத்துதானே? குழந்தை பிறக்கும் நேரத்தையும் நாம் இந்த முறையில்தான் குறிக்கிறோம்.திடிரென்று இதில் அரைமணி,ஒருமணி மாற்றிவைத்தால்,பழைய சூரிய உதய நேரத்தின்படி ஏற்கனவே எழுதிவைக்கப்பட்ட ஜாதகங்கள் அனைத்தும் மறுபடியும் மாற்றி எழுதப்படுமா என்பதுதான் நான் அறிய விரும்புவது.

Day light saving time concept உள்ளது என்கிறார் டாக்டர்.புரூனோ.. எல்லாம் ஒரு மாதிரி adjusட் பண்ணி ஒரு குத்து மதிப்பாக ஒரு நேர அளவுகோலை ஏற்படுத்துவது...அப்படிதானே டாக்டர்?

Biscuit உதார‌ண‌ம் ஒரு பிஸ்கோத்து...வேறு எதாவ‌து சொல்லியிருக்க‌லாம்.

Thursday, October 4, 2007

கொஞ்சம் சிந்திப்போமா சகோதரிகளே...?

சமீபத்தில் நண்பரொருவர் புதிதாக ஆரம்பித்த (Fancy Store)கடைக்குச் சென்றிருந்தேன்.நண்பர் சில சாமான்களை அடுக்கிக் கொண்டிருக்க,நானும் உதவலாமே என்ற எண்ணத்தில் சாமான்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.அவை முகப்பூச்சு அழகுக் க்றீம்கள்.சில க்றீம்கள் அடங்கியிருக்கும் பெட்டிகளின் பின்பக்கத்தைப் பார்க்க,சின்ன எழுத்தில் எழுதப்பட்டிருந்த ஒரு வரி கண்ணில் பட்டது."Not tested on animals" (விலங்குகளின் மேல் இச்சாதனம் உபயோகிக்கப் படவில்லை).வேறு சில நிறுவனங்களின் க்றீமில் அவ்வரி காணப்படவில்லை. அன்று முழுவதும் அவ்வரியே என் மனதில் வந்து போக,அது என்ன "Not tested on animals" என ஆராய்ச்சி செய்ய களத்தில் குதித்தேன்.இதற்காக எனக்கு இணையத்தளங்கள் பெரிதும் உதவின.எவ்வளவு கொடூரமான உண்மைகள்...?

மனிதர்களது முகப்பூச்சுக்காக என்னென்ன கொடுமைகளை ஒன்றும் அறியா விலங்குகள் அனுபவிக்க நேரிடுகின்றன?அந்த வேதனைகளை நீங்களும் சற்றுப் படித்துப் பாருங்கள்.

விலங்குகளின் மீது திணிக்கப்படும் அமிலக் கொடுமைகள் :

மனிதர்கள் அன்றாடம் உபயோகிக்கும் பலவித அழகுசாதனங்களிலும் அமிலப் பொருட்கள் கலந்துள்ளன என்று தெரியும்.ஆனால் ஒவ்வொரு அழகுப்பொருளிலும் 50,000 இலிருந்து 60,000 வரை அமிலக்கூட்டுப் பொருட்கள் அடங்கியுள்ளன தெரியுமா...?ஆனால் பலருக்கும் தெரியாத உண்மை என்னவென்றால் இந்த அபாயகரமான அமிலக்கூட்டுக் கலவைகள் ஆயிரமாயிரம் முயல்கள்,குரங்குகள், எலிகள்,அணில்கள்,பன்றிகள் மீது மிகவும் கொடூரமான முறையில் பரிசோதிக்கப்படுகின்றன.பரிசோதனைகளின் போது அவற்றின் கண்கள் குருடாக்கப் படுகின்றன.உறுப்புக்களை எரித்து,அரித்து விடும் அமிலங்கள் வாய்க்குள் ஊற்றப்படுகின்றன.

கொடூரமான சில பரிசோதனைகள் :

அழகு சாதனங்களின் முடிசூடா மன்னியான உதட்டுச் சாயம் எல்.டி 50 முறையில் அதாவது Lethal dose என்ற முறையில் 1927ம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டு வருகின்றன.இந்த லிதல்டோஸ் முறையில்,ஆசனிக் என்ற தீங்கு விளைவிக்கும் அமிலத்தை முயல் போன்ற பரிசோதனைக்காக கொண்டு வரப்படும் விலங்குகளின் வாயில் ஒரு குழாயை நுழைத்து அதில் ஊற்றி பரிசோதனை செய்யப்படுகின்றது.இதனால்,அவ்விலங்குகளின் கண்களிலிருந்தும் வாயிலிருந்தும் இரத்தம் கசிந்து விடுகின்றன.அல்லது வாழ்நாள் முழுவதும் பக்கவாத நோய் தாக்கி அவதிப்பட்டு இறந்து விடுகின்றன.

நாம் தலைக்குத் தேய்த்து தலைமுடியை பளபளவென்று வைத்துக்கொள்ள உதவும் ஷாம்புக்கள்,கண்களை அழகுபடுத்தும் மஸ்கராக்கள் எப்படித் தயாரிக்கப்படுகின்றன தெரியுமா?இந்த வகை பரிசோதனைகளை குருட்டுப்பரிசோதனைகள் என்கிறார்கள்.
இதில் கருணை,இரக்கம்,அன்பு சிறிதளவேனும் இன்றி விலங்குகளின் கண் இமைகளை கத்தரித்து எடுத்து விடுகிறார்கள்.பின் கண்களைப் பெரிதாக்குவதற்காக,அவைகள் கண்களை மூடாமல் இருக்க அவற்றின் கண்மேல் பகுதியை கிளிப் போட்டு நெற்றிப் பகுதியோடு இணைத்து விடுகிறார்கள்.தலையைத் திருப்பாமல் இருக்க சுவரோடு ஒரு உலோக பெல்ட் போட்டு விடுகிறார்கள்.

அதன் பின் ஆரம்பிக்கும் கொடுமைகள்.விதவிதமான அமிலக்கலவைகள் கண்களில் ஊற்றும் போது கதறித் துடிக்கும் இம் மிருகங்களின் கண்களிலிருந்து வெளிப்படும் இரத்தத்தை பரிசோதனைக்கூடத்தில் பரிசோதனை செய்து அழகுசாதனங்களில் அவற்றை உபயோகப்படுத்துவதால் மனிதர்களுக்குத் தீங்கு விளையுமா,விளையாதா எனக்கண்டுபிடிக்கப் படுகின்றன.ஆனால் அவ்விலங்குகளோ மருத்துவ உதவி ஏதுமின்றி,இரத்தம் கக்கி மடிகின்றன.

இதற்கான தீர்வு என்ன ?

PETA (People for Ethnic Treatment of Animals) போன்ற விலங்குகளின் பாதுகாவலர்களின் எதிர்ப்புக்குரலால் சிந்திக்கத் தொடங்கியவர்களின் சட்டம் ஒன்று அமுல்படுத்தப் பட்டிருக்கின்றது.அதாவது எல்லா அழகு சாதனங்களிலும் ஒரு வாக்கியம் இருக்க வேண்டும்.
"இச்சாதனம் விலங்குகளின் மேல் பரிசோதிக்கப்பட்டதல்ல"

எனவே சகோதரிகளே !அடுத்த முறை உங்களுக்குப் பிடித்த மேக்-அப் பொருட்கள் வாங்கும் முன் அந்தப் பொருளில் "விலங்குகளின் மேல் பரிசோதிக்கப் படவில்லை" என்ற லேபிள் உள்ளதா என்று பார்த்து வாங்கவும்.இல்லையென்றால் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத (Herbal) அழகுசாதனங்கள் வாங்கவும்.இதனால் அவற்றை உபயோகிக்கும் போது பரிதாபமாக வலியினால் கதறும் விலங்குகளின் குரல் உங்களை உலுக்காதல்லவா..?!

குறிப்பு: இந்த பதிவு நண்பர் ரிஷான் ஷெரீப் என்பவரின் பதிவிலிருந்து,அவருடைய அனுமதியுடன் இங்கு மறுபதிவு செய்யப்படுகிறது.மூலத்திற்கு இங்கு செல்லவும்:

http://rishanshareef.blogspot.com/2007/10/blog-post.html

Wednesday, October 3, 2007

அமெரிக்க கூலிப்படை-Blackwater

அமெரிக்காவின் அடியாள் படையில் முக்கியமானது இந்த ‘பிளாக் வாட்டர்’ (Blackwater- private military and security company) தனியார் ராணுவ கம்பெனி. காசு கொடுத்தால் போதும்..எங்கு வேண்டுமானாலும் இறங்கி அடித்து நொறுக்குவார்கள்.



எரிக் பிரின்ஸ் என்பவரால் அமெரிக்காவில் உள்ள நார்த் கரோலினாவில் 1997-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த தனியார் ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு, வருடத்திற்கு 40,000 பேருக்கும் அதிகமாக பயிற்சி தருவதாக கூறப்படுகிறது.

எரிக் பிரின்ஸ் ஒரு முன்னால் அமெரிக்க கப்பற்படையின் கமாண்டோ ஆவார்.இந்த நிறுவனம் தன்னை ஒரு தொழில்முறை ராணுவம் என்றும்,சட்ட ஒழுங்குகளை அமல்படுத்துவது, பாதுகாப்பு மற்றும் போர் நடைபெறும் இடங்களில் அமைதிப்படையாகவும் செயல் படுவதாகவும் சொல்லிக்கொள்கிறது.இந்த தனியார் ராணுவத்தில் அமெரிக்கர்கள் அல்லாது கொலம்பியா,சிலி,தென் ஆப்ரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்களும் பணத்திற்காக பணியாற்றுகிறார்கள்.



தற்போது இதன் தீவிரமான செயல்பாடுகள் இராக்கில் நடைபெற்று வருகின்றன.இராக்கிற்கான அமெரிக்க தூதர், அங்கு பயணம் செய்யும் அரசு அதிகாரிகளின் பாதுகாப்பு, மற்றும் சில பாதுகாப்பு நடவடிக்கைகளும் இந்த நிறுவனத்திடம்தான் ஒப்படைக்கப் பட்டுள்ளது.இந்த நிறுவனத்தின் நடவடிக்கைகள்தான் இப்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.இராக்கிய பாதுகாப்பு படையினரோடும், பொதுமக்களிடமும் அத்துமீறலில் இறங்கியதாகவும் கடும் குற்றச்சாட்டுக்கு எழுந்துள்ளது

சென்ற மாதம் பாக்தாதில் நடைபெற்ற ஒரு துப்பாக்கி சூடு சம்பவத்தில் 11 இராக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். அதில் இந்த ‘பிளாக் வாட்டர்’ கடுமையான குற்றச்சாட்டுக்கு ஆளானது.ஒரு முறை இராக்கிய துணை அதிபரின் மெய்காப்பாளரை ‘பிளாக்வாட்டர்’ வீரர் ஒருவர் குடிபோதையில் சுட்டுவிட்டார்.அந்த வீரர் மீது எந்த ஒரு வழக்கும் பதியப் படாமல் இராக்கை விட்டு அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டார். இராக்கில் நடைபெற்ற 195 மோதல் சம்பவங்களில் இந்த ‘பிளாக்வாட்டர்’ படைதான் துப்பாக்கி சூட்டை 163 முறை முதலில் துவக்கியுள்ளது.



இராக்கின் பலூஜாவில் இந்தக் கூலிப் படையின் நான்கு வீரர்கள் கொல்லப்பட்டு அதில் இரண்டு பேரின் உடல்கள் பாலத்தில் தொங்கவிடப்பட்டன. அதைத் தொடர்ந்து நடந்த அமெரிக்க படையின் பதிலடியில் ஏகப்பட்ட இராக்கிய பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். எண்ணற்றோர் அகதிகளாக இடம் பெயர்ந்தார்கள்.

பெரும்பாலான மோதல்களில் ‘பிளாக்வாட்டர்’படை ஒடும் வாகனங்களில் இருந்து சுட்டிருக்கிறார்கள். எத்தனை பேர் இறந்தார்கள் என்ற கணக்கையும் இவர்கள் எடுப்பதில்லை.காயம் பட்டவர்களுக்கு உதவுவதும் கிடையாது.

ஆப்கனிலும் இவர்களின் செயல்பாடுகள் நடந்து வருகிறது. இவர்களின் விமானிகள்
எந்த ஒரு விதிமுறைகளையும் கடைபிடிப்பதில்லை என்றும் சொல்லப்படுகிறது.2004-ல் ஆப்கனில் இரண்டு அமெரிக்க வீரர்கள் விமான விபத்தில் கொல்லப்பட்டதற்கு ‘பிளாக்வாட்டர்’ விமானிகளும்,அவர்கள் விமானமும்தான் காரணம் என்று செய்திகள் கூறுகின்றன.



வெளிநாட்டில் மட்டுமல்லாமல் அமெரிக்காவின் நியு ஆர்லியன்ஸ் நகரிலும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டபோது மக்களின் அதிருப்தியை பெற்றது. அவர்கள் அதிநவீன ஆயுதங்களோடும், லூசியானா மாகாணத்தின் பாதுகாப்புத் துறையின் ‘பேட்ஜ்’களை மார்பில் அணிந்திருந்ததும் சர்ச்சையை கிளப்பியது. ஆனால் லூசியானா மாகாணத்தின் கவர்னரின் அனுமதியோடு புயல் நிவாரண பணிகளைத்தான் தாங்கள் செய்வதாக அந்த நிறுவனம் சொன்னது.

FBI இவர்கள் சம்பந்தமான குற்றச்சாட்டுகளை இப்போது விசாரணையை துவக்கியுள்ளது. இந்த விசாரணையின் லட்சணம் எப்படியிருக்கும் என்பதை ஓரளவுக்கு யூகிக்கலாம். இருந்தாலும் அமெரிக்காவிலும்,உலகின் பல பகுதிகளிலும் இந்த கூலிப்படைக்கு எதிர்ப்பு வரத்தொடங்கி விட்டது.



ஆனால் இந்நிறுவனத்தின் தலைவர்கள்,தங்கள் வீரர்கள் எப்போதுமே சரியான மற்றும் தேவைப்படும் நடவடிக்கைகளைத்தான் எடுப்பார்கள் என்று கூறுகிறது.

இந்த நிறுவனம் 2001-லிருந்து அமெரிக்க அரசிடமிருந்து ஒரு பில்லியன் டாலர்களை வருமானமாக ஈட்டியிருக்கிறது.2004-2006 ஆண்டுக்காக மட்டும் அமெரிக்க அரசிடமிருந்து 832 மில்லியன் டாலர்களை தன் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பெற்றிருக்கிறது.

அமெரிக்கா இப்போது நாடு பிடிக்கும் பணியையும் outsourcing முறையில் ஆரம்பித்திருப்பதாக தெரிகிறது.

குவைத்தை முழுங்கியாகிவிட்டது…ஆப்கன் பிடியில் உள்ளது…இராக்கில் வேலைகள் நடை பெறுகின்றன..இரானும்,வடகொரியாவும் project list-ல் உள்ளன.

ஆகவே ஆயுதங்கள் காத்திருக்கின்றன ஆட்களுக்காக…!