Tuesday, November 27, 2007

நவம்பர் குளிரும் கலங்கிய கண்களும்….

வருடத்திற்கு 10மாதங்கள் கொளுத்தும் சென்னையில் இன்று காலை மெலிதான குளிரை உணர்ந்தேன். இரவும் குளிரத்துவங்கிவிட்டது. நள்ளிரவில் வந்து குல்பி ஐஸ் விற்கிறவனின் மணியோசை நேற்றிலிருந்து கேட்கவில்லை.காலையில் கோலம் போடும் பெண் தலையில் கம்பளிக்குல்லா அணிந்திருக் கிறாள். .வாசலில் நிறுத்திய வாகனத்தில் காலையில் ஈரம் படிந்திருக்கிறது. எதிர்வீட்டில் இருக்கும் முதியவர் இரவானதும் எப்போதும் திறந்திருக்கும் சன்னலை சாத்துகிறார். வீட்டுக்குள் எப்போதாவது வருகிற சிட்டுக்குருவியைப்போல நம் நகரத்திற்கு குளிர்காலம் வந்திருக்கிறது. முடிந்தால் பின்னிரவில் ஒரு மெது நடை நடக்கலாம். எதிரில் நீங்கள் வந்தால் புன்னகைத்துக்கொள்ளலாம்.


###############################

கமலஹாசனும் எஸ்பி பாலசுப்ரமணியனும் தொலைக்காட்சியில் பாடிக்கொண்டிருக்கிறார்கள். முகம் தெரியாதவர்களின் கைதட்டல் ஒலித்து ஓய்கிறது.ஏக் துஜே கேலியேவில் ஒரு சோகப்பாடல். கண்கலங்குகிறது.

ஒருமுறை வெயில்காலத்தில் வடபழனி பேருந்துநிலையத்தில் கேட்ட பாடலைப்பாடியவர்... கண்தெரியாத ஒரு பெண்...'கண்கள் இரண்டும்' என்று உன்னைக்கண்டு பேசுமோ'என்று கீச்சுக்குரலில் துவங்கும் பழைய பாடல். சில்லறை கொடுக்கலாம் என்று எடுத்துக் கையில் வைத்திருந்தேன். பேருந்து கிளம்பும் நேரம்வர நடத்துனர் விரட்ட பாதிப் பாடலுடன் அவள் இறங்கி வெயிலில் நடந்துபோனாள். கண்கலங்கியது.

ஒரு பிறந்தநாள் பார்ட்டியில் நல்ல குடிபோதையில் நண்பர் பாடிய 'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது.'. என்று பாடத்துவங்கி பாதியில் அழுதார். ஏனோ கண் கலங்கியது.

ஊரிலிருக்கும் அப்பாவிடம் எனது பையன் பாட்டுப்பாடு என்று கேட்க அவர் நான் சின்னவனாகத் தூளியில் இருக்கையில் பாடியதாக 'சிங்காரப்புன்னகை கண்ணாரக்கண்டாலே..' என்று குரலுடைந்து பாடினார். கண்கள் கலங்கி வழிந்தன.

பயணத்தில் சிலநேரம். தூக்கம் வராத இரவுகளில் எப்போதாவது...அழவைக்கும் பாடல்கள் உன்னிடமும் இருக்கிறதா நண்பா?

(இணையத்தில் மேய்ந்தபோது கண்ட இவ்வரிகளை எழுதியது ஒளிப்பதிவாளரும்,விகடனில் 'உலக சினிமா' எழுதிவரும் செழியன் அவர்கள்)

Thursday, November 22, 2007

இரத்த ஞாயிறு(Bloody Sunday)..திரைப்பார்வை


இந்தப்படம் 2002-ம் ஆண்டே வெளிவந்திருந்தாலும் எனக்கு இப்போதுதான் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.1972-ம் ஆண்டு அயர்லாந்து மனித உரிமை அமைப்பினர் நடத்திய ஒரு அமைதிப்பேரணியில், இங்கிலாந்து ராணுவத்தினர் நடத்திய கொடுரமான தாக்குதலை,அந்த உண்மைச் சம்பவத்தை கதைக்களனாக கொண்டு இந்த படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அந்த மோதலின் போது 27 பேர் சுடப்பட்டார்கள்..அதில் 13 பேர் கொல்லப்பட்டார்கள்.




வடக்கு அயர்லாந்து நகரமான டெர்ரியில்(Derry) நடந்த இந்த சம்பவத்தை ஒரு documentary style-ல் எடுத்திருக்கிறார் இயக்குனர் Paul Greengrass. அதை மிகச்சிறந்த முறையில் hand-held camera முறையில் படமெடுத்திருக்கிறார் Ivan Strasburg என்ற ஒளிப்பதிவாளர்! close-up காட்சிகளை அருமையாக பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த மாதிரி மக்கள் கூட்டம் அதிகமாக பங்கேற்கும் வெளிப்புற காட்சிகளை படமெடுக்கும் போது அந்த இடத்தின் topography-ஐ ஒரிருமுறை காட்டிவிட்டு close-up-களை நிறைய காட்டுவார்கள். அப்படி காட்டும்போது படம்பார்ப்பவர்களை சிரமப்படுத்தக்கூடாது. இதில் அழகாக செய்திருக்கிறார்கள் இயக்குனரும், ஒளிப்பதிவாளரும்.



கலவரத்தின் போது வெளிப்படும் வலி,வேதனை,சோகம் போன்றவற்றை அற்புதமாக இந்தப்படம் வெளிப்படுத்துகிறது. பேரணியின் ஒரு பிரிவினர் தன்னிச்சையாக பிரிந்து சென்று தாக்குதலை ஆரம்பிக்கும் அந்த mob psychology-ஐ கூட இயல்பாக காட்டுகிறார்கள். அங்கங்கு சில பிரச்சார நெடிகளும், நாடகத்தன்மைகளும் இருந்தாலும் ஒரு நல்லப் படம் பார்த்த திருப்தியை அளித்தது.இந்த படம் 2002-ம் ஆண்டு பெர்னிலில் நடந்த திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதை பகிர்ந்துகொண்டது

Wednesday, November 14, 2007

இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டேன்லி பேசியது...

சுப்ரபாரதிமணியனின் தேர்தெடுக்கப்பட்டக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலான

" THE LAST SYMPHONY "

வெளியிட்டு விழா சமீபத்தில் திருப்பூரில் நடந்தது. அக்கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் எஸ் எஸ் ஸ்டேன்லி(மெர்க்க்குரிப்பூக்கள், ஏப்ரல் மாதத்தில், புதுக்க்கோட்டையிலிருந்து சரவணன், கிழக்குக் கடற்கரை சாலை ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ) பேசியது::


சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்டக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சுப்ரபாரதிமணியன் போன்ற நல்ல எழுத்தாளர்கள் தமிழ் திரைப்பட உலகத்திற்குள் வர வேண்டும் என அழைக்கிறேன்.ஆனால் பன்னாட்டு நிறுவனங்களும், வெளிநாட்டினரும் தமிழ் திரைப்படங்களில் முதலீடு செய்ய ஆரம்பத்திற்கும் இந்த காலகட்டம் சிக்கலானது. தமிழ் திரைப்படம் மக்களின் தமிழ் வாழ்வும், கலாச்சார அம்சங்களும் கொண்ட படங்களைத் தயாரித்து முன்னோடிகளாக இருக்கும் பதினாறு வயதினிலே முதல் சேது வரையிலான சிறு தயாரிப்பாளர்கள் வரும் வாய்ப்புகள் அடைபட்டு போகும் துர்ப்பாக்கியங்கள் பன்னாட்டு நிறுவன முதலீட்டு முயற்சியில் உள்ளன. சுப்ரபாரதிமணியனின் "சாயத்திரை", "தேனீர் இடைவேளை" போன்ற நாவல்கள் முன்பே ஆங்கிலத்தில் வெளியாகி உள்ளன என்பது ஆரோக்கியமான விசயம்.

எனக்கு ஆர்குட் இணைய தளத்தில் அறிமுகமானவர் சுப்ரபாரதிமணியன்.இணைய தளம் போன்றவற்றில் எழுத்தாளர்கள் இயங்குவதும்,இலக்கியம் குறித்தும், திரைப்படத்துறை குறித்தும் விவாதிப்பது இன்றைய எழுத்தாளர்களுக்கு மிகவும் தேவையானது.

வாசிப்பதில் அக்கறை கொண்ட நான் சுந்தரராமசாமியின் நாவலொன்றை படமாக்குகிற ஆசையில் ஆரம்ப கட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன். அசோகமித்திரன் , பிரபஞ்சன் போன்றவர்களின் படைப்புகளும் திரைப்படமாகும் நேர்த்தி பெற்றவை. காலம் அதற்கு உதவி புரிய வேண்டும்.

நான் என்னுடைய கதைக்கு பொருத்தமானவர்களை தேர்வு செய்கிறேனே தவிர கதாநாயகர்களுக்குத் தகுந்த மாதிரி கதை அமைப்பதில்லை.

இப்போதுள்ள கதாநாயகர்களிட்மும், தயாரிப்பாளர்களிடமும் படத்தில் நீங்கள் ஒரு டாக்டராக வருகிறீர்கள் அல்லது பொறியாளராக வருகிறீர்கள் என்று சொன்னால் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள். ஆனால் ஒரு ரவுடியாக வருகிறீர்கள் என்று சொன்னால் உடனே கதையைக் கேட்பார்கள் இப்போது ரசிகர்கள் இதைத் தான் விரும்புகிறார்கள் அதற்குத் தகுந்தமாதிரிதான் படத்தின் பெயர்களும் பொறுக்கி, பொல்லாதவன், கெட்டவன் என்று உள்ளன. இதற்கு ரசிகர்கள்தான் காரணம்.

தமிழில் நிறைய நல்ல படங்கள் வரும் போது நாமும் ஒரு இயக்குனராக இருக்கிறோமே என கூச்சமாக இருக்கும். என்னுடைய லட்சியம் நல்ல படம் தர வேண்டும் என்பதுதான். ஆனால் அதற்குப் பொருளாதாரம் வேண்டும் அதனால் இப்போது சம்பாதித்து விட்டு புதுமுகங்களை வைத்து நல்ல படங்களை எடுப்பேன். மலையாளத்தில் மட்டும் நல்ல படங்கள் வருகின்றன என்று சொல்ல முடியாது. தமிழிலும் மிக நல்ல படங்கள் சமீபத்தில் வந்திருக்கின்றன..

நல்ல படங்கள் வரவேண்டுமென்றால் பார்வையாளராகிய நீங்கள் மோசமான படங்களை நிராகரிக்க வேண்டும். நீங்கள் உங்கள் பார்வையை மாற்றும் போதுதான் நாங்கள் மாறுவோம்..

எல்லோரும் திருப்பூர் என்றால் 10,000 கோடி ரூபாய் அந்நிய செலவாணி தரும் நகரம் என்றுதான் நினைக்கிறார்கள் .ஆனால் அதற்கு வேறு பார்வை உண்டு. பனியனுக்குத் தேவையான அதிநவீன இயந்திரங்களை எல்லாம் தயாரிக்க முடிந்த வெளிநாட்டினரால் பனியனை ஏன் தயாரிக்க முடியவில்லை.அங்கு பனியன் தயாரித்தால் சாயக்கழிவுகளால் அவர்கள் நாட்டில் சுற்றுச்சூழல் சீர்கேடு இருக்கும். சுகாதாரக் கேடு இருக்கும். இதை மனதில் வைத்துக் கொண்டு திருப்பூர் போன்ற நகரங்களைக் குப்பைகூடையாக்கிக் கொண்டுருக்கின்றனர்..திருப்பூரைப் பற்றி நான் ஒரு படம் எடுக்கும் போது இதையெல்லாம் என் படத்தில் கவனத்தில் எடுத்துக் கொள்வேன்.. சமூக மனிதனை எனது கதாநாயகனாகக் கொள்வேன். அவன் சமூகத்தில் இருந்து அந்நியனானவனாக இருக்கமாட்டான்..

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60711086&format=html